தூக்கம் !!



நம்மில் பலரும் காலையில் தூக்கத்தில் விழித்தவுடன் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா.
வேறென்ன, மீண்டும் தூங்குவது தான்.
என்ன தான் இருந்தாலும் காலையில் பத்து பத்து நிமிடம் அலாரம் நகர்த்தி நகர்த்தி வைத்து தூங்கி எழுவது ஒரு சுகம் தான்.

மனிதன் தேவைகளாக கருதப்படுவது
மாசற்ற காற்று
நல்ல நீர்
உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இருப்பிடம்
இனிய இல்லாள்

இவற்றோடு, இரவில் நிம்மதியான உறக்கம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். தூக்கம் அந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்றும் அவசியமான ஒன்றும் கூட.
உண்ணாவிரதம், அருந்தா விரதம் மற்றும் பேசாமலே இருக்க மௌன விரதம் போன்ற பல விரதம் பார்த்திருக்கிறோம்.
ஆனாலும் முயற்சித்தாலும் முடியாத இரண்டு விரதங்கள் என்னவென்றால்.
சுவாசிக்கா விரதம்
தூங்கா விரதம்

இதில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன வெனில் இடைவெளி. ஆம்.

சுவாசம் இடைவெளி விட்டே நடக்கிறது. நாம் ஒரேயடியாக காற்றை உள்ளிருத்தி கொண்டே இருப்பதில்லை. சுவாசிப்பதும் ஒரு இடைவெளியில் தான் நடக்கிறது. காற்றை உள் இழுப்பது, உள்ளிருத்தி வைப்பது, பின் வெளியிடுவது இப்படி ஒரு நிமிடத்திற்குள் பல சுவாச வட்டம் நடைபெறுகிறது.
தூக்கமும் இடைவெளி விட்டுத்தான் வருகிறது. ஆனால் இடைவெளியோ ஒரு நாளுக்கும் மறு நாளுக்கும் இடையில் வருகிறது.

ஜெட் லேக் (Jet Lag) என்ற ஒரு சொல் இருக்கிறது. சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் விடும் பீட்டர்களில் இந்த வார்தையையும் அடிக்கடி நாம் கேட்கலாம். நாடு விட்டு நாடு வந்தவுடன் வருகின்ற ஒரு விஷயம்தான் ஜெட் லேக் (Jet Lag) இதற்கு இனையான தமிழில் உள்ள வார்த்தை என்னவென்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படி சொல்லலாம்.‘’காத்தாலே தூக்கமா கீதுபா’’ என்று.
அதாவது ‘காலை வேளையிலேயே தூக்கமாக வருகிறது. இரவு படுத்தால் தூக்கமே வர மாட்டேன் என்கிறது’ எனக் கூறும் விதமாய் நமது உடலில் உள்ள தூக்க கடிகாரம் மாறிவிடும்.
மேலும் ஒரு மாதத்திற்கு பிறகும் இப்படி ஜெட் லேக் (Jet Lag) இருப்பதாக மேலாளரிடம் கூறிக் கொண்டு தப்பிக்க பார்த்தால், மேலாளர் நம்மை அடுத்த டிக்கெட்டில் ஊர் போய் அங்கிருந்து வேலையை தொடரலாம் எனக் கூறினால், ஜெட் லேக் (Jet Lag) எல்லாம் உடனே ஓடிப் போகி விடலாம். பிறகு தூக்கம் சரியான நேரத்துக்கும் வர ஆரம்பிக்க கூடும்.

பத்து வயது சிறுவன் ஒருவனிடம் ஒரு நாள் என்பது எப்படி கணக்கிடப்பட்டு வருகிறது என்று அறிவியல் பூர்வமாக விளக்கி கொண்டு இருந்தோம்.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டால் ஒரு நாள் வருகிறது. இப்படி பூமி 365 முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது ஒரு வருடம் ஆகிறது. அப்படி ஒரு வருடம் கடக்கையில் உனக்கு ஒரு வயசு ஏறுது என்றோம்.
உடனே அந்த குழந்தை, ஏன் அங்கிள் ஒரு ஏரோப்ளேன் ஏறி, பூமி சுத்துற டைரெக்ஷன்-க்கு எதிர் டைரெக்ஷன்-இல் ஏரோப்ளேனை விட்டு இறங்காமல், பத்து வாட்டி 365 டைம்ஸ் சுற்றினால் மறுபடியும் எனக்கு ஒரு வயசு ஆயிடுமா அங்கிள், என்கிறான்.
நல்ல வேளை, இன்னும் இந்த குழந்தையிடம் மாம்பழத்திற்கு அண்ணன் விநாயகரும் தம்பி முருகனும் எப்படிப் போட்டியிட்டார்கள் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால், முருகன் தான் பூமியை சுற்றினாரே இன்னும் கொஞ்சம் சுற்றியிருந்தால் விநாயகனுக்கு அண்ணன் ஆக முருகன் ஆகியிருக்கலாம்ல என்று கேட்டாலும் கேட்பார்கள்.

இப்படி ஏடாகூடமாக கேட்கும் குழந்தைகளிடம் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள கை கொடுப்பது தூக்கம்.
அதெப்படி ?
தம்பி, ரொம்ப நேரமா படிச்சுகிட்டு இருக்க. காலையில் படிக்கலாம். இப்போ போய் தூங்கு, என்று நழுவி விடலாம்.
இப்போதாவது சொல்லுங்கள் தூக்கம் அவசியம்தானே.

ஐயன் வள்ளுவன் கூறுவது யாதெனின்.
      உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
      விழிப்பது போலும் பிறப்பு
அதாவது, இறப்பது தூங்குவதை போல; பிறப்பது தூங்கி விழிப்பது போல்.

தூக்கம் என்பது தற்காலிக இறப்பு. இறப்பு என்பது நிரந்தர தூக்கம் எனவும் கொள்ளலாம்.

வெற்றியாளர்கள் தூங்கும் நேரம் மிக குறைவு. உழைக்கும் நேரமே அதிகம்.


மனிதன் தூங்கும்போது விழி மூடி இருக்கும். அது போக தூங்காத நேரங்களில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதிலும் நாடாள்பவர்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம்.

இதையே வள்ளுவர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்.
      தூங்காமை கல்வி துனிவுடைமை இம்மூன்றும்
      நீங்கா நிலனாள் பவற்கு

இதில் வள்ளுவன் தெரிவிப்பது நாடாள்பவர்கள் தூங்கவே கூடாது என்பதை அல்ல, மாறாக தூங்காத போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே.

நமது மாணவர்கள் சிலர் இதில் சற்றே கைதேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே அறிந்த ஒரு வித்தை யாதெனின். ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொன்டிருப்பார். மாணவரின் கண்கள் ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் மாணவரோ தூங்கிக் கொண்டிருப்பார்.

இதைவிட ஒரு படி மேலான மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தூங்குவது விழிப்புணர்வு தூக்கம். அதாவது ஆசிரியர் பாடம் நடத்தையில் விழிகள் திறந்து கொண்டே தூங்கவும் செய்வார், ஆசிரியர் இவரைப் பார்க்கும் போது தலையை மேலும் கீழும் ஆட்டவும் செய்வார், இதுவரை ஆசிரியர் கூறியதை எல்லாம் புரிந்து கொண்டும் ஏற்றுக் கொண்டும் தலையாட்டுகிறாராம். இது விழிப்புணர்வான தூக்கம்.

வள்ளுவன் இன்னொரு குறளில்,
      தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
      தூங்காது செய்யும் வினை

என்கிறார். காலந் தாழ்த்துவதை காலந் தாழ்த்தலாம். சிலவற்றை விரைவில் செய்ய வேண்டும்.
இந்த குறளை ராத்திருடன் ரங்கன் கேட்டால் வேறு விதமாய் அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம். தூங்க வேண்டியவர்கள் தூங்கியவுடன் தான் தூங்காமல் தொழிலை திறம் பட செய்ய வேண்டும், எனவாக.

சக்தி தூக்கம் (Power Nap) என்ற ஒன்று சமீப காலங்களில் பேசப்பட்டு வருகிறது. சக்தி தூக்கம் என்றால் ஏதோ இப்பொது எல்லாம் மின்சார சக்தி சரி வர வராமல் நம்மை பாடு படுத்தி, அது போய் தூங்கி விடுகிறதே அது தான் சக்தி தூக்கம் போல, என்று தவறாக எண்ணிக் கொள்ளவேண்டாம்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தர ஆரம்பித்ததில் இருந்து முதியோர் இறப்பு சதவிகிதம் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. மேலும் முதியோர் இல்லத்தில் சேரும் முதியவர் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த பெறுமை எல்லாம் அறிஞர் அண்ணாவின் கனவுக்கும் கலைஞரின் செயல் வடிவத்திற்க்கும் சேர வேண்டியது.

அப்படியே சென்ற மூன்று வருடங்களில், ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பிள்ளை பெற்றவர்கள் எத்தனை பேர் அடுத்த பிள்ளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வெளி வந்தால் மின்சாரம் தூங்கியதால் வந்ததின் விளைவுகள் தெரியலாம். இதற்கு மேல் நம் வாயை பிடுங்காதீர்கள்.

சக்தி தூக்கம் என்றால் சிறிது நேர தூக்கம்.
இப்படிப் பட்ட சக்தி தூக்கம் என்பது 20-30 நிமிடம் பகல் வேளையில் தூங்குவது. இப்படி பட்ட சக்தி தூக்கத்தினால் மூளை மீண்டும் புத்துணர்வு பெற்று உழைக்க ஆரம்பிக்கும்.

தூங்காமல் தான் இருக்க முடியாது. தூங்கி கொண்டே இருப்பவர்கள் காவியத்தில் இருக்கிறார்கள். கும்பகர்ணன். விட்டால் பல வருடங்கள் தூங்கி கொண்டே இருப்பானாம். கும்பகர்ணனை எழுப்ப மிகக் கஷ்டப்பட்டு தான் எழுப்ப வேண்டுமாம். அவர் நம் இனம் போலும்.

தூக்கத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்கள். நல்ல கேள்வி கேட்டீர்கள் போங்கள். முதல்வர்களுக்கு துனை முதல்வர்கள் இருக்கையில் கும்பகர்ணனுக்கு நிகழ் காலத்தில் துனை கும்பகர்ணன் இருக்கக் கூடாதா என்ன.

படுக்கையில் பஞ்சு மெத்தை இருப்பதாலும், பஞ்சு மெத்தைக்குள்ளே பணக் கட்டுகள் இருப்பதாலும் நல்ல தூக்கம் வந்து விடாது.

அசூயை இன்றி
சிந்தனை சரியாய்

தீயவை நினையாமல்
நல்லவை நினைத்து

பெரியோரை மதித்து
சிரியோரை மகிழ்வித்து

உடல் உளைக்க
பெற்ற அறிவும் உளைக்க
அதில் களைக்க

பாயில் படுத்தவுடனே
பொத்துக் கொண்டு
நாடி வரும்
நிம்மதி உறக்கம் !!

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்