இளைஞர் அறை !!



இந்தியாவில் இத்தனை கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள்; அத்தனை கோடி இளைஞர் இருக்கிறார்கள் என்று கூறுகின்றீர்கள்.
இந்தியாவின் வளர்ச்சி இந்த இளைஞர்களை நம்பித்தான் இருக்கின்றதாம்.

எங்களை நம்பி தான் இந்தியா வளருமாம்; வளரட்டும். அதனால் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களும் வளரும்; நல்லது.
எங்களால் வளர்ந்த குடும்பங்கள், எங்களுக்கு வாடகைக்கு வீடு மட்டும் கொடுக்க மாட்டார்களாம். என்ன நியாயம் இது?

என் நண்பன் ஒருவன், சற்று 'முணுக்' என்று கோவப் படுவான். அவன், வடபழனியில் ஒரு வீட்டிற்க்கு சென்று வாடகைக்கு பார்க்க சென்றான். வீட்டுக்காரர், 'இல்லைப்பா பேமிலி-க்கு தான்ப்பா வீடு' அப்டீன்னார்.அவன் உடனே, கடுப்பாக, 'சாரி சார் ! நானும் பேமிலி இருக்குற வீட்ல தான் வாடகைக்கு தங்கலாம்ன்னு இருக்கேன்' அப்டின்னுட்டு வந்துட்டான்.

பேச்சிலர் எல்லாம் என்ன சுயம்பு லிங்கம் மாதிரி தானாவா வந்தாங்க?அவங்களும் பேமிலி மூலியமா தான வந்தாங்க? அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றார்களோ? தெரியவில்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு,   ஏதாவது ஒரு மூலையில் வீடு கிடைத்து விட்டால் போதும்; அப்புறம் பேச்சிலருக்கு கொண்டாட்டம் தான்!
பேச்சிலர் ரூமில் பல வகை இருக்கிறது;அதில் ஒரு வகை தான் 'வேடந்தாங்கல்' ரூம். அது என்ன வென்றால், அந்த ரூமில் மாறி மாறி ஆட்கள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருப்பார்கள். அப்டிப்பட்ட ரூமில், ரூமுக்கு வந்தாலே, 'ஹாய்' 'ஹலோ' 'நைஸ் மீட்டிங் யூ' என்று கூறியே பல காலம் ஓடி விடும்.

சில நேரங்களில், நாம் மட்டும் தான் முட்டாள்தனமா இதே ரூம்ல ரொம்ப நாளா இருக்கோமோ ? அப்படின்னு தோணும்.

ஒரு சிலர் ரூமுக்கு வரும் போது, தன்னை பற்றி மிகவும் பிரஸ்தாபித்து கொள்ளுவார்.
அவர் கூறும் போது, 'நான் வாரத்துக்கு ஒரு தடவை தான் தண்ணி அடிப்பேன். அதனால ஒன்னும் பிரச்சினை இல்லைல்ல பாஸ்' என்பார்.
நாமும், 'அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை பாஸ்' என்போம்.
பிறகு அவர் ரூமுக்கு வந்தவுடன் தான் தெரியும், பாஸ்-க்கு கணக்கு வீக் போல? நமக்கு எல்லாம் வாரத்துக்கு ஏழு நாள், பாஸ்-க்கு ஒரு வாரத்தில் ஒரு நாள் தான்!
இது தொடர்ந்து கொண்டு இருக்கும் சிறிது நாளில், இன்னொருவன் வருவான். பாஸ்-இன் நண்பன். அவர் சொல்லுவார் 'பாஸ் இந்த ராத்திரியிலேல்லாம் தண்ணி அடிக்கிற பழக்கம் எல்லாம் நமக்கு இல்ல சார். ஒன்னும் கவலையே படாதீங்க'.
அப்பவே லைட்டா புளிய கரைக்கும். மனதிற்குள்ளாக, அடேய் உன் நண்பனுக்கு ஒரு வாரம் என்பது ஒரு நாள். நீ நைட்-ல தண்ணி அடிக்க மாட்டேன்கிற, ஒரு நாளைக்கு ராத்திரி போக இன்னும் காலை, மதியம் , மாலை வேளை எல்லாம் இருக்கே ! அதெல்லாம் என்ன செய்வதாய் உத்தேசம்?


இதெல்லாம் தாண்டி, காலையில் கண் விழிக்கும் போது, கண்ணில் படும் பாட்டில்-கள், நாம் பார்க்கும் கிழக்கு திசையையோ அல்லது நாம் தொழுகும் மெக்கா திசையிலோ இருந்தால் மனதிற்கு சிறிது மனக்கஷ்டம் தான் .

சில நேரங்களில் நல்ல களைப்புடன் வந்து இரவு படுத்திருப்போம். திடீர்னு அதிகாலையில் தூக்கம் களைவது போல் இருக்கும்.கண்களை லேசாக விழித்து பார்த்தால் நம்மையே நம்ப முடியாது. நம்மை சுற்றி ஒரே புகை மூட்டமா இருக்கும். ஏதோ நம் உயிரே நம்மை விட்டு பிரிவது மாதிரி இருக்கும். தூங்கி கொண்டு இருக்கும் போது உயிர் போனால் மிகுந்த பாக்கியம் என்பார்களே. அந்த புண்ணியம் தான் நமக்கு கிடைக்க போகின்றதோ, என்று அந்த புகை மூட்டதிற்கு இடையில் சிந்தனை வரும்.
இன்னும் சற்று நேரத்தில் சித்திர குப்தன் வருவாரோ, என்று எண்ணி கொண்டே முழுமையாய் நினைவு திரும்பும் போது, நம் கண் எதிரே பாஸ் MARLBORO வுடன் மல்லாக்க படுத்துக்கொண்டு, புகையை வாயில் இருந்து வெளியே விட்டு கொண்டே நம்மைப் பார்ப்பார். இவற்றின் மூலம் பாசிவ் ஸ்மோகிங்கில் சித்திர குப்தனை சீக்கிரம் சந்திக்க போவது என்னமோ உறுதி. இப்படி பாசிவ் ஸ்மோகிங் மக்களிடம் இருந்து தப்பி வந்தோமேயானால், நாம் இன்னும் சிறிது காலம், கூடுதலாய் இந்த பூமிக்கு பாரமாய் இருக்கலாம்.

இவை இல்லாமல் இவர்கள் ரூம் காலி செய்து போன பிறகே தெரியும், 'ஆச்சி மெஸ்சுல' நாமளே இது வரை அக்கௌன்ட் வச்சது இல்லை, இவங்க நம்ம பேரில் அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருக்காங்கன்னு.

நம் நண்பன் ஒருவர் இது வரை புகை பிடித்ததே இல்லை. அவனிடம், ஏன் நீ தம் பிடித்ததே இல்லை? ஒரு தடவை கூட தம் அடித்ததிலையா ? என்று கேட்டால்.
'நான் தம் அடித்திருக்கிறேனா? என்று கேட்கின்றாய். கேள், யார் வேண்டாம் என்றது.
நீ கேட்கலாம், ஏனெனில் நீ என் நண்பன். ஆகையால் நானும் உன் நண்பன். நண்பனுக்கு நண்பன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.
நீ இதை என்னிடம் கேட்க கூடாது ? என்று கூற மாட்டேன், ஏனென்றால், அதை இப்போது தான் நீ கேட்டே விட்டாய். இனியும் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை'
என்று பேசிக்கிட்டே அவன் மேலும் கூறினான்.
'ஒரு நாள், ஆத்து மேல உள்ள பாலத்தில் மேல உள்ள கட்டை மேல், சர்க்கஸ் கோமாளி போல நடந்து போனேன். அப்போ தவறி ஆத்துல தண்ணில விழுந்துட்டேன். தண்ணியில் விழுந்த நான் ரொம்ப நேரம் இழுத்து தம் பிடிச்சி தண்ணிக்கு வெளியில் வர வேண்டி இருந்திச்சு. அப்புறம் யாரோ வந்து என்ன காப்பாதினாங்க. அன்றைய தேதியில் இருந்து இனி வாழ்கையில் தம் பிடிக்கும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன்' அப்டின்னான்.
நான் , 'அது சரி தம் பிடிக்காம இருக்க வேற என்னவெல்லாம் செய்கிற இப்போ' என்றேன்.
அதற்கு அவன், 'இப்பல்லாம் பாலத்து நடுவில தான் போறேன்'-ன்னான்.

அதைக் கூட விடுங்க, வீடு வாடகைக்கு கிடைக்கும், அப்டின்னு பேப்பரில் விளம்பரம் கொடுக்கும் போது அது பாமிலி-க்கா ? இல்ல பேச்சிலருக்கா ? என்று தெளிவாகவும் கொடுக்க மாட்டார்கள். அப்பிடி கொடுத்தால் விளம்பரத்தில் ஒரு வரி அதிகமா போயிடுமாம். அதுக்கு காசு நீங்களோ கொடுப்பீங்க.
சமீபத்தில், ஒரு நாளிதழில் வீடு வாடகைக்கு விளம்பரம் பார்த்து, அதில் இருக்கும் போன் நம்பர்-க்கு போன் பண்ணினால், மறு முனையில் ஒரு பெண் மதுரமான குரலில் பேசினாள்.பேச்சிலர் என்பதால், 'மதுரம்' என்று நாம் குறிப்பிட முடிகின்றது. இதுவே திருமணமானவர் ஆக இருந்திருந்து, இந்த மதுரம், சதுரம் அப்டின்னு எல்லாம் சொன்னா அவ்ளோதான், அப்புறம் வீட்டில் வெளக்கமாறுதான் அபிநயம் பிடிக்கும்.
அந்த பெண், அவள் வீட்டில் உள்ள வசதிகளையும் வாடகையையும் கூறினாள்.
பின், ஊர் பேர் கேட்டு தெரிந்து கொண்டு, ஏதோ சந்தேகம் வந்தவளாய் 'நீங்க பேச்சிலரா ?' என்று கேட்டாள்.
நான் 'ஆமாங்க'.
அவள், 'பேச்சிலருக்கு வீடு இல்லைங்க, ஒன்லி பாமிலி'
நான் கேட்டேன், 'நீங்க பேச்சிலரா?'
அவள், 'ஆமாம்'
நான், 'அப்புறம் என்னங்க பிரச்சினை?', என்றேன்.
மறுமுனையில் டெலிபோன் 'டொக்' என வைக்கப்பட்டு விட்டது.
அந்த பெண் என்ன நினைத்து கொண்டாளோ நமக்கு தெரியாது.

கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பாமிலி மேனாக பார்த்து, அவள் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைக்க, எல்லாம் வல்ல எல்லா இறைவனியும் வேண்டுகின்றோம் !!!!

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்