நகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் !





சில காலங்களுக்கு முன் வேலை இல்லாத காலங்களில், அதுவும் வேலை தேடுவதையே வேலையாக கொண்ட காலங்களில், வேலை தேடுதல் முடிந்த பிறகு, நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்றிருந்த சார்லி சாப்ளின் தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தேன்.

அவர் திரைப்படங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய பல படங்களில், சாப்ளின் வேலை வெட்டி இல்லாத, வேலை தேடும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கதா பாத்திரங்களே நிறைய சித்தரிக்க பட்டுள்ளன. பின்னே மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல். நம் இனமடா இவன் !.

நடிப்பில் சிகரம் தொட்டு, அன்பில் மக்கள் மனம் கவர்ந்து சாதனை படைத்தவர் சாப்ளின்.

ஒருவன் வாய் திறக்காமலே பேச முடியுமா. முடியும் என்பதற்கு சாப்ளினே சாட்சி. வாய் திறந்து பேசாமலே அன்பு, பாசம், ஆனந்தம், அசூயை, பயம், கோபம் எனவாக பல உணர்ச்சிகளையும் நடிப்பால் புரிய வைப்பார். புரிய வைப்பார் என்பதை காட்டிலும் உணர வைப்பார் என்பது இன்னும் பொருந்தும்.

மேற்பரப்பில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பாங்கு, ஆனாலும் ஆழத்தில் அன்பிற்கு ஏங்கும் குணமாகவும், மெல்லிய சோகமும் பிணைக்க பட்டிருக்கும் அவர் நடிப்பில்.

'தி கிரேட் டிக்டேடர்' என்ற திரைப் படத்தில், ஹிட்லர் போன்று தோற்றம் அளிக்கும் கதா பாத்திரத்தில், பட முடிவில் நீண்ட நேரம், உலக அமைதிக்கான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசுவார். அதை பார்த்தால் நம் உடல் நடு நடுங்கும். என்ன உணர்ச்சி மிகுந்த ஆழமான அர்த்தமான பேச்சு.

நாம் ஒரு கூட்டத்திற்க்கோ, விருது வழங்கும் விழாவிற்கோ செல்லும் பொது பார்த்தோமேயானால், மக்கள் பல வகையில் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தருவார்கள்.
சிலர் இரு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்; சிலரோ கை கட்டியபடியே விரல்களால் தங்கள் கைகளை தட்டி பாராட்டுவார்கள்;
சிலரோ தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க உட்கார்ந்து கொண்டே கைகளால் தங்கள் தொடையை தட்டுவார்கள்; அப்படிப்பட்டவர்கள், அருகில் இருப்பவர் தொடையை தட்டி மகிழ்ச்சி அடையாதவரை நாமும் மகிழ்ச்சியே அடைகின்றோம்!

தமிழக சட்டசபையில், முதல்வர் பேசுகின்றார். பல அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் பராக்கு பார்த்து கொண்டும் பக்கத்தில் பேசி கொண்டும் இருக்கின்றார்கள்; முதல்வர் கூறுகின்றார், 'இனி டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் என்பது உயர்த்த பட்டு, இரவு பன்னிரண்டு மணி வரை திறந்திருக்கும்'. உடனே மேஜையை தட்டி தட்டி, கட்சி பேதம் இன்றி ஆரவாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

இப்படியாக மகிழ்ச்சியையும், பாராட்டையும் பல விதங்களில் காட்டலாம்.
நம் ஊரிலோ பத்மஸ்ரீ விருதும் ப்ளாக்கில் கிடைக்கலாம்.
உலகின் மிக சிறந்த திரை கலைஞர்களுக்கு தரப்படும், உயரிய விருதாய் கருதப்படும் ஆஸ்கார் விழாவில், சாப்ளினுக்கு honorary ஆஸ்கார் தரப் பட்டது. அப்போது அனைத்து மக்களும் தங்கள் மரியாதையையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும், உங்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று அனைத்தையும் கூறும் விதமாய், அவ்விழா வரலாற்றில் கண்டிராத அளவிற்கு, அதிக நேர standing ovation பெறப்பட்ட மாபெரும் நடிகர் சாப்ளின்.

ஒரு அரசியல் வாதி, ஒருவரை குறிப்பிட்டு 'அவர் சட்டசபைக்கு குடித்து விட்டு வருகின்றார்' என்கின்றார். குடித்து விட்டு வந்ததாக கூறப் படுபவரோ 'இவர் தான் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாரா?' என்கின்றார்.
அவ்ளோ தான் பார்டெர் லைன். இதற்கு மேலே, இவரும் அவரைப் பற்றி பேச மாட்டார்; அவரும் இவரைக் கண்டு கொள்ள மாட்டார்.
அதுதான் ஒரு வாரத்திற்கான செய்தி (விளம்பரம்) கிடைத்து விட்டதே. இதை சுய விளம்பரம் என்று ச்சீப்-ஆக எண்ணி விடக் கூடாது. இவர் அவருக்கும், அவர் இவருக்கும், அர்ச்சனைகளால் கொடுக்கும் விளம்பரம். மக்கள் அவர்களை மறந்து விட கூடாதாம். இவர்கள் மட்டும் மக்களை மறந்து விடலாம். மாக்கள்...!

இப்படியாக அரசியல் வாதிகள் குடிமகன்களை பற்றி கவலை படாமல் குடி காரர்களை பற்றியே கவலை படுகின்றனர்.
இப்படிப் பட்ட அரசியல் வாதிகளும் நடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். என்ன? அவர்கள் மகா கலைஞன் சாப்ளின் போல மக்கள் மனதை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திடும் அளவுக்கு நடிக்க தெரியவில்லை.

நம் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள் ஆகவும் எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றார்கள். இந்த குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு நம்மால் பதிலே சொல்ல முடியாது. இத்தனைக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு காரணம், நாம் முன் எப்போதோ கொடுத்த அரை வேக்காட்டு விளக்கமாக இருக்கக் கூடும்.
இப்படித் தான் ஒரு தந்தை தன் மகனிடம், 'மனுஷங்க செத்தவுடன் திரும்பி இந்த எர்த்ல பொரப்பாங்க' அப்டினார். அந்த குழந்தை ஆச்சர்யமாய் 'அப்டியா!' என்று ஆவென்று கேட்டு கொண்டு இருந்தது. தந்தைக்கோ பெருமிதம், தம் மகன் ஆவென வாய் திறந்து கேட்டு கொண்டு இருந்தானே.
குழந்தை சற்றே வளர்ந்தது. புத்தகம் படித்து கொண்டு இருந்தது. திடீர் என்று ஒரு சந்தேகம். அப்பாவை கூப்பிட்டு 'அப்பா 1930-ல இந்தியாவில் 30 க்ரோர் பீபிள் தான் இருந்திச்சு இப்போ எப்டி 120 க்ரோர் பீபிள் ஆச்சு?'.. 'எப்டிபா செத்தவங்க நாலு நாலா பொறந்தாங்க ?'

அப்பா இப்போது ஆவென பார்த்து கொண்டு இருந்தார். கடிகாரத்தை பார்த்தார், சுற்றும் முற்றும் பார்த்தார். 'தம்பி நேரம் ஆயிடிச்சு பாரு, இன்னிக்கு படிச்சது போதும், வா போய் படுக்கலாம்'.

இப்படிப் பட்ட புத்திசாலித் தனமான குழந்தையாக தான் இருந்தார் சாப்ளின் தன சிறு வயதில். அவர் அம்மா ஒரு மேடையில் பாடி கொண்டு இருந்த போது சில தடங்கல்களால் அவரால் பாட முடிய வில்லை. உடனே கூட்டத்தினர் கூச்சலிட்டனர். உடனே சாப்ளின் தன அம்மா பாட வேண்டிய இடத்தில மேடையேறி பாடினார் மழலைக் குரலில். கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது. கூட்டத்தினர் மகிழ்ச்சியாய் காசுகளை தூக்கி மேடையில் போட்டனர். சாப்ளின் பாடுவதை நிறுத்தி விட்டார். உடனே எல்லோரும் 'பாடு பாடு' என்றனர். சாப்ளின் மழலையாய் 'காசு எடுத்து கிட்டு அப்புறம் பாடுறேன்' என்றார். கூட்டத்தினர் சிரித்து விட்டனர்.

சமீபத்தில் பார்த்த சாப்ளினின் திரைப்பட வரிசையில், ஒரு படத்தை தவிர்த்து, அணைத்து திரைப் படங்களிலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அதே போல் சொல்லி வைத்தார் போல் எல்லா படத்திலும் ஏதாவதொரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்.

ஒரு படத்தை தவிர்த்து என்று சொன்னோமே, அந்த படத்தில் உள்ள விசேஷம் என்ன என்றால், அதில் வரிசையாக பல பெண்களை திருமணம் செய்து கொள்ளுகின்றார். அனால் எந்த பெண்ணையும் காதல் செய்யவும் மாட்டார். என்ன ஒரு முரண்பாடு. முரண்பட்ட படத்தின் பெயர் Monseiur Verdoux.

ஒரே ஒரு திரைப் படத்தில் மட்டும் சாப்ளின் இறப்பதாக திரைக்கதை அமைந்திருகின்றது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு மேடைக் கலைஞன் ஆக இருந்து தன் கஷ்டங்களை மறைத்து, வலியை தெரிய விடாமல், மக்களை மகிழ்ச்சி அடைய செய்து விட்டு மேடைக் கச்சேரியை முடித்து விட்டு வந்து, அடுத்ததாக தன் காதலியின் மேடைக் கச்சேரியை பார்த்து கொண்டே உயிர் விடுகின்றார். படத்தின் பெயர் Limelight.

சாப்ளின் ஒரு நடிப்பு வங்கி, ஆனாலும் இந்த வங்கி இறக்கும் தருவாய் வரையிலும் திவால் ஆனதில்லை. சாப்ளின், வங்கிகளுக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து-இல் தன் இறுதி நாட்களை கழித்தார். பின் அங்கேயே காலமடைந்தார்.

தமிழ் என்ன ஒரு அருமையான மொழி.
இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்தான 'இ' என்ற எழுத்தை வாசிக்கும் போது உள்ள காலத்தை காட்டிலும் இந்த வாக்கியத்தின் கடைசி எழுத்தான 'ம்' என்ற எழுத்தை உச்சரிக்கும் போது உள்ள கால மாற்றம் அதிகமாக இருக்கும்.
இது கால வளர்ச்சியின் தத்துவமும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. எப்போது ஒருவர் மூச்சு விடுவதை முழுமையாய் நிறுத்துகின்றாரோ, அப்போது அவர் பிறந்தது முதல் சேர்த்து வைத்த கால வளர்ச்சி முழுமை அடைகின்றது. இதுவே 'காலமடைதல்'.

இவை இன்றி, இதற்கு இணையான இன்னும் சில வார்த்தைகளான 'சிவபதம்', 'சிவலோகபதவி', 'சுவர்க்கம் சேர்ந்தார்', 'புட்டுகிச்சு', 'பூட்ட கேசு', 'மண்டைய போட்டுட்டார்' போன்ற சொல் ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாம் சந்தோஷமாய் சாப்ளினை மீண்டும் பாப்போம்.

சாப்ளினின் முத்தான மூன்று படங்களாக நாம் கருதுவது
1. THE KID
2. CITYLIGHTS
3. THE CIRCUS
நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கலாம். அதற்காக என்னை போல் வேலையை விட்டு விட்டு VCD வாங்கி பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை. சில சாப்ளின் படங்கள் பார்த்து விட்டு குழந்தைகளுடன் போய் விளையாடி பாருங்கள், குழந்தைகள் உங்களோடு மிக குதூகலமாக விளையாடுவார்கள். அது சாப்ளினின் தாக்கம்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.

சார்லி சாப்ளின் முழு திரைப்பட தொகுப்பும் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன். பர்மா பஜாரில் சொல்லி வைத்து இருக்கிறேன். இப்போது தான் COPY போட ஆரம்பித்து இருகிறார்களாம், 'அட்த்த வாரம் வா வாத்யாரே பூராத்தையும் ரெடி பண்ணிரலாம்' என்கின்றார்.

ஹரீஷ்

1 comments:

RaaM 21 October 2009 at 22:40  

Harrish, I can get you Chaplin collection from USA. let me know your address, I can courier it ;)

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்