Showing posts with label கம்பராமாயனம். Show all posts
Showing posts with label கம்பராமாயனம். Show all posts

இளமை பருவத்து இன்பம் !



ளமை பருவத்திற்கு பெரிதும் இன்பம் சேர்ப்பது –  நட்பா ? காதலா ?

திருவள்ளுவர், திருக்குறளில் நான்கு அதிகாரம் நட்புக்கு மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்.
  • நட்பு.
  • நட்பாராய்தல்.
  • தீ நட்பு.
  • கூடா நட்பு.
ஏன் ? ஏனெனில், திருவள்ளுவருக்கு தெள்ளென தெரிந்திருக்கிறது, மனிதர்களுக்கு நட்பு என்பது மிக முக்கியம். நட்பு இல்லாமல் மனிதன் இல்லை என்பதும். எது முக்கியமோ அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா ? அதனால் தான் நட்பில் கூடுதல் அதிகாரம் வைத்து இருக்கிறார் திருவள்ளுவர்.

ஒரு குறளில்;
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு !
என்கிறார்.அதாவது, அரசர்களில் ஆண் சிங்கமாக இருக்க; அரசனுக்கு தேவையானவை, படை, குடிகள், அமைச்சர்கள், நண்பர்கள், அரண் ஆகியவை. 
ஏன், திருவள்ளுவர் வந்து.
            படை குடி கூழ் அமைச்சு அந்தப்புறம் அரண் ஆறும்
            உடையான் அரசருள் ஏறு !
என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? சொல்லவில்லையே ! ஏன் ? ஏனென்றால்,  அந்தப்புறம் சிற்றின்பம். நட்பே பேரின்பம் ! அதனால் தான். ‘நட்பை’ப் பெற்றால் அரசன் ஆகலாம். ‘காதலை’ கொண்டால் ஆன்டியாகலாம் !! 

கம்பன், கம்பராமாயனத்தில் நட்பை பற்றி ஒரு இடத்தில் மிக அருமையாக அற்புதமாக விளக்குகிறார். ராமரை சந்திக்கிறார் சுக்ரீவன். ராமர் சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு; இவ்வாறாக கூறுகிறார். 
  ‘மற்று இனி உரைப்பது என்னே? 
     வானிடை. மண்ணில் நின்னைச்
  செற்றவர் என்னை செற்றார்;
     தீயரே எனினும். உன்னோடு 
  உற்றவர் எனக்கும் உற்றார்; உன் 
     கிளை எனது; என் காதல் 
  சுற்றம். உன் சுற்றம்; நீ என் 
     இன் உயிர்த் துணைவன்’ என்றான் !! 
ராமர் இப்படி கூறியவுடன் சுக்ரீவனோடு வந்த குரங்கு சேனைகள் எல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றன. ராமருக்கு, அந்த அடர்ந்த காட்டில் மனைவியை பிரிந்த அந்த வேளையிலும் காட்டில் வானரர்களுடன் விளைந்த அந்த நட்பே சற்றேனும் இன்பம் சேர்த்தது. வீம்புக்கு சிலர், குரங்குக்கு ‘காதல்’ கூட வரலாமே என வாதிடலாம். அதுவும் சரிதான்; அப்படித்தானே எய்ட்ஸ் முதல் முதலாக வந்தது. வரட்டும் வரட்டும் !! 

இளமை என்றால் என்ன? இளமை என்றால் விடலைப் பருவத்திற்கு பிறகு வருவது. அதுதான் இளமைப் பருவம். அதாவது கல்லூரிக் காலம் மற்றும் திருமணத்திற்கு முந்தைய காலம் எனக் கொள்ளலாம். கல்லூரி காலங்களில் அடைந்த இன்பம் தான் எத்தனை ! எத்தனை ! 

  நாயர்     கடையில்  
  காந்தி     கணக்கில் 
  நண்பர்    சூழ 
  குடித்த    தேநீர் !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

  நண்பன்   கொண்டு 
  வந்த      கட்டுச்சோறு; 
  உண்டு    முடித்தோம் 
  போட்டி   போட்டு 
  நன்பர்கள் யாவரும்; 
  கொண்டுவந்தவனைத் தவிர !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

  எப்போதோ     ஒருமுறை; 
  எதேச்சையாய் ஒருவன் 
  எடுத்துக்        கூற; 
  புத்தி           வந்து 
  கல்லூரி        சென்றது 
  நண்பர்         கூட்டம்; 
  தினசரி         செல்லும் 
  திரையரங்கை   கட்டடித்து !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

தேர்வு அறையிலே உட்கார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாஸ் ஆவதற்கு உதவியாய் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அமர்வதும் யார்? காதலா ? நண்பனா ?!? வாழ்க்கையில், முன்னும் சரி ! பின்னும் சரி ! நண்பன் தான், தேவைப் படும் போது கை கொடுப்பவன். காதலா கை கொடுக்கும் ? காதல் ‘கால்’ வேண்டுமானால் கொடுக்கும். அதுவும் மிஸ்டு கால் !! 

கண்ணதாசன் அருமையாக பாடியிருக்கிறார். 
  வீடு வரை உறவு 
  வீதி வரை மனைவி 
  காடு வரை பிள்ளை 
  கடைசி வரை யாரோ ?   
கண்ணதாசனின் அந்த, ‘கடைசி வரை யாரோ ?’ என்ற கேள்விக்கு விடை மிக எளிது. ‘இளமையில் இருந்து, இன்பத்தில் இனைந்து; துன்பத்தில் தோள் கொடுக்கும் அந்த நட்பு தான்’ கடைசி வரை !! ஆக, இளமையில் துன்பத்துக்கு தோள் கொடுப்பதில் ஆகட்டும், இன்பத்தை இரட்டிப்பாக்குவதில் ஆகட்டும் இரண்டிற்கும் மனித குலம் பெரிதும் நம்புவது நட்பையே !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்