சென்னையில் சகலமும் !!!




பத்து ரூபாய்க்கு, பிளாட்பாரக் கடையில் கால் பிளேட்  பிரியாணியும் கிடைக்கும். 500 ரூபாய்க்கு, ஐந்து நட்சத்திர ஓட்டலில், புபே (Buffet) மீல்சும் கிடைக்கும், சென்னையில்.

திருவல்லிகேணி. சென்னையின் பேச்சி்லர் சரணாலயம். அங்கே எத்தனை சாலைகள், எத்தனை சந்துகள் என்று எண்ணிப் பார்த்து, மேன்ஷன்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், மேன்ஷன்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கக் கூடும். மார்கழி மாதமாய் இருந்தால், திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவிலில் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரி பார்க்கலாம். கோவிலுக்கு சீக்கிரமே போனால் பொங்கல் சூடாகவே கிடைக்கும்வாய்ப்பிருந்தால் கச்சேரி முடிந்தவுடனும் பொங்கல் கிடைக்கும். குருக்கள் கண்டுக்கொள்ள மாட்டார். இந்த குருக்கள் என்றெல்லாம் பரிமாருகின்றார் என்று தெரிந்து கொண்டால், அன்றெல்லாம், டின்னெர் பெருமாள் புண்ணியத்தில் ஷேமமா முடியும்.
அப்படி இல்லாத நாட்களில், வேறு வழியே இல்லை. பாய் கடையில் கால் பிளேட் கோழி பிரியாணியும், சால்னாவும் தொட்டுக்கிட்டு ஜம்முன்னு வந்திடலாம். இதையும் மீறி பிளாட்பார கடையில் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தால், பின் (!) விளைவுகளுக்கு அவரவரே பொறுப்பு. கை கழுவும் போது, கீழே காக்கா சிறகுகள் கிடந்தால், மேலே பறந்து கொண்டிருந்த போது, அது தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.                             
சென்னைக்கென்று ஒரு வழக்கு மொழி வந்து விட்டது. அதுவே, சென்னை செந்தமிழ் ! அந்த சென்னை செந்தமிழில் இன்றளவும் சிறப்பான வாக்கியமாக கருதப்படுவது,  “ஒரே பேஜாரா கீதுப்பா .......... !”. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

புத்தகம் வேண்டுமா ? இதோ, மூர் மார்க்கெட், மற்றும் கடற்கரையை ஒட்டி, கண்ணகி கை காட்டும் பாரதி சாலை இருக்கிறது. அதுவும் போதாதா? இதோ லஸ் கார்னர் இருக்கிறது. அங்கே 'நம்மாழ்வார்' கடை ஆனந்த  விகடனிலும் பிரசித்தி.
பெண்கள் கல்லூரி உள்ளே போவதற்கு ஆண்களுக்கு சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனாலும், இப்படி கூச்சம் இன்றி பெண்கள் கல்லூரி ஒன்றிற்கு, ஆண்டிற்கு ஒரு முறை உள்ளே செல்லலாம். அது ஸ்பென்செர் பிளாசா அருகே உள்ள காயிதே மில்லத்  பெண்கள் கலைக் கல்லூரி. ஆம்! ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் புத்தகத் திருவிழா தான் அது. நாம் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சிறிது முயற்சியிலேயே 'ஹாய்' மதன் ஆட்டோகிராப் கிடைக்கலாம். இப்போதுதான் திருமணமான நபராய் இருந்தால், முயற்சி செய்யாமலே மல்லிகா பத்ரிநாத் ஆட்டோகிராப்   கிடைக்கலாம்.

பார்த்துப் பார்த்து, பொறுக்கி எடுத்து, ஒன்னும் வாங்காமலேயே திரும்பனும்னா, பாண்டி பஜார் செல்லலாம். பார்ப்பதற்கே பணம் தரனும்ன்னா சிட்டி சென்டர் செல்லலாம். அது அவரவர் விருப்பம். பாண்டி பஜாரில், நாம் நகர்ந்த பின்னும் கடைக்காரர் பொருளின் விலையை தள்ளுபடி செய்வார், அதைக் கேட்டு மயங்கி, உடனே பொருளை வாங்கி விடக் கூடாதுசிறிது தூரம் அப்படியே நடந்து செல்வது மாதிரி சென்று, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தால், மேலும் தள்ளுபடி கிடைக்கலாம். இதையும் மீறி, அதே கடைக்காரர் கண்ணில் படும்படி, பலமுறை நடந்தோமேயானால், அடுத்த முறை, கடைக்காரர் நம்மை  கண்டு கொள்ள மாட்டார். அவருக்கு தெரியும்,இது பைசா தேராத கிராக்கி-ன்னு”.

ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் பாண்டி பஜார் போகலாம். பத்துக்கு மேல் ஒரே பொருளை வாங்க வேண்டும் என்றால், பஸ் பிடித்து பாரிஸ் செல்வது உசிதம். அங்கே தெருவுக்கு தெரு ஒரு வியாபாரம் நடக்கிறது. ஒரு தெரு பாத்திர தெரு, ஒன்றில் பர்னிச்சர், மற்றொன்றில் நாட்டு மருந்து, ஒன்று பூக்களுக்கு, மற்றொன்று தங்க நகைகளுக்கு, மேலும் வீட்டு உபயோக பொருள் தெரு, எலெக்ட்ரிக் தெரு என இப்படியாக நாம் பராக்கு பார்த்து கொண்டே செல்வோமேயானால், பின் பஸ் பிடிக்க, பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் திரும்பி வருவதற்குள்  பத்து  பேரிடமாவது வழி கேட்டு தான்  வர வேண்டி இருக்கும்

அந்த காலத்தில்,கூவம் ஆறு” என்று அழகாக கூறப்பட்டு இருந்தது. இப்போதோ, அதன் புகழ் காற்றில் அனைவரும் உணரும் வண்ணம் பரவியிருப்பதால், வெறும்கூவம்என்றாலே அனைவரும் அறிந்து கொள்வர். மின்சார புகை வண்டியில், சென்னை பீச் ஸ்டேஷன் வரை போகின்றவர் பிரணாயாமம் முச்சு பயிற்சி கற்றுக் கொள்வது நலம் பயக்கும். ஏனெனில் கூவம் பாலம் தாண்டும் இடைவெளியில்  புகை வண்டி கோளாறாகி நின்றால், வாயு பகவான் தான் காப்பாற்ற வேண்டும்.

மூச்சு முட்ட ஷாப்பிங் பண்ணனும்ன்னா, ரெங்கநாதன் தெரு தான் போகணும். அது ஜனக் கடல் தெரு. என்னதான் ரெயில் நிலையம்  பக்கத்தில் இருந்தாலும், அதன் சத்தமே கேட்காத அளவுக்கு நிரம்பி இருக்கும் ஜன சமுத்திரத்தில், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் வரை சென்று வருபவரை என்னவென்று சொல்வது.
இவ்வளவையும் தாண்டி, சரவணா ஸ்டோர் பாத்திரக்கடை முழுதும் பார்த்து விட்டு அப்புறம் துணிக்கடை, பர்னிச்சர் கடை எல்லாம் பார்த்து விட்டு, ஒன்றுமே வாங்காமல் மொட்டை மாடி போய், களைப்பு தீர, ஒரே ஒரு காபி மட்டும் குடித்து விட்டு வருகின்றவரை, வெறுமனே 'விண்டோ ஷாப்பிங்', என்று மனசு நோகாம சொல்லிவிட முடியாது தான்.
அதிலும் ஒரு சாரர் செய்வது காஸ்ட்லிவிண்டோ ஷாப்பிங்'. அவர்கள் போவது எல்லாம் ஜி.ஆர்.டி, பிரின்செஸ், பாலு , ஸ்ரீ, சரவணா தங்க மாளிகை, மற்றும் ஜாய் அலுக்காஸ் மட்டுமே. இவை எல்லாம் போய் விட்டு வந்தவரிடம், என்ன வாங்கினீர்கள்  என்றால், மார்க்கெட்- கோல்ட் ரேட் விசாரிக்க போனதாய் சொல்லுவார்கள்.

சென்னையில் எலெக்ட்ரானிக் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிச்சீ  ஸ்ட்ரீட் இருக்கிறது. இதுவரை வந்துள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள், இன்னும் கொஞ்ச நாளில் வரப்போவது எல்லாமே இங்கு கிடைக்கும். அங்கே போனால், “சார் SONY டிவி லேட்டஸ்ட் மாடல்-கீது, வேணுமா சார்என்பார்கள். ஆளை பார்த்தவுடன், சற்று சமயோசிதமாக தப்பித்து விடவேண்டும். இல்லை என்றால், வீட்டு வரவேற்பறையில் SONY டிவியில் சீரியல் பார்த்து கொண்டு இருப்போம். என்ன கொடுமை என்றால், வீட்டில் வைத்து அந்த டிவி பெட்டியை பிரித்து பார்த்தால், டிவியில்SONYஎன்று ஆங்கிலத்தில் பொறிக்கப்படாமல், அழகு தமிழில்சோனி என்று பொறிக்கப்பட்டிருக்கும். அப்படியே பக்கென்று இருக்கும். சரி ! அவன் கொடுத்த விசிடிங் கார்டில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், மறுமுனையில் தொலைபேசி எடுக்கபடுகின்றது, “ஹலோ சைதாபேட்டை ................... J1 ஸ்டேஷன்”. நமக்கோ மேலும் தூக்கி வாரிப் போடும். ஏமாந்தபின் புகார் கொடுக்க கஷ்டப்படக் கூடாதாம். அதனாலே, விசிடிங் கார்டில் போலீஸ் ஸ்டேஷன் நம்பரே இருக்கும். கஸ்டமர் சர்வீஸ் !!!! அடக் கஷ்டமே !!!

இவை இன்றி நடன விடுதி, வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த மங்காத்தா கிளப்கள், காசினோக்கள், போதை வஸ்துக்கள் கிடைக்கும் இடம் என்று , சென்னை மர்மமும் நிறைந்த நகரம்.


வெளிநாடு வாழ் தமிழ் நண்பர் ஒருவர், இந்திய சுற்றுபயணம் வந்தார். சில நாட்கள் கழித்து, மவுண்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அருகே வந்து, மெதுவாய் மெல்லிய குரலில், “சார் அது (!) எந்த ஏரியா, சார் ! ” என்றார்.
அவரை ஏற இரங்க பார்த்து , “சார் !!  அது ஏன் சார் என்ன பார்த்து அத கேட்டீங்க !!! ”


வாழ்க்கையின் இரண்டு எல்லைக் கோட்டிலும் மக்களை கொண்டு, வந்தாரை வாழ வைக்கும் வாசலாகவும், சகலமும் கிடைக்கும் சென்னை நகரம், இன்றும் உலக அரங்கில் தமிழர்களை தலை நிமிரத்தான் செய்கிறது !!


ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்