கள்ளமில்லா குழந்தைகள் !!!



அவர்கள் எப்போதும், ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதில் என்றுமே விருப்பம் கொள்வது இல்லை; அவர்களுக்கு எதாவது புதுசு புதுசாக செய்யணும். அரைச்ச மாவையே அரைச்சா, 'நீ சுத்த போர்' அப்டின்னு பளிச்சுன்னு சொல்லிட்டு போய்டுவாங்க.

அதிலும் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்களுக்கு எதையும் கிரகிக்கும் சக்தி அதிகம். உதாரணத்திற்கு, தாயானவள் தந்தையை காட்டி, 'அப்பா பாரு' என்றவுடன், குழந்தை உடனே கிரகித்து கொள்ளும். என்ன கொடுமை என்றால், இப்போது எல்லாம் உறவுகளை தொலைக்காட்சியில் தெரிந்து கொள்கின்றார்கள் 'மனைவி', 'சித்தி' எனவாக சீரியலில்.
தாயும் தந்தையும் வேலைக்கு போவோராக இருந்தால் கேள்வியே வேண்டாம். ஒரு வீடியோ கேம் பார்ட்னெர் கிடைத்து விடும. பணம் புரட்டுவதை காரணமாய் கொண்டு குழந்தையின் குணத்தில் கவனம் சிதறாமல் பார்த்து கொள்ளுவது பெற்றோரின் கடமை.

அவர்கள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு என்ன சொல்லுவது என்று சில நேரங்களில் தெரியாது. அதற்கு நாம் தான் தகுந்த வயதிற்கு ஏற்ற விளக்கங்கள் கொடுக்க வேண்டும்.மிக மிக சிறு வயது சிறுவன் கேட்கின்றான், 'அப்பா குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு எப்படிப்பா வந்தா?'
அப்பா, 'நம்ம குட்டி பாப்பா ரொம்ப குட்டியோண்டா இருக்கால்ல?'
சிறுவன், 'ம்... ஆமாம் ....'.
'அவளால நடக்க முடியுமா ?'
'முடியாது .......'.
'அதனால அம்மாவும் நானும் தூக்கிகிட்டு இந்த வீட்டு வாசப்படி வழியா வந்தோம்' அப்டின்னார்.
'ம்ம் சரிப்பா .. குட்டி பாப்பா அழகா இருக்கா .. நான் கிட்ட போனா சிரிக்கிறா...'.
'குட்டி பாப்பாவும் cute தான்... நீயும் cute தான்'.
சிறுவன், 'ஹைய்யா ...... !!'.

சற்றே வளர்ந்த சிறுவனாக இருந்தால், 'அம்மா தங்கச்சி எப்டிம்மா வந்தா?'
அம்மா, 'நீ முன்னாடி சின்ன பையனா இருந்தியா?'
சிறுவன், 'ஆமாம்'.
'இப்போ நீ வளர்ந்து கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டல்ல?'
'ம்ம் அப்டியா நான் வளர்ந்துடனா .......?'
'ம்ம்ம்ம் ஆமாம்டா கண்ணா, முன்னாடி நீனும் தங்கச்சி மாதிரி குட்டியோண்டா இருந்த, இப்போ பாரு நீயே பாத்ரூம் போற, டிரஸ் போட்டுக்கற, சாப்ட்ற'.
 'ம்ம் ஆமாம்'.
'நானும் அப்பாவும் உன்ன பார்த்து கிட்டோம். இப்ப நீ, நான், அப்பா எல்லோரும் சேர்ந்து குட்டி பாப்பாவ பார்த்துக்கலாம்னு, உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வந்திருக்கா'.
'ம் அப்டியா சேரி நானும் தங்கச்சி பாப்பாவை பார்த்துகிறேன். பாப்பாவுக்கு முத்தாய் தரலாமா?'

இப்படி எல்லாம் சொன்னவுடன் ஏற்று கொள்ளும் குழந்தையாக இருக்க வேண்டும் என்றால் குழந்தைகளை, ஆம்படையாள் டெலிவரியின் போது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூடாது. இல்லை என்றால், குழந்தை அதன் வயதிற்கு கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்கும். இதெல்லாம் தேவையா.இதற்கு மேலும் அவர்கள் தெரிந்து கொள்ள தான் வேண்டும் என்று நாம் ஒற்றை காலில் நின்றால், வேண்டுமானால் +2 ஸ்டேட் போர்டு பையாலாஜி புத்தகம் வாங்கி கொடுக்கலாம். சற்றே பண விருத்தி இருந்தால், X CBSE சயின்ஸ் புத்தகம் வாங்கி கொடுக்கலாம்.'என்ன கொடுமை சார் இது?' ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா சார்?

குழந்தைகளுக்கு வார்த்தை மேல் மிகுந்த பிரியம். சிறிது சிறுதாக எழுத்துக்களில் இருந்து அவர்கள் வார்த்தை தெரிந்து கொள்ளும் லாவகமே தனி தான்.சில நேரங்களில் ஒரு வார்த்தை தெரியும். அதில் இருந்து வரும் மறு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. ஆனாலும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதற்காக அவர்கள் பிரயத்தனம் படுவார்கள்.

ஒரு தாய், சிறு குழந்தையை கையில் வைத்து கொண்டு, அச்சிறு குழந்தையின் அண்ணனிடம்,'தம்பி போய் ரூம்ல இருந்து பீரோவ்ல tissue பேப்பர் எடுத்து வா'. அச்சிறுவன் செல்கின்றான் யோசித்து கொண்டே. ரூம் தெரியும், பீரோல் தெரியும், பேப்பர் தெரியும் அது என்ன tissue.அவனுக்கு பிடி படவில்லை. முயற்சியையும் விடவில்லை. இருந்தாலும் ரூமிற்கு வந்து பீரோவில் உள்ள சில செவ்வக வடிவ காகிதங்களை அள்ளி கொண்டு வந்து தாயாரிடம் கொடுக்கிறான்.

அவன் தாயாருக்கு அவனை திட்டுவதா ? சிரிப்பதா ?  என்று தெரிய வில்லை.'அப்பனுக்கு புள்ள தப்பாம தான் பொறந்திருக்க, அப்பா காச கரியாக்குராறு, புள்ள கழுவ யூஸ் பண்ண போறீங்களோ ' என குழந்தையை வாஞ்சையுடன் இழுத்து கொஞ்சி, சிறுவன் கையில் உள்ள 'பணத்தை' வாங்கி மடித்து பத்திரமாக வைத்து கொள்கின்றாள்.காந்தி, புளங்காகிதம் அடைந்து குழந்தை போல் சிரிக்கின்றார், மடிந்த நோட்டில்.

'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாடு கேட்குதா' என்ற பிடித்த இளையராஜா பாடலாகட்டும், அல்லது 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற இனிய பழைய பாடல் ஆகட்டும். இவை எல்லாம் நமக்கு பிடித்து இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ள படும், குழந்தை குழருவதை கேட்டால்.ஏனெனில்,
     குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் 
     மழலை சொல் கேளா தவர்

அவர்களுக்கு இருக்கும் இன்னொரு வரப் பிரசாதம், பொய் சொல்லத் தெரியாது. பொய் சொல்வதை பெரியவர்களிடம் இருந்து தான் தெரிந்து தெரிந்து கொள்கின்றார்கள். அதையும் சில நேரங்களில் எப்படி சொல்வது என்று தெரியாது.இப்படித்தான், ஒரு தாயும் தந்தையும் வெளியே புறப்பட கிளம்பி கொண்டு இருந்தார்கள்.ஹாலில் செல்போன் ரிங்குகிறது.அந்த சிறுவன் செல்போனை எடுத்து,
'அலோ' என்றான்.......................................................
சிறிது இடைவெளிக்கு பிறகு.'அப்பா ஷாப்பிங் கெளம்பிட்டு இருக்காங்க' என்றான். ......................................................
மீண்டும் சிறிது இடைவெளிக்கு பிறகு.'அப்பா வந்த வுடன் கால் பண்ண சொல்றேன் அங்கிள்',.......................சிறிது இடைவெளி.
'தெர்யாது அங்கிள்' .........இடைவெளி
'ம் சேரி அங்கிள்'.
சிறிது நேரம் கழித்து அப்பா வருகின்றார், 'யாருடா போன்-ல'?
சிறுவன், 'உங்க ஆபீஸ்ல இருந்து ஒரு அங்கிள் பண்ணினாங்க.'
அப்பா நினைத்து கொள்கின்றார், என்னது ஆபிசா ? .... 'என்னடா கேட்டாங்க?'
பையன், 'நீங்க எங்கன்னு கேட்டாங்க'.
அப்பா 'நீ என்ன சொன்ன?'.
பையன், 'நீங்க ஷாப்பிங் கிளம்பிட்டு இருக்கீங்க அப்டினேன்.'
அப்பாவுக்கு பதற்றம் அதிகம் ஆகி விட்டது, 'அப்புறம் என்ன கேட்டாங்க?'.
பையன் 'நாளைக்கு ஆபிஸ் வருவீங்களான்னு கேட்டாங்க, நான் தெரியாது அங்கிள் அப்டினுட்டேன்'.
அப்பா நினைத்து கொள்கின்றார், ஹ்ம்ம். கெட்டது குடி. Planned Sick Leave-kku ஆப்பா....
சிறுவனை திட்டவும் முடியாமல் குட்டவும் முடியாமல் நிற்கின்றார்.

குழந்தைகள் முன் தான் நாம் மிகவும் மரியாதையுடனும் பய பக்தியோடு நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் முன், கணவன் மனைவி பரஸ்பரம் அன்பு காட்டலாம். ஆனாலும் எக்காரணம் கொண்டும் காதல் காட்டுவது தகாது. சொல்ல போனால், பெரியவர் முன்னும் அப்படி நடந்து கொள்ள கூடாது, அது பெரியவர்களை அவமதிப்பது போல். இல்லை என்றால், பின்னொரு நாளில், குழந்தை தொலைகாட்சி பார்க்கையில், 'அம்மாவும் அப்பாவும் இப்படித்தான்' என்று மானத்தை வாங்கி விட கூடாதல்லவா.

பின் குழந்தைகளுக்கு உண்மையையை மறைக்க சொல்லி தர வேண்டி இருக்கும். இதுவும் தேவை தானா.இப்படித்தான், ஒரு வீட்டில்,காலிங் பெல் அடிக்கிறது. அந்த தந்தை வியூ பைண்டேர் வழியாக பார்க்கின்றார்.'ஐயையோ, அருவ பேச்சு ஆசாமி வந்துட்டாரே' என திரும்பி, 'நான் ரூமுக்குள்ள போய்டறேன். அவர்கிட்ட நான் வெளில போயிருக்கேன்னு சொல்லி அனுப்புடி. அவர் போன வுடன் வந்து என்ன கூப்பிடு.' என்று கூறி கொண்டே உள்ளே செல்கின்றார்.'சரிங்க நீங்க போங்க'கதவு திறக்க படுகின்றது,
'சார் இருக்காங்களா ?'.
'இல்லைங்களே வெளில போயிருக்காங்க'.
'அப்டியா, சார் வந்தா வந்துட்டு போனதா சொல்லுங்க. ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குங்களா ?'
அந்த அம்மணி உள்ளே செல்கின்றார், தண்ணீர் கொண்டு வர.இதை எல்லாம் கவனித்து கொண்டு அங்கே நிற்கும் சிறுவனை பார்த்து, 'ஹாய் குட்டி பையா. ஹொவ் ஆர் யு?'
'பைன் அங்கிள்'
'அப்பா எப்பப்பா வருவாங்க?'
குழந்தை ஒன்னும் தெரியாம 'அம்மா கூப்பிடவுடன் அங்கிள்'.
இதை கேட்டவுடன் புரிந்து கொண்டவராய் இருந்தால் அதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டார்.இல்லை மேலும் பேசி புண் ஆக்கி கொள்வது என்று தீர்மானமாய் இருந்து, அவர் மேலும், 'அம்மா எப்போ கூப்டுவாங்க?' என்று கேட்டால்,
'நீங்க போனவுடன் அங்கிள்' !!
வாழ்க கள்ளமில்லா குழந்தைகள் !!!

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்