நதிகள் !!!



நதிகள் நாகரிகத்தின் கண்கள். எங்கெல்லாம் நதிகள் உள்ளதோ, அங்கெல்லாம் நாகரிகம் இருக்குமோ என்னவோ தெரியாது. ஆனால், எங்கெல்லாம் நாகரிகம் தோன்றியதோ அங்கெல்லாம் நதிகள் இருந்திருக்கின்றன. ஹரப்பா நாகரிகம் (சிந்து நதி), எகிப்திய நாகரிகம் (நைல் நதி), மெசபடடேமியா நாகரிகம் (யூப்ரடிஸ் நதியும், டைக்ரிஸ் நதியும்) என்று நாகரிகம் தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணியாக நதிகள் இருந்திருக்கின்றன.

ஆறு இல்லா ஊர் பாழ், என்பர் பண்டைய தமிழ் நாட்டில்.
நீரின்றி அமையாது உலகு, நதி இன்றி அமையாது நகரம்.
உலகத்தின் தலை சிறந்த நகரங்கள் அனைத்தையும் ஒட்டி நதிகள் உள்ளன, லண்டன்(தேம்ஸ் நதி) பாரிஸ்(செய்ன் நதி) டோக்கியோ(சுமிதா, தமா நதி) மாஸ்கோ(வோல்கா நதி) ரோம்(டைபெர் நதி) நியூயார்க்(ஹட்சன் நதி).
நம் நாட்டை பார்த்தாலோ டெல்லி(யமுனா நதி) கொல்கத்தா(ஹூக்லி நதி) மற்றும் சென்னை(அடையாறு நதி கூடவே கூவம் நதியும் (!!!!)).

மேலே பார்த்த நகரங்களில் நதி உள்ளது. இவற்றிற்கும் மேலாக ஒரு சிறப்பான நகரம் உண்டு என்றல் அது வெனிஸ் நகரம் தான். வெனிஸ் நகரத்தில், நதியில் தான் நகரமே இருக்கிறது.

நதிகள் பல வகையில் மனிதனுக்கு உதவியாய் இருக்கின்றது. குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு அரண், மின்சாரம் தயாரிக்க, கழிவு நீர் அகற்ற என பல வகைகளில் உதவுகின்றன.

நதிகளுக்கு உள்ள மற்றொரு சிறப்பு, நதிகளின் கரையில் தான் புனித ஸ்தலங்கள் நிறையவே இருக்கின்றன காசி, மதுரா, அலகாபாத் போன்றவை. 'அகம் ப்ரஹ்மாஸ்மி' வாலாக்கள் இங்கே சற்று தூக்கலாகவே காணப்படுவர்.
இப்படிப் பட்ட இடங்களில்அஸ்தியை கரைத்தால், நேரே மோட்சத்திற்கு வழி வகுக்குமாம். மேலும் புனித நதிகளில் முங்கி எழுந்தால் பாவங்கள் போய் விடும் என்றும் மக்களுக்கு நம்பிக்கை. வருடம் முழுதும் தலை குளிக்காமல் மேலும் பல தீங்குகள் செய்துவிட்டு, ஒரே ஒரு முறை மட்டும் புனித நதியில் தலை குளிப்போருக்கு பாவம் போகிறதோ இல்லையோ, பொடுகு போக வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் பார்த்தாலும் பல புண்ணிய ஸ்தலங்கள் நதிக் கரையை ஒட்டியே உள்ளன. ஸ்ரீ ரங்கம், தஞ்சைப் பெரிய கோவில் , வேளங்கண்ணி, நாகூர் தர்கா எனவாக, காவேரி நதி மிக கொடுத்து வைத்த நதி. எம்மதமும் சம்மதம் என்று கூறிகொண்டே கடலில் கலக்கின்றாள்.

நதிகள் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி இயற்கையின் விதிப்படி ஓடுகின்றன. இது நியூட்டன் பிறப்பதற்கு முன்னேயும், ஆப்பிள் தோன்றுவதற்கு முன்னாலேயும் இப்படித் தான் ஓடிக் கொண்டு இருக்கின்றது. நதிகள் ஏன் இப்படி தங்களை தாழ்த்தி கொள்ளுகின்றன. எதற்கு? நதிநீரை நிலத்தில் பாய விட்டு, நிலத்தை பசுமை அடைய செய்து, விவசாயத்தை கொழிக்க வைத்து, மனிதனை மேம்படுத்துவதற்காக.
ஆஹா ..
நதி இறங்கி வருகின்றது மனிதனை உயர்த்த ..
என்ன அருமை ....

நிலமானது உடலேன்றால், நதிகள் உடலில் குருதி பாய்வது போல்.
நதிகள் நேர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை மாதிரி பாய்வதில்லை. அவை நெளிந்து வளைந்து செல்கின்றன. இது வாழ்வில் நெளிவு சுளிவுகள் நிறைய வரத்தான் செய்யும், அவற்றை எல்லாம் பொறுத்து, நதி போல செல்ல வேண்டும் என்பதையே குறிக்கின்றன. நடுவில் மலையே வந்தாலும், நதி பாய்வதை நிறுத்துவது இல்லை. மலையை சுற்றி வந்தாவது தன் பிரயாணத்தை தொடர்கின்றது . அது போல் நமக்கும் பிரச்சினைகள் வந்தால் அதை விட்டு தள்ளி நகர்ந்து, பிரயாணத்தை தொடர வேண்டும் என்பதை உணர்த்துகின்றதோ.

நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயர்களே அதிகம் வைக்க படுகின்றன. கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, காவேரி, இந்திராணி எனவாக. நதிகள் மென்மையானவை மேலும் பெண்களைப் போற்றி வணங்கும் தன்மை வேண்டும், என்பதால் தான் பெண்களின் பெயரே நதிகளின் பெயராய் வைக்க பட்டுள்ளன.

ஒரு சுட்டிக் குழந்தையிடம் போய், 'கங்கா யமுனா சரஸ்வதி' தெரியுமா என்று கேட்டால், ஹ்ம்ம் தெரியும் அங்கிள், சாயங்காலம் ஆறு மணிக்கு டிவி சுவிட்ச் ஆன் பண்ணினால் தெரியும் அங்கிள், என்று சொல்லிவிட்டு ஓடி விட்டது. அடுத்த முறை அந்த குழந்தையை பார்த்து 'காவேரி' எத்தனை மணிக்கு டிவியில் தெரியும் என்று கேட்க வேண்டும்.

இதற்கும் அடுத்த கேள்வியாக, 'ஆறு' தெரியுமா என்ற கேட்க அச்சமாக உள்ளது. நாம் போய் அந்த குழந்தையிடம் கேட்க, அந்த குழந்தையோ, 'ஹ்ம்ம் தெரியும் அங்கிள், போன வாரம் கூட போயிட்டு வந்தோம்'. மேலும் அந்த குழந்தை, 'அசின் ஆன்ட்டிக்கு பதில த்ரிஷா ஆன்டி ஆக்ட் பண்ணி இருந்தா பெட்டரா இருந்திருக்கும்' என்றால், நமக்கு பிறகு என்ன தான் கேட்கத் தோணும்.

நதிகள் மலை மேடுகள் தாண்டி, வயல்கள் வழி வந்து, காடு கழனி தாண்டி கடைசியாய் கடலில் கலக்கிறது.
நதிகள் சீரான வேகத்தில் பாய்ந்தால் மக்களுக்கு 'வெல்லம்' தான். விவசாயம் செழிக்கும். பொருளாதாரம் பெருகும்.
அது இல்லாமல், நதிகள் கோபமாய் வேகத்தை பெருக்கெடுத்து பாய்ந்தால் எங்கும் 'வெள்ளம்' தான். மேலும் பொருள் சேதமும் உயிர் சேதமும் கூட அதிகரிக்கலாம்.
நதிகள் நமக்கு 'வெல்லமா' அல்லது 'வெள்ளமா' என்பதை அது போகும் வேகமே தீர்மானிக்கின்றன.

நதி பலருக்கும் பல அர்த்தம் போதிக்கும்.
விவசாயிக்கு - விளைநிலத்தின் உணவு கிடைக்கும் இடம் ....
பொறியியல் வள்ளுனனுக்கு - பாலம் கட்டும் இடம்.
அரசியல்வாதிக்கு - பாலம் கட்ட திட்டம் ஒதுக்கும் (!!!) இடம் ..
வண்ணானுக்கு - கரையில், துணிகளின் கறை போக்கும் இடம்

வள்ளுவனுக்கோ ...
      இருபுனலும் வாய்ந்த மழையும் வருபுனலும்
     வல்லரணும் நாட்டிற்க்கு உறுப்பு.

அதாக பட்டது, ஊற்று, மழை, தகுந்த மலை, அதிலிருந்து வரும் ஆறு, பாதுகாப்பான அரண் இவை நாட்டின் அங்கங்களாகும் என்கின்றார்.

நதி நீரோட்டத்தை முழுமையாய் தடுக்க முடியுமா ?. முடியாது தான், ஆனாலும் தற்காலிகமாக தடுப்பதால் மனிதனுக்கு பல நன்மைகள் விளைவிக்கின்றன. விவசாயத்திற்கு நீரை பங்கிட, மின்சாரம் தயாரிக்க, மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கொள்கை அரசியல் செய்ய என பல வகைகளில் மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் உபயோகமாய் இருக்கின்றது.

நதியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.... மின்சாரத்தில் இருந்து நதியை தயாரிக்க முடியுமா. இதை ஆற்காட்டார் கேட்டால் கோவப்படலாம், 'இங்கே மின்சாரமே கிடைக்கறதே பெரிய புளியங்கொம்பா இருக்கு, இதுல இது வேறயா' என்று ...

நதிகள் உள்ள பிரதேசம் சோலைவனம். நதிகள் பார்காத பிரதேசங்களோ பாலைவனம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நதிகள் பாய்ந்தோடும் கரையெல்லாம் நிலம் சிறப்பு.
ஆற்றங்கரையோர கிராமங்கள் கொடுத்து வைத்தவை.
ஆற்றங்கரையில் ஆல மரம், மர நிழலில் குதூகலமாய் குழந்தைகள். கரையெல்லாம் நாணலும், காட்டான் மணியும், கோரையுமாய், மேலும் தென்னங் கொல்லை, மூங்கில் புற்றுகள், மாந்தோப்பு, வாழை மற்றும் மிளகாய் தோட்டம் எனவும், அருகில் சென்றாலே குளிர்ந்த காற்று, நதி நீரின் வாசம் எனவாக ஆற்றங்கரையோர கிராமங்கள் சொர்க்கம்.

ஆத்துல தண்ணி ஓடினாலே நாம் மகிழ்ச்சியாய் இருப்பதை நம்மால் உணர முடியும். இதை இதுவரை நாம் உணர்ந்திராத பட்சத்தில், Air Sahara விமானத்தில் எகானமி கிளாசில் டிக்கெட் வாங்கி சஹாரா பாலைவனம் அல்லது தார் பாலைவனம் வரை ஒரு முறை சென்று திரும்பி வரலாம். அவரவர் சொந்த செலவில் !!

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்