பாட்டி !!!



சௌந்தர்யவதி! ஆனாலும் துர்பாக்கியசாலி! அவள், சிறு வயதிலேயே தன் குங்குமம் பறி கொடுத்தவள்.

அவள் கூறிய கதைகளும், காட்டிய அன்பும், ஆட்டிய தூளியும்; இனி நான் எங்கேப் பெற முடியும்?

அவ்வப்போது வந்து, " ந்தா... காசு கொடு " ன்னு கேட்டு வாங்கிக்குவா. நான், புன்னகையோடும் மரியாதையோடும், அவளுக்கு, கையில் இருப்பதைத் தருவேன். எனக்கு தெரியும்; அவள் சேர்க்கும் பணம் என் அண்ணன் திருமணத்திற்கு அவள் தாலி வாங்கி தரணும்ன்னு ஆசைப் படுறது.

அவளுக்கு, எவ்வளவோ ஆசைகள் இருக்கும், இருந்து கொண்டும் இருக்கும். ஆனாலும், அவற்றை எப்போதாவது யாரிடமாவது சொல்லியிருப்பாளா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனாலும், அவள் ஆசை இன்னதென்று தெரிந்து விட்டால் அதை அவளுக்கு சொல்லாமலே செய்வதில் ஒரு பேரானந்தம் இருக்கும்!

அவள் கேட்கறது கோயிலுக்காக இருக்கும்; அவளுக்கு இருக்காது. என்னதான் கோயிலுக்கு பணம் தருவது எனக்கு அவ்வளவாக உடன் பாடு இல்லை என்றாலும், கடவுள் சிலைகள் மேல் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்றாலும், அவள் கேட்டால் கொடுத்து விடுவேன். கடவுளே கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா!

உலகில் நான் மதிக்கும் மிகப் பெரிய பெண், பாட்டி.

அவள் ஆக்கும் அமுது அமுதம். ராத்திரியில் வெளில நான் சாப்பிடக் கூடாது, வீட்டில் வந்து சாபிடனும்ன்னு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் இயக்க கற்றுக் கொண்டவள்.

நாங்கள் விருப்பப்பட்டோம் என்பதற்காகவே 'அறிவொளி' இயக்கத்தில் 'அ', 'ஆ' கற்று கொண்டு அவள் பெயரை எழுத பழகினாள். அவ என்ன கம்ப ராமாயணமா படிக்கப் போறா?

அவள், கிராமத்திலும் சிற்றூரிலும், தினமும் வெள்ளந்தியான மனிதர்களைப் பார்த்து பேசி வந்தவள்; அதுவே அவளுக்கும் பிடிக்கும். இப்போதோ, நகரத்தில் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொண்டு இருக்கிறாள். ஏனெனில், நானும் என் அண்ணனும் நகரத்தில் இருக்கின்றோம், என்ற ஒரே காரணத்தினால், அவள் இந்த நகரம் என்னும் நரகத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.
வள்ளுவன் வாக்கில் சொல்வதாய் இருந்தால்
      அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

      பிறன் போலே நோக்கப் படும்.

பணம் இல்லை என்றால் பெற்ற தாயாலும் கூட பிறர் போல பார்க்க படுவார் என்கின்றார் வள்ளுவர். அந்த அளவுக்கு பணம் தன் வேலை காட்டுகின்றதாம். நானோ நகரம் தாண்டி, நாடு தாண்டி, அவளைப் பார்த்து கொள்ளாமல், செய்நன்றி மறந்து பணம் புரட்ட வந்திருக்கேன். அது விதி செய்த சதி !

நகரத்தில் இருந்து, உடம்பு சரியில்லாம போச்சுன்னா வேது பிடிக்க, அந்த பச்சிலைகளை அவ எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? அது அவளுக்கு தான் வெளிச்சம்!

அவள் எதுவுமே கேட்க மாட்டாள்; அப்படி பட்டவ "ந்தா.. அந்த கஸ்தூரி என்ன ஆனான்னு தெரியல; சித்த டிவி போடு" -ங்கறா .

பாட்டி, தொலைகாட்சியில் நாடகம் பார்க்கும் போதும், "ஐயய்யோ இந்த பாவி பய இப்படி பண்றானே" என்று நடிப்பவர்களுக்காகவும் தன் இரக்கத்தை காட்டுபவள்.

அவள், அந்தக் காலத்து பெண்மணி. அவளுக்கு அகங்காரம் அசூயை என்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை; சத்தியம்... சத்தியம்... சத்தியம் ....!!! இதை அவளுடன் நான் அதிக காலம் இருந்ததினால் சொல்கிறேன்.

பல படங்களையும் பார்த்து  நான் அவ்வளவாக பிரமிப்பு அடைவதில்லை. ஆனாலும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்து மிகவும் பிரமித்து போனேன். படத்தின் பெயர் 'The Way Home'. முடிந்தால் அந்த படம் பாருங்கள். முடியலைன்னா உங்க பாட்டியையாவது பார்த்து கொள்ளுங்கள்.

நடு இரவாக இருக்கும். அவள் அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பாள். நானும் உறவினரும் வீட்டுக்கு வருவோம். தூங்கிகிட்டு இருக்கிறவ எழுந்து வருவாள். வந்து, சாப்டியான்னு கேட்டு, சாப்பிடலைன்னா சமையல் பண்ணி சாப்பாடு தருவா. இது நான் நடு ராத்திரியில் வருவதால் இல்லை, வீட்டிற்கு யார் நடு ராத்திரியில் வந்தாலும் அவர்களுக்கு இந்த உபசரிப்பு நிச்சயம்.

கோவில் போய்விட்டு வருவா. வந்தவுடன் கோவில் பிரசாதம் எல்லாத்தையும் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்து விடுவா. அவள் சாப்பிட்டாளா?என்று யாருக்கும் தெரியாது.

அவளுடைய வயதிற்கு, அவள் பார்த்த மனிதர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று நான் பிரமிப்பது உண்டு. அவளால் நாங்கள் பாக்கியம் அடைந்தோம் என்று பல முறை பலரால் அறிந்திருக்கின்றோம்.

ஒருமுறை வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்கள் பலவற்றை எடுத்து குப்பையில் போட்டு, வீட்டை சுத்த படுத்தணும்னு, பல பொருட்களை எடுத்து சென்று, தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அதில் சில பீங்கான் தட்டுகளும் அடங்கும். இதை எல்லாம் பாட்டி கவனித்து கொண்டு இருந்தாள். நான் வீட்டிற்க்கு வந்தவுடன், "பீரோவ்ல பீங்கான் தட்டு இருந்திச்சே அது எங்க?" ன்னு கேட்டா .. ...நான், "அத யாரு யூஸ் பண்றா, அதான் குப்பை தொட்டியில போட்டுட்டேன்" அப்டின்னேன்.
அவ, "அது உன் தாத்தா வாங்கியாந்தது" அப்டின்னா; அவள் கண்கள் ஈரமாவது தெரிந்தது; அப்போதும் அவள் திட்டவில்லை கோவப்படவில்லை. நான் அப்போதே திரும்பி போய் குப்பை தொட்டியிலிருந்து அந்த பீங்கான் தட்டை எடுத்து வந்து விட்டேன்.

அவள் சொல்லி இருக்கா, சின்ன வயசில என்ன இடுப்புல வச்சுக்கிட்டு, அவ ஆத்துக்கு குளிக்க வந்தாளாம். ஆத்துல நல்லா தண்ணி ஓடிகிட்டு இருந்திச்சாம். என்ன கரையில விட்டுட்டு அவ குளிச்சிட்டு வந்திருக்கா. வந்து பார்த்தா என்ன காணுமாம். அவ பதறி போயிட்டாளாம். உசிரே போச்சாம் அவளுக்கு; என்ன ஆச்சு புள்ளைக்கு-ன்னு? சுத்தி முத்தியும் பாத்தாளாம், ஒரன்டியும் அகப்படலயாம்; எங்கேயோ பக்கத்தில் 'பொளக்' 'பொளக்'ன்னு சத்தம் கேட்டிச்சாம்; கிட்ட வந்து பார்த்தா, காட்டான் மணி செடியில் தண்ணியில் கரையோரமா சிக்கிக்கிட்டு தண்ணிய குடிச்சுகிட்டு கிடந்தேனாம். "ஐயோ" அப்டீன்னு ஓடி வந்து என்ன தூக்கிட்டு வந்தாளாம். அப்புறம் தான் அவளுக்கு உசிரே வந்துச்சாம்.
எனக்கும் அப்பிடித்தான் இருக்கும்!

இப்பவும் அப்பப்ப பணம் கேட்கிறா. நானும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அடுத்த 'தாலி' வாங்க ஆரம்பமாகி விட்டாள் போல பாட்டி!

ஆயிரம் உன்டிங்கு அழகி; ஆனாலும் அவ்வாயிரமும் என் பாட்டி முன் பணிந்து தான் போக வேண்டும். பாட்டி, அந்த ஆயிரத்திற்கும் அன்பிலும், அழகிலும் அம்மாவாய் இருப்பாள்.

நான் வெளியூர் செல்லும் முன் அவளிடம் வாக்கு கொடுத்தபடி, அவளை அழைத்துக்கொண்டு கோவில் சென்றேன். அவள் கோவிலில் கூறிய ஆசிகள், என்றும் என் உள்ளங்களில் ரீங்காரமிடும். அவள் துக்கங்களை கூறி, பின் மனமார வாழ்த்துகின்றாள் "மவராசனா இரு"-ன்னு. நான் இப்போது நினைத்து கொள்கிறேன், உன் பேரனாய் இருந்து ஆண்டியாகவும் இருக்க ஆனந்தமே.

அவளை கஷ்ட படுத்துகின்றவரை-யோ, அவமரியாதை செய்பவரை-யோ, முகம் சுளிக்க வைப்பவரையோ யார் தடுத்தாலும் விடேன்.

நான் பல நேரங்களில் நினைப்பது உண்டு. பாட்டிக்கு ரகசியம் ஏதாவது மனதிற்குள்ளாகவே வைத்திருக்கிறாளா என்று. இப்போ நினைத்து பார்க்கும் போது உண்மை புரிகின்றது. அவள் பல ரகசியங்களை மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறாள் என்று. அவளை கஷ்டப் படுத்தியவரை-யும் , த்வேஷித்தவர்களை-யும் , வஞ்சித்தவர்களை-யும் வருத்தியவரையும் அவள் மற்றவரிடம் சொல்லுவதே இல்லை. எல்லாமே இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறாள். இவ்வளவுக்கு பின்னும், அவள் அவர்களை அன்புடன் அனுசரிக்கின்றாள், பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றாள் .
Paati ...... You are great !!!

ஹரீஷ்

2 comments:

Murali 17 July 2009 at 21:26  

Intha pattiyai pathi enakku konjam parichayam undu..
Paasathirku panjam illatha patti.. anbu endrum kurayatha amudhasurabi.. sirika maranthu valum ulagathil.. thaanum sirithi matravargalayum santhosa pada vaipavar..Sontham mattume than sothu endru valbavar.. acharya paduvatharkum athisayathu povatharkum aayiram kunangal ivaridam. mothathil GREAT enbathu romba chinna varthai ivarai patri solla

Anonymous 19 April 2010 at 20:19  

Aathaa is lovely and amazing.
Though i know her for quite sometime, she is very kind, considerate and showers loads of love.
Miss her lots, Meera Murali

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்