அகராதியில் உழைப்பு என்று தேடிப் பார்த்தால் அதில் பல அர்த்தங்கள் இருக்கலாம்; ஆனாலும் நிஜத்தில் நம் கண் முன் பார்க்கும் ஒரு ஒப்பற்ற தலைவர் கலைஞர். அவர், உழைப்பிற்கு உருவம் தந்த தலைவர்.
சூரியனும், அவர் எழுந்தவுடன் தான் உதயமாகும். அவருடைய உழைப்பிற்கு ஈடு இணை இந்த தமிழகத்தில் எந்த இளைஞனாலும் கூட இயலாது.
இந்த 85 வயதிலும், முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். எங்கோ எதிலோ படித்தது, ஒரு மனிதன் தோல்வி அடைய பல காரணம் இருக்கலாம். அனால் ஒரு மனிதன் ஜெயிக்க ஒரு காரணம் தான் இருக்க முடியும் 'உழைப்பு'.
கலைஞருக்கு உழைக்க வில்லை என்றால் தான் களைப்பு வரும்;
உழைத்தால் தான் களிப்பு வரும். அவருடைய உதவியாளர்கள் திணறித்தான் போவார்கள் அவருடன் பணி புரிவதற்கு. பல முறை சட்ட சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். ஐந்தாம் முறையாய் முதல்வராய் இருக்கிறார். தமிழை இரண்டாம் தர மொழியாக்கி விடுவார்களோ என்று எண்ணி பயந்து, பெரியார், அண்ணா வழியில் இந்தியை தமிழகத்தில் எதிர்த்தது என அவர் கலந்து கொண்ட போராட்டங்கள் கணக்கில் அடங்கா.
இப்போதும் அறுவை சிகிச்சைக்கு பின் சக்கர நாற்காலியில் போகும் போது அவர் எண்ணம் எதுவாக இருக்கும் என்று எண்ணி பார்த்தால், ' அப்பாடா இவ்வளவு நாள், மனம் சிந்திக்கும் வேகத்திற்கு நடக்க முடியாம இருந்திச்சு. இப்போது வேகமாய் நகர்ந்து பல வேலைகள் செய்யலாம். பல அதிகாரியை வேலை வாங்கலாம்' என்றுதான் எண்ணி இருக்கும்.
தமிழகத்தின் வரலாற்றை முழுமையாய் அறிந்த இரண்டு நபர்கள் இப்போது உள்ளார்கள் எனின் அவர்கள் கி வீரமணியும், கலைஞர் என்றும் தான் மூத்த தலைவர்களும் கூறுகின்றனர்.
கலைஞருக்கு, தமிழ் மேல் கொள்ளை ஆசை; ஆதலாலே தமிழ் கவிஞர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றார்கள். கவிஞர் வைரமுத்துவிற்கு தினம் ஒரு முறையாவது கலைஞரிடம் தொலைப்பேசியில் பேசி விட வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் திருப்தி. தமிழ் தமிழிடம் பேசுவது தித்திக்காமலா இருக்கும்.
கலைஞருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரின் நகைச்சுவை திறன் நிருபர்களிடம் மிக பிரசித்தம்.
திருவாரூரில் திருக்குவளை எனும் சிறு கிராமத்தில் பிறந்து, தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளுள் ஒன்றான தி.மு.க வின் தலைவராகவும் , தமிழகத்தின் முதல்வராயும் இருப்பதால், அவர் யாராலும் எதையும் சாதிக்க முடியும் , 'உழைப்பு இருந்தால்', என்பதை நிரூபித்து இருக்கிறார்.
கலைஞர் கவியரங்கம் என்றால் ஒரே குதூகலம் தான். காண கண்கள் இரண்டும் கூட தேவை இல்லை. ஆனால் கேட்டு மகிழ இரண்டு காதுகள் கூட போதாது. இரண்டாயிரம் காதுகளாவது தேவைப்படும். அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை, மேடைகளில் அவர் கடைசியாகத்தான் பேசுவார். அவர் முன்னமே பேசினால், கூட்டம் களைந்து விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு.
அவர் எழுதிய தமிழ் திரைப்பட வசனங்களை,நம்மால் எழுதி வைத்து எழுத்து கூட்டியும் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்ன உணர்ச்சி மிகுந்த எழுத்துக்கள். பராசக்தி நீதிமன்ற வசனம் 'ஓடினேன் ஓடினேன்' ஆகட்டும் , மனோகரா வசனம் ஆகட்டும். இவை என்றும் அவர் பெயரை சொல்லும்.
எவ்வளவோ தமிழ் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அதிலும் குறளோவியம், அவர் திருக்குறளை கதையுடன் கூறும் விதம் அற்புதம். அவரின் எழுத்து பாணியே தனிதான்.
அவருக்கு குடும்பம் பெரியது தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் என்றாவது செய்தித்தாளிலோ, செவி வழியாகவோ கலைஞர் அடிக்கடி குடும்பத்துடன் குன்னூரில் ஓய்வு எடுக்கிறார் என்றோ, ஊட்டியை ஊர் சுற்ற போய் உள்ளார் என்றோ கேட்டிருப்போமா? குடும்பத்துடன் இருக்கும் நேரத்தை காட்டிலும் கழகத்திற்குத்தான் அதிக நேரம் உழைத்திருப்பார்.
முப்பால் தந்த வள்ளுவனுக்கு முக்கூடல் சங்கமத்தில் சிலை எழுப்பினார். அலைகள் இவ்வளவு நாளாய் கரையை இடித்தன, இப்போது தமிழை இடித்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு அலையும், நான் நீ என்று போட்டி போட்டு கொள்கின்றன, 'நான் இடிப்பேன்' 'நீ இடிப்பாய்' என்று. தமிழை இடிப்பதால் இனித்து விடுவோம் என்று என்னிக்கொள்கின்றன போலும்.
இதைப் பார்த்து, வள்ளுவர் கூறுகின்றார், 'அலைகளே என்னை இடிப்பதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் வரம் பெற்றீர்கள். இப்போது கன்னியாக்குமரியில் இருந்து நகர்ந்து சென்னை செல்லுங்கள். அங்கு, என்னை சிலையாய் எழுப்பியவன் இருக்கிறான். அவனின் தலைவன் அண்ணா, கடற்கரையில் உறங்கி கொண்டு இருக்கிறான். போய் அவனை, இயன்றால் எழுப்புங்கள். அப்படி செய்தீர்களேயானால் தமிழ்க்கடல் கலைஞன் கொண்டு வந்த கடல் நீரை நன்னீராக்கும் பணியில் நீங்கள் இனிப்படைவீர்கள். உம் வரமும் நிறைவேறும்'.
அண்ணாவின் கனவு, இரண்டு அரையணாவுக்கு ஒரு கிலோ அரிசி. இதை அண்ணா நூற்றாண்டில் நிறைவேற்றி உள்ளார்.
சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற எண்ணற்ற நல்ல திட்டங்கள் கொண்டு வந்தவர்.
யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்னும் உத்தி அறிந்தவர், வள்ளுவன் மொழியில் சொல்லுவதாய் இருந்தால்,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன் கண் விடல்.
வாழ்க நூறாண்டுகள்; உங்களுக்கும் ஓய்வு தேவை; வழிவிடுங்கள் இளைஞர்களுக்கு; அருகில் இருந்து வழி காட்டுங்கள்.
இந்தி எதிர்ப்பு, இரு மனைவி, இலவசங்கள், குடும்ப அரசியல் இவைவிடுத்து கலைஞரை பார்த்தால் அவர் ஒரு தமிழ் இன தலைவர் தான்.
இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
ஹரீஷ்
2 comments:
Ithu vancha pugalchi aniya harish.. romba mela thooki thadalnu keela thalliteengale.. pavam vayasanavar
கலைஞரை பற்றி 5 ஆண்டுகள் முன்னால் எழுதிய கட்டுரை. அப்போது, நான் நட்டு நடு செண்டர் :) :) ...
இதில், அன்றைய என் கருத்தோடு இன்றறைய கருத்து மாறுபடுகிறது.
- இந்தி எதிர்ப்பு - கலைஞரின் சாதனை
- இரு மனைவி - என்பது ஒருவரின் personal life.
- இலவசங்கள் - அனைவருக்கும் தேவையில்லை. It needs to be there only for needy people.
- குடும்ப அரசியல் - ஸ்டாலின் இந்த வட்டத்தில் இல்லை.
- திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
Post a Comment