வைரமுத்து

தமிழ் தந்த தவப் புதல்வன்.
கள்ளிக்காடு கண்டடெடுத்த கருப்புத் தமிழ்.
வடுகப்பட்டி வார்த்தெடுத்த வார்த்தை வள்ளல்.

முத்தமிழாம் இயல் இசை நாடகத்தில், முதல் தமிழாம் ‘இயல்’ தமிழை ஏழை எளியோனும் அறியும் வண்ணம் வார்த்தைகளில் வர்ண ஜாலம் காட்டுபவர்.

திரை மும்மூர்த்திகள் வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜா ஆகியோரில் மற்ற இருவருக்கும் பெயரில் ‘ராஜா’ இருக்கிறது. ஆனால் கவிஞருக்கோ ‘ராஜா’ பெயரில் இல்லாமல் வாங்கிய பட்டத்தில் இருக்கிறது. அதுவும் ‘பேரரசு’.
ஆம். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து !

கவிஞருக்கு கலைஞர் என்றால் ஒரு பிரியம். கலைஞருக்கும் அப்படியே.
கலைஞர் பேசும் போது பலரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். வைரமுத்து பேசும் போது கலைஞர் ஆவென்று பார்த்துக் கொண்டு இருப்பார்.

கவிஞர் பேசுகையில்
அதில்
பிழை இருக்காது;
ஒரு
தெளிவு இருக்கும்;

தெரிந்து கொள்ள
விஷயமிருக்கும்;
விஷயத்தை பற்றிய
புரிதல் இருக்கும்;

பகிர்ந்து கொள்ள
ஆசையிருக்கும்;
பகிர்ந்து விட்ட
திருப்தியிருக்கும்;

வார்த்தையில்
பரவசம் இருக்கும்;
கருத்துக்கள்
கனக்கச்சிதமாய் இருக்கும்;

அழுத்தமாய் ………….. ஆழமாய் ……………..
சிறிதும் திருத்தமின்றி;
தெள்ளெனத் தெளிவாய்
கருத்து சிதையாமல்
இருக்கும் சொற்கள்!

இதற்கு மேல் ஒரு விஷயத்தை யாரும் விளக்கி விட முடியாது என்னும் விதமாய் பேசுவார்.
இப்படி கோர்வையாய் அவர் பேசுவதை கேட்கும் கலைஞர் ஆவென்று பார்க்காமல் வெறென்ன செய்வார்.

விகடனில் கவிஞர் எழுதிய கருவாச்சி காவியம், தொடராய் வந்து கொண்டு இருந்தது. ஒரு வாரத்தில் பத்திரிகையில், இந்த வார தொடரை சிறுவர்களும் கர்ப்பஸ்த்திரிகளும் இதயம் பலகீனம் உடையவரும் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அந்த அத்தியாயத்தை படித்தோருக்கு தெரியும், வார்த்தையின் வலிமை. வார்த்தையின் சக்தி… வார்த்தைகளின் உணர்ச்சி. அந்த அத்தியாயத்தின் சாரம் என்னவெனில் ஒரு கர்ப்பஸ்திரி தனக்குத்தானே பிரசவம் செய்துக் கொள்வாள். இதை நாம் எளிதாய் ஒரு வாக்கியத்தில் சொல்லி விட்டோம். கவிஞரோ அந்த வாரத்தின் அத்தியாயத்தில், இதயம் பிழிய வைத்து, வயிற்றை புரட்ட விட்டு, உடலை நடு நடுங்க வைக்கும் அளவுக்கு, வார்த்தைகளில் வீரியத்தை கூட்டி தன் வார்த்தை ஜாலத்தை காட்டி இருப்பார்.

ஹொகெனெக்கல் பிரச்சினையில் பிரம்மாண்டமான திரை உலகப் பேரணி நடந்தது. அதில் பல இயக்குனர்களும், நிகழ்கால நடிகர்களும் வருங்கால முதல்வர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவற்றில் சில நேரம், உணர்ச்சி மிகுதியும், குறைவாயும், சில வசை பாடல்கள் எனவாக நடந்து கொண்டு பேரணி இருந்தது.
கவிஞர் வைரமுத்து வந்தார். பேசினார். மிக நயமாக பேசினார். நல்லதைப் பேசினார். அவர் பேச்சில் குற்றம் குறை கானாத படி பேசினார்.

ஐயன் வள்ளுவன் வாக்கு என்னவெனில்,
சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பேச்சுத் திறமை உள்ளவன், சோர்வில்லாதவன் பயப்படமாட்டான்; இவனை எதிர்த்து வெல்வது யாருக்கும் கஷ்டம்.
இது வைரமுத்து அவர்களுக்கு சாலப் பொருந்தும்.

கவிஞர் 12-வது வயதிலேயே கவி புனைய ஆரம்பித்து விட்டார்.
கவிதை என்றால் காதல் இல்லாமலா.
இங்கு பலர் காதல் வந்தவுடன் தான் தாங்களும் கவிஞன் என்று எண்ணிக்கொண்டு கிறுக்க ஆரம்பிப்பார்கள். அதாகப்பட்டது,
படுக்க தேவை பாய்
மரத்துல கீது காய்
நீன் ஊம் சொன்னா
நான் ஒங் காலடி நாய்.
எனவாக பல இம்சைக் கவிஞர்கள் தோன்றுவது காதலுக்கு பின்னே தான். இப்படிப் பட்டோர்க்கு முதலில் வருவது காதல், பின் தொடர்வதே இம்சைக் கவிதைகள்.
ஆனால் கவிஞர் வைரமுத்துவிற்கு முதலில் வந்தது கவிதை. அந்த கவிதையால் வந்ததே காதல்.
கேட்பதற்கு இதுவே கவிதை போல் இருக்கிறது.

தமிழை கைப்பிடித்த பெண் பெயர் ‘பொன்மணி’.
ஒ.. இவர்தான் தமிழ் தொட்ட பெண்ணோ ….
ஆஹா ……
கவிஞரின் குடும்பம் இப்போது ‘பொன்னும்’ ‘மணியும்’ ‘வைரமும்’ ‘முத்துமாய்’ பிரகாசிக்கிறது.
கவிஞரின் குடும்பம், பொன் மணி வைர முத்து எனப் பெயர்களால் செல்வாக்கான் குடும்பம் மட்டும் அன்று, கவிஞரின் உயர் எண்ணங்களாலும் தமிழ் பேச்சாலும் எழுத்து நடையாலும், சொல் வாக்கான குடும்பமும் கூட.

‘நிழல்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் கவிஞரின் திரைப்பாடல்கள் திறமை வெளிச்சத்திற்கு வந்தது.
இயல்பாக வெளிச்சம் வருவதால் தான் நிழல்கள் கூடவே வரும். இது அறிவியல்.
கவிஞருக்கோ ‘நிழல்கள்’ வந்ததால் புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.
என்ன ஒரு புதுமை….
தமிழ் திரைக்கு, ‘நிழல்கள்’ வந்ததால் வெளிச்சம் வந்தது.

கவிஞரின் முதல் திரைப்பாடல், ‘இது ஒரு பொன் மாலைப்பொழுது’ எனும் பாடல். கவிஞரின் முதல் திரைப்பாடல் பிறந்த அன்றே அவரின் முதல் மகன் பிறந்ததும்.
பாடலும் பிறந்தது.
புத்திரனும் பிறந்தான்.
திரைப் பாடல் பிறந்ததால் மகிழ்ச்சி பெற்றார்.
தனக்குப் புத்திரன் பிறந்ததால் மக்கட் பேறு பெற்றார்.

கவிஞருக்கு சொல்லின் செல்வி சரஸ்வதி தேவி நாவிலும் நாடி நரம்பிலும் நாட்டியமாடுகின்றாள்.

கவிஞர் பேசினால் வார்த்தைகள் விட்டு விட்டு வராது.
தங்கு தடை இன்றி பிரளயமாய்த்தான் வந்து விழும். ஏன் என்றால் உணர்ச்சிகள் வெளிப்படுகையில் பிரளயமாய்த்தான் வரும்.

அவர் எழுதிய புத்தகங்கள் பற்பல.
தமிழ் இலக்கியத்திற்கு கவிஞரின் பங்களிப்பாக, இதுவரையிலும் 30-க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

அவரிடம் பொத்தி வைக்கப்பட்டு இருந்த கிராமத்தை பிரிந்த சோகம், நேசித்த நிலத்தை விட்டு நகர்ந்த கொடும் நிகழ்வு, பெருக்கெடுத்து பல வருடம் கழித்து எழுத்து பிரவாகமாய் வந்ததில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பெரும் பேறு கிட்டியதது. அதுவே ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ ஆக உறுப்பெற்று ஒரு சாகித்ய அகாடெமி விருதாக கவிஞருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தது. அந்த உனர்ச்சியே ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வரும் ‘விடை கொடு எங்கள் நாடே’ என்னும் பாடலுக்கும் வழி வகுத்து தேசிய விருதுக்கும் வழி வகுத்து இருக்கக் கூடும்.

கள்ளிக்காட்டு இதிகாசம் மூலம் தன் சொந்த ஊர் சொந்தங்களை மீண்டும் ஒருமுறை தண்ணீருக்குள் இருக்கும் கிராமத்திற்க்கு அழைத்து சென்றார்.

வைரமுத்து அவர்களை பார்த்தால் அவர் காந்த கண்களில் ஒரு வித்தியாசம் காணலாம். அதாவது அவர் கண்கள் நம் கண்களைப் பார்க்கிறதா அல்லது நமது தலைக்கு மேலே பார்க்கிறதா என்று. அவர் நம் தலை மேல் சுடர் விடும் மனிதம் என்னும் ஒளி வட்டத்தை தான் காண்கின்றார் போலும்.

கவிஞர் பாங்க்காக்-கிலும், ஹாங்காங்-கிலும் தமிழ் பள்ளிகள் ஆரம்பித்து இருக்கிறார், தமிழை வளர்ப்பதற்காக.
மழை வேண்டிய நமது மாநிலத்தில், நமது குழந்தைகள் 'ரெயின் ரெயின் கோ அவே' பாடினால், கூடிய சீக்கிரத்தில் கவிஞர் தஞ்சாவூரிலும் மதுரையிலும் தமிழ் பள்ளி ஆரம்பித்தால் ஆச்சர்யம் இல்லை.

விகடனில் சமீபத்தில் வெளி வந்த செய்தி. கவிஞர் அதிகாலை நான்கு மனிக்கு நடை பயனம் செய்யும் போது உதிக்கும் எண்ணங்களை தொகுத்து கொண்டு இருக்கின்றாராம். தமிழ் நடை.

கவிஞர் வாங்கிய தேசிய விருதுகள் இதுவரை ஐந்து,
அந்த பாடல்கள் தான் பஞ்சப்பாட்டு. ஆம், ‘பஞ்ச’ பாடல்கள்.
பொறுங்கள்.
‘பஞ்ச’ பாடல்கள் என்றவுடன் பசி பட்டினி பற்றிய பாடல்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். ‘பஞ்ச’ பாண்டவர்கள் என்றால் முத்தான ஐந்து பாண்டவர்கள் அல்லவா, அதைப் போலவே ஐந்து முத்தான பாடல்களுக்கு தேசிய விருது வாங்கி உள்ளார். கூடிய விரைவில் ‘பத்துப்பாட்டுக்கும்’, அதாவது பத்து திரைப்பாடல்களுக்கு விருது வாங்கிய பெருமை அடைய வாழ்த்துவோம்.

வைரமுத்து கவிதை
கருத்து விதை
கருத்துக் கருவூலம்;
வார்த்தையில் வித்தை
கேட்பதில் விந்தை;
ஹரிஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்