Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


காலப்  போக்கில் கல் தோன்றி; மற்றோர் நாள் மண் தோன்றி; அன்றோர் நாள் அமீபா(Amoeba) தோன்றி; வருடங்கள் உருண்டோடி குரங்கு உருவாகி; பரிணாம வளர்ச்சியில் பின் தோன்றிய பழங்குடிகளில், மூத்த குடியான திராவிடர்கள் தோற்றுவித்த உன்னத மொழி, உயிர் மொழி - தமிழ் மொழி !

அப்படிப்பட்ட தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழுப்பும் இவ்வேளையில், சந்து வழியாக சமஸ்கிருத கும்பல், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிக்க முயற்சி செய்கிறது.

நல்ல வாய்ப்பாக,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
போல், திராவிடர் கழகம்தான் இந்த சந்து வழி சமஸ்கிருத எழுத்துத் தினிப்பு முயற்சியைக் கண்டுபிடித்து, எழுத்து தினிப்பைத் தடுக்க தடுப்பணையும் போட்டுள்ளது.

விழிக்கு எப்படி ஒளி பிரதானமோ, அப்படியே மொழிக்கு ஒலி பிரதானம். எந்த ஒரு மொழிக்கும், ஒலி மிக முக்கியம்; அந்த ஒலிகளுக்கு இணையாகத்தான் எழுத்துக்கள் வருகின்றன. தமிழில் பல சிறப்பான ஒலிகள் உள்ளன. அதாவது, 'எ' 'ஒ' 'ற' 'ன' 'ழ'  போன்றவை.

'வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி.  சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.

தமிழின் மேன்மையைப் பாருங்கள்; தமிழோ, 'எல்லாமே நம் ஊர்தான்; எல்லோரும் நம் உறவினர்' 'பிறப்பால் எல்லா உயிரும் சமந்தான்' என்று கூறி இணைக்கிறது. அதாவது, காசியும் நம் ஊர்தான், கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியும் நம் உறவினர்தான், எனும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டது தமிழ் மொழி. நமக்கு மனிதர்கள் எதிரிகள் இல்லை; சில 'மனிதர்களின் தீய கொள்கைகள்தான் எதிரிகள்'. இந்த தீப கர்பத்தில், திராவிடர்களுக்கு பார்ப்பனர்களின் பார்ப்பனீயம்தான் தீய கொள்கையாக இருக்கிறது. பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இல்லை திராவிடர் கழகத்தினர். மாறாக, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்ப்பவர்கள்.
  
திராவிட மொழிகளுக்கு எல்லாம் தமிழே வேர் மொழி. அந்த வேரில் விஷத்தை ஏற்றினால், மரம் கிளைகளுக்கும் பரவிவிடும் என்ற எண்ணத்தில், விஷமிகள் விஷக் கிருமிகளை வேரில் புகுத்த எத்தனிக்கிறார்கள். பெரியார் வளர்த்த பகுத்தறிவுக் கூட்டத்திடம் பலிக்குமா இந்த விஷக் கிருமிகளின் விசேஷங்கள்? பலிக்காது! 
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
போல, நல்லதோர் சிந்தனைச் சிற்பிகளை அல்லவா தந்தை பெரியார் எனும் சமூக மருத்துவர் உருவாக்கியுள்ளார்கள்.

எது விஷக் கிருமி? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிப்பதுதான். சிறீராமன் சர்மா என்பவர் Unicode Consortium-க்கு ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார். என்ன விண்ணப்பம்? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் மொழி பெயர்க்க சிரமமாய் இருப்பதால், மொழி பெயர்ப்பை எளிதாக்க சமஸ்கிருத எழுத்துக்கள் 26 ஐ தமிழில் எழுத்தாக தினிக்க விண்ணப்பம் இட்டுள்ளார்.

தமிழகத்தின், மொத்த மக்கள் தொகையில்  6 கோடியே 25 லட்சம்  பேரில், நூற்றுக்கு நான்கு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இருக்க மாட்டார்கள் (இது உத்தேசமான கணக்குத்தான். அடுத்த வருடம் சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்தவுடன் உண்மை நிலவரம் அறியலாம்). அந்த நான்கு சதவீதத்தில் எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருக்கப் போகிறார்கள்?. நான்கு சதவீதம் என்று உத்தேசித்தால், தமிழக மக்கள் தொகையில், ஆறே கால் கோடி பேரில், வெரும் 25 லட்சம் மக்களுக்காக, மற்ற 6 கோடி மக்கள் புழங்கும் ஒரு மொழியில், சமஸ்கிருத மொழியின் எழுத்துகளை சேர்த்தால், ஏற்றுக் கொள்ளலாமா? உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் கூடுதல் பேருக்கும் இந்த 'சந்து வழி சமஸ்கிருதத்  திணிப்பால்' திண்டாட்டம் வந்து விடுமே! பார்த்தீர்களா இந்த சமஸ்கிருத கூட்டம் 'சந்து வழி சிந்து பாடுவதை'! இதைத் தடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா!? கடமை கிடக்கட்டும். இந்த சமஸ்கிருதத் தினிப்பை தடுக்க வேண்டியது நமது உரிமை அல்லவா!?

சமஸ்கிருத படைப்புகளை நம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, சமஸ்கிருத எழுத்தைத் தமிழில் தினிக்கப் பார்க்கிறார்கள். தமிழில் உள்ள உலகப் பொது மறையான உயரிய திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க சிரமமாய் இருக்கும் என்று கூறி, தமிழ் எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், இந்த 'சைட் வாசல் சமஸ்கிருதத் தினிப்பு' கூட்டத்திற்க்குப் பொறுக்குமா?

தமிழை நீச பாஷை என்றவர்கள் தான் சமஸ்கிருதம் போற்றும் சங்கராச்சாரியார்கள்.

"பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?" என்று தந்தை பெரியார் அவர்கள் கொதித்து எழுந்ததின் காரணத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.

தமிழ் செழுமையான மொழி. இந்த செழுமையான மொழியில் வார்த்தைகள் ஏராளம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வார்த்தைகள் கூட்டிக் கொண்டே போகலாம் - ஒலிகள் மாறாமல்.

தமிழ் ஓர் உயிர் மொழி. அதிலும், திராவிட மொழிகளுக்கு தமிழே ஆணி வேர். அந்த ஆணி வேரை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது சமஸ்கிருதத்தால்.
சமஸ்கிருதம் ஓரு பட்ட மரம்; தமிழோ வளரும் ஆல மரம்! தமிழனுக்கு என்றொரு நாடு, என்று பெருமை கொள்ளும் நாளும் வரும்.

உண்மையுடன் 
பொன்னியின்  செல்வன்

நன்றி : 

தமிழ் தழைக்க


மீபத்தில், முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் தமிழ் எழுத்து சீரமைப்பு பற்றிய கருத்துக்களை அறிய நேர்ந்தது. அந்த கருத்துக்களின் வழிவந்ததே இந்தக் கட்டுரை.

எழுத்து என்றால் வடிவம் தானே? அதுவும் ஓர் ஓவியம் தானே? ஆக, எழுதத்தெரிந்தவர்கள் எல்லோரும் ஓவியர்களே; குறிப்பிட்டு சொல்வதாய் இருந்தால் சொல் ஓவியர்கள்!

நவீன ஓவியங்களிலோ (Modern Art ), அதைக் காண்பவர் அந்த ஓவியத்தில் இருந்து பலவற்றை புரிந்துகொள்ளக்கூடும். அப்படிப்பட்ட கவலை எல்லாம் இந்த சொல் ஓவியத்தில் இல்லை. ஆனாலும், 'அ' என்ற சொல் ஓவியத்தைப் பார்த்து, வாய்திறந்து 'ஆ' என்று நெடிலாய் வாசித்துவிட்டால் சற்றே சிக்கல் தான்.

'அ' எனில், ஒலி; ஓவியம்;எழுத்து;குறியீடு; ஓர் எண்ணம்;

உயிர் எழுத்துக்களை உச்சரிக்க பற்கள் தேவையில்லை. குழந்தைகளும் பொக்கைவாய் பெரியவர்களும் கூட உயிரெழுத்துக்களை உச்சரிக்கலாம். அதிகமான உயிரெழுத்துக்கள் தமிழுக்கு இருப்பது சிறப்புதான்.

உயிர் இல்லாமல் உடல் இல்லை;  ஓர் உடலில் உயிரில்லை எனில் அது வெறும் பிணம். உயிரெழுத்து இன்றி எந்த தமிழ் வார்த்தையும் இல்லை. அவ்வகையில் தமிழ் உயிரோட்டமான மொழியும் கூட.

ஒரு மொழி முதலில் எண்ணமாக உருவாகி, சைகையாக கையாளப்பட்டு; பின், ஒலியாக எழுப்பப்பட்டு; பிற்பாடே, அந்த ஒலிக்கு நிகரான வரிவடிவம் வரையப்பட்டிருக்கும். பிற்பாடே, வார்த்தைகள் வந்திருக்கும்; அதன்பின்னேதான் இலக்கணம் வந்திருக்கும்; தொடர்ந்து இலக்கியங்கள் வந்திருக்கும். இதுதான் ஒரு சீரிய செம்மொழியின் பரிணாமவளர்ச்சி. ஆக, ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சிக்கு அதிமுக்கிய காரணம் எண்ணம்; அதாவது சிந்தனை. 

சிந்தனை இருப்பதால்தான் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; வாழ்வார்கள்.

இன்றிலிருந்து 2500 ஆண்டுகட்கு முன்னரே, தமிழில் இலக்கண நூல் தொல்காப்பியம் இய்ற்றப்பட்டுள்ளது; எனில், அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் தமிழுக்கு வரிவடிவம் வந்திருக்கும்? வரிவடிவம் வருவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் ஒலிவடிவம் வந்திருக்கும்? அப்படியெனில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழன் சிந்திக்க தொடங்கியிருக்கிறான்! நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு, என்னே ஓரு தொடர்ச்சி! இம்மொழி மென்மேலும் உயர வேண்டும் அல்லவா? அதை, எப்படி மேலும் சீர்படுத்த முடியும்? இதோ பார்க்கலாம்.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தி ஏழு.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ

மெய் எழுத்துக்கள் மொத்தம் 18 : க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216.

ஆய்த எழுத்து 1.

மொத்த எழுத்துக்கள் :12 + 18 + 216 + 1 = 247

நமது மூளைக்குள் இருக்கும் நியூரானுக்கு ஒலி முதன்மை; அந்த ஒலிக்கு இணையான சொல்லோவியமாக எழுத்து இருக்கும். ஆக, தமிழை பேசுவதோடல்லாமல், எழுதத்தெரிய நமக்கு 247 சொல்லோவியங்கள் தேவை. ஆக, நம்மிடம் 247 ஒலிகளும், அதற்கு இணையாக 247 சொல்லோவியங்களும் தேவை.

இதில் மாறாமலிருப்பது ஒலி; மாறுவது, மாறியது, மாறிக்கொண்டிருப்பது, மாறவேண்டியது சொல்லோவியம் எனப்படும் எழுத்து. ஆனாலும், அவ்வளவு சொல்லோவியம் தேவையா? என்றால், அவ்வளவு தேவையில்லை. ஏனென்றால், அதற்கு துணையெழுத்துக்கள் இருக்கின்றன. எடுத்துகாட்டிற்கு, கீழே உள்ளதை பார்த்தால் புரியும்.
    க் + அ =    க
    க் + ஆ =    கா
    க் + இ =    கி
    க் + ஈ =    கீ
    க் + உ =    கு
    க் + ஊ =    கூ
    க் + எ =    கெ
    க் + ஏ =    கே
    க் + ஐ =    கை
    க் + ஒ =    கொ
    க் + ஓ =    கோ
    க் + ஔ =    கௌ
    .
    .
    .
    .
    ன் + ஔ =    னௌ

இப்படியாக மொத்தம் 247 சொற்களை எழுத மொத்தம் 107 தனித்த சொல் ஓவியங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஏனெனில், 

'க'-வுக்கும் 'கா'-வுக்கும் ஒரேயொரு துணைக்கால்தான் வித்தியாசம். 

'க'-வுக்கும் 'கெ'-வுக்கும் ஒரேயொரு ஒற்றைச்சுழி கொம்புதான் வித்தியாசம்.

'க'-வுக்கும் 'கே'-வுக்கும் இரட்டைச்சுழி கொம்பு மட்டும்தான் வித்தியாசம். 

அதாவது, 'க' எனும் சொல்லோவியத்திற்கும், 'கா' எனும் சொல்லோவியத்திற்கும் ஒரேயொரு துணைக்கால்தான் வித்தியாசம். இப்படிப் பார்க்கையில், மொத்தம் 107 தனித்த சொல்லோவியங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மொத்தமுள்ள 247 தமிழ் எழுத்தையும் எழுதிடலாம்.

இந்த 107 தனித்த சொல்லோவியங்களை மேலும் குறைக்க முடியுமா? அதைக் குறைப்பதால் தமிழைக் கற்றல் எளிதாகுமா? என்ற ஆராய்ச்சியின் முடிவாக, வா.செ. குழந்தைசாமி அவர்கள் இந்த 107 தனித்த சொல்லோவியத்தை குறைத்து, 39 தனித்த சொல் ஓவியம் போதும் என்கிறார்கள். அதாவது மூளையில் உள்ள நியூரானில், வெறும் 39 சொல் ஓவியங்களை மட்டும் பதிந்தாலே போதும். அப்பாடா! நம் குழந்தைகளாவது பிழைத்தார்களே!

அது சரி, அதை எப்படி 39 தனித்த சொல்லோவியமாக குறைத்திருக்கிறார்கள் என்று ஆவலாய் இருந்தால் இதை சொடுக்கவும் http://www.tamilvu.org/esvck/index.htm

அது சரி, இந்த சொல் ஓவியத்தைக் குறைப்பதால் பயன் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உலகமயமாக்கப்பட்ட இந்த நாளில், வருங்கால தமிழ் இனத்தின் குழந்தைகள் தமிழை எளிமையாய் கற்க, சீர்படுத்தும் முயற்சிதான் இது.

சிறப்பாய் சிந்திக்கும் சீரிய தமிழ் இனமே! சற்றே சிந்தித்துப் பாருங்கள்; வருங்கால நம் தமிழ் குழந்தைகள், "அ means A-வா?" என்று கேட்டால், தமிழரின் தாய்மொழி தமிழா? ஆங்கிலமா? குழந்தைகளைக் குறைகூறவில்லை; ஆங்கிலத்தை தாழ்ச்சிசெய்யும் நோக்கமும் இல்லை; ஆனாலும், தாய்மொழியாம் தமிழ்மொழி தொடர வேண்டும் எனும் வேட்கைதான். குழந்தைகளுக்கு தமிழ்கற்கும் சூழ்நிலையும், கற்றலில் எளிமையும் கொடுக்க இயலுமல்லவா?

கீழ்கண்டது, நமது வேண்டுகோள்.
இந்த 'ஔ' என்ற உயிரெழுத்துக்கு ஒரு தனித்தன்மையான சொல் சித்திரம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.  ஜப்பானிய மொழியில் ஒரு சொல் உள்ளது: Poke-Yoke; அப்படியெனில், ஆங்கிலத்தில் Fool Proof; அதாவது, சாமானியனும் தவறு இழைக்க முடியாத நிலைப்பாடு. எடுத்துக்காட்டிற்கு சொல்வதாய் இருந்தால் எழுதுகோலின் மூடியை ஒரு குறிப்பிட்ட திசையில் சுழற்றினால் மட்டும்தான் எழுதுகோல் திறக்கப்படும் / மூடப்படும். அதாவது, எங்கெல்லாம் தவறுநேர வாய்ப்பிருக்கிறதோ அங்கேயெல்லாம் இந்த Poke-Yoke பிரயோகிக்கப்படலாம். 

அதுபோல இந்த 'ஔ' என்ற சொற் சித்திரத்தை(குறியீட்டை) சீர்செய்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், இந்த எழுத்து சித்திரம் 'ஓ' என்ற உயிரெழுத்தும் கொண்டுள்ளது; 'ள' என்ற உயிர்மெய்யெழுத்து சித்திரமும் கொண்டுள்ளது. ஆக 'ஔ' வாசிக்கையில் தவறு நேர வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க, 'ஔ' என்ற சொல்லுக்கு, புது சொற்சித்திரம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். இதைத் தமிழ் மூதாட்டி 'ஔ'வையார் கூட ஒப்புக்கொள்ளக்கூடும். இல்லையெனில் ஔவையாரை ஒ-ளவையார் என்று வாசித்து இம்சித்து விடக் கூடும்!





[ ஔ = ''.

  இது எப்டி இருக்கு! ]




தந்தைப் பெரியார் காலத்தில் செய்த எழுத்து சீர்திருத்தங்கள் எளிமையாய் நம் காலத்திற்கு எடுத்துவரப்பட்டது. அதேபோல வரும் தலைமுறைக்கு இன்னொரு எளிமை சீர்திருத்தம் தேவைதானே? இது கலைஞர் காலத்தில்தான் சாத்தியம்; பார்க்கலாம். உலக செம்மொழி மாநாட்டில் இதற்கு அடித்தளம் அமையலாம் என்று நம்புவோமாக.




வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!



பொன்னியின் செல்வன்

அட, அகராதி!




கராதி’ என்றால் என்ன தெரியுமா? 


சமீபத்தில் கமலுக்கு, 50 வருட கலை சேவையை முன்னிட்டு நடந்த பாராட்டு விழாவில்; மேடையில் கமலைப் பார்த்து, “நடிப்புக்கு கமல் ஒரு டிக்ஷனரி” என்று கூறினார்கள். அதற்கு கமல் அடக்கமாகவும் பொறுமையாகவும், “டிக்ஷனரி என்றால், தமிழில் ‘அகராதி’ என்று பெயர்”, என்றார் சிரித்துக்கொண்டே. மேடையில் குழுமியிருந்த எத்தனைப் பேர், கமல் கூறிய ‘அகராதி’-யின் உண்மை அர்த்தம் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. கமல் கூறிய ‘அகராதி’-யின் அர்த்தம் ‘கிருத்துருவம்’, ‘எகனைக்கு-மொகனை’, ‘ஏட்டிக்கு-போட்டி’ போன்றவை. இந்த அர்த்தங்கள் எல்லாம், எந்த அகராதியைப் புரட்டி பார்த்தாலும் இருக்காது!


திருக்குறளின் முதல் குறள்; அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகராதி’ வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; நான்காம் வார்த்தை ‘ஆதி’; அகர+ஆதி = அகராதி.


அகராதிக்கு மற்றுமொரு பெயர் ‘அகரமுதலி’. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகரமுதலி’-யும் ஏறக்குறைய வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; இரண்டாம் வார்த்தை ‘முதல’. ஆக, அகர+முதல+(இ) = அகரமுதலி.


தமிழ் மொழியில் எழுத்துகள்,‘அ’ வில் ஆரம்பித்து ‘ன்’ வரை இருக்கிறது. இவ்வகையில்,திருக்குறளுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது; திருக்குறளின்,முதற் குறளின் முதல் எழுத்து ‘அ’; கடைசிக் குறளின் கடைசி எழுத்து ‘ன்’. ஆஹா! திருக்குறளில் இப்படி மறைத்து மறைத்து எவ்வளவு சூட்சமங்கள் இருக்கிறதோ? தெரிய வில்லை! இப்படி, பொதுவாகப் பார்த்தால் தெரியாமல், மறைத்து வைத்தும் பல பொருள் தருகிறதே திருக்குறள்;அதனால் தான் திருக்குறள் பொதுமறை-யோ! (விளக்கம்: 'மறை' என்றால் வேதம். 'பொது' என்றால் அனைவருக்கும் பொதுவானது. அதாவது எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்ளும் கருத்துகள்.)


'அகராதி’ என்றால் பொருள் தருவது; ‘பொருள்’ என்றால் பொண்,மணி,வைரம்,வைடூரியம் போன்ற ‘பொருள்’ அல்ல; சொற்பொருள் தருவது; அதாவது வார்த்தைக்கு விளக்கம் தருவது.


ஆங்கிலம் ஒரு கடனாளி மொழி.இப்போது ‘ஜெய்ஹோ’ வும் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. கடனாளிகள் பகட்டாக உலவும் காலம் இது; எத்தனை கடன் அட்டைகள் பையில் இருக்கின்றனவோ அதற்கு ஏற்றார் போல் சிகப்பு கம்பள வரவேற்பும் இருக்கும். தமிழோ ஒரு கொடையாளி மொழி. அதுவும், தமிழ் போன்ற செம்மொழிகளில் அகராதி இல்லாமலா? தமிழில், அகராதிகள் தொகுப்பதற்கு முந்தைய காலங்களில் இருந்தவை, நிகண்டு. நிகண்டு என்றாலும் சொற்களின் தொகுப்புதான்;அதாவது, ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது; அல்லது, பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது;அதுவும் செய்யுள் வடிவில் இருக்கும்.


தற்காலத்தில் நிகண்டு இருந்தால் எப்படி இருக்கும்?
உதாரணத்திற்கு, 'ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது'; ‘முடிச்சிடலாம்’ என்றால், சதுரங்கம் விளையாடுபவருக்கு, விளையாட்டை முடிக்கவும்; கபாலிக்கோ,அரசியல்வாதி கை காட்டுபவரை ‘லேசா தட்டி’ கைலாசத்துக்கு அனுப்புவதும்!


அதுவே,'பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது';‘நடிகர்’, ‘அரசியல்வாதி’ என்றால் இரு வேறு சொற்கள்தான்;ஆனாலும், இப்போதோ அவை இரண்டும் ஒரே பொருளையே குறிக்கின்றன். பொருளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.அது அவரவர் கற்பனையைப் பொறுத்தது!


‘நிகண்டு’கள் பெரும்பாலும்அகர வரிசையில் இருக்காது; பாரதியார் ஒரு நிகண்டு தொகுத்திருக்கிறார்; அதன் பெயர் ‘பொருள் தொகை நிகண்டு’. 'நிகண்டு' 'அகராதி' போன்றவற்றை குறிப்பிடும் போது ‘எழுதி இருக்கிறார்’ என்று சொல்ல முடியாது; மாறாக ‘தொகுத்திருக்கிறார்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.தமிழின் முதல் அகராதி(சதுரகராதி) தமிழரால் தொகுக்கப்பட்டது அல்ல. வீரமாமுனிவர் (ஜி.யூ.போப்) தான் முதன் முதலாய் தமிழ் மொழியின் அகராதியைத் தொகுத்தவர். ஆனந்த விகடனும் ஒரு அகராதியைத் தொகுத்து இருக்கிறது. அகராதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என தொல்காப்பியத்திலேயே விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ‘எழுத்தென் படுப அகரமுதல் னகர இறுவாய்’ என்று. 


எவ்வளவோ அகராதிகள் வந்தாலும், ஒரு ஆசிரியரின் பணியை அகராதியால் ஈடு செய்து விட முடியாது. அகராதி, அகராதி தான்; ஆசிரியர், ஆசிரியர் தான்!


இப்போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘அகராதி’ இருக்கிறது; அரசியல்வாதிக்கு என்று ஒரு தனி ‘அகராதி’ இருக்கிறது. “என் கடைசி மூச்சு இருக்கும் வரை, காவிரி நீரை தமிழகம் கொண்டு வர ஓயாமல் பாடுபடுவேன்”, என்பார் அரசியல்வாதி. ஆக! அப்படிப்பட்ட அரசியல்வாதியின் வாழ்நாளில், காவிரிநீர் தமிழகம் வந்து விடாதாம். ஆக! அவர் பாடுபட்டு கொண்டே தான் இருப்பார், போயும் போயும் பாடுபடுவதின் பலனை எல்லாம் நாம கேட்க முடியுமா?


அதிலும் முல்லைப் பெரியாறு அணை விவகார ‘அகராதி’ சற்றே தூக்கல். அகராதியின் அர்த்தம்; நேற்று, மத்திய அரசைக் கை காட்டி; இன்று, கேரள அரசைக் கை காட்டி; நாளை, இது காவிரி பிரச்சினைக்காக கூட்டப்படும் கூட்டம் என கர்னாடகாவை கை நீட்டினாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், எங்கள் அகராதியில்; சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.


அதே போல் கணவன் மனைவிக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. “என்னங்க! இந்த சரவணா தங்க மாளிகை விளம்பரம் சூப்பரா இருக்குல்ல?”, என்று கேட்டால்; அர்த்தமோ, ‘உங்க பொங்கல் போனஸ் எப்ப வருது ?!?’, என்பதுதான்.


ஹரீஷ்

நகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் !





சில காலங்களுக்கு முன் வேலை இல்லாத காலங்களில், அதுவும் வேலை தேடுவதையே வேலையாக கொண்ட காலங்களில், வேலை தேடுதல் முடிந்த பிறகு, நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்றிருந்த சார்லி சாப்ளின் தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தேன்.

அவர் திரைப்படங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய பல படங்களில், சாப்ளின் வேலை வெட்டி இல்லாத, வேலை தேடும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கதா பாத்திரங்களே நிறைய சித்தரிக்க பட்டுள்ளன. பின்னே மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல். நம் இனமடா இவன் !.

நடிப்பில் சிகரம் தொட்டு, அன்பில் மக்கள் மனம் கவர்ந்து சாதனை படைத்தவர் சாப்ளின்.

ஒருவன் வாய் திறக்காமலே பேச முடியுமா. முடியும் என்பதற்கு சாப்ளினே சாட்சி. வாய் திறந்து பேசாமலே அன்பு, பாசம், ஆனந்தம், அசூயை, பயம், கோபம் எனவாக பல உணர்ச்சிகளையும் நடிப்பால் புரிய வைப்பார். புரிய வைப்பார் என்பதை காட்டிலும் உணர வைப்பார் என்பது இன்னும் பொருந்தும்.

மேற்பரப்பில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பாங்கு, ஆனாலும் ஆழத்தில் அன்பிற்கு ஏங்கும் குணமாகவும், மெல்லிய சோகமும் பிணைக்க பட்டிருக்கும் அவர் நடிப்பில்.

'தி கிரேட் டிக்டேடர்' என்ற திரைப் படத்தில், ஹிட்லர் போன்று தோற்றம் அளிக்கும் கதா பாத்திரத்தில், பட முடிவில் நீண்ட நேரம், உலக அமைதிக்கான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசுவார். அதை பார்த்தால் நம் உடல் நடு நடுங்கும். என்ன உணர்ச்சி மிகுந்த ஆழமான அர்த்தமான பேச்சு.

நாம் ஒரு கூட்டத்திற்க்கோ, விருது வழங்கும் விழாவிற்கோ செல்லும் பொது பார்த்தோமேயானால், மக்கள் பல வகையில் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தருவார்கள்.
சிலர் இரு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்; சிலரோ கை கட்டியபடியே விரல்களால் தங்கள் கைகளை தட்டி பாராட்டுவார்கள்;
சிலரோ தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க உட்கார்ந்து கொண்டே கைகளால் தங்கள் தொடையை தட்டுவார்கள்; அப்படிப்பட்டவர்கள், அருகில் இருப்பவர் தொடையை தட்டி மகிழ்ச்சி அடையாதவரை நாமும் மகிழ்ச்சியே அடைகின்றோம்!

தமிழக சட்டசபையில், முதல்வர் பேசுகின்றார். பல அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் பராக்கு பார்த்து கொண்டும் பக்கத்தில் பேசி கொண்டும் இருக்கின்றார்கள்; முதல்வர் கூறுகின்றார், 'இனி டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் என்பது உயர்த்த பட்டு, இரவு பன்னிரண்டு மணி வரை திறந்திருக்கும்'. உடனே மேஜையை தட்டி தட்டி, கட்சி பேதம் இன்றி ஆரவாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

இப்படியாக மகிழ்ச்சியையும், பாராட்டையும் பல விதங்களில் காட்டலாம்.
நம் ஊரிலோ பத்மஸ்ரீ விருதும் ப்ளாக்கில் கிடைக்கலாம்.
உலகின் மிக சிறந்த திரை கலைஞர்களுக்கு தரப்படும், உயரிய விருதாய் கருதப்படும் ஆஸ்கார் விழாவில், சாப்ளினுக்கு honorary ஆஸ்கார் தரப் பட்டது. அப்போது அனைத்து மக்களும் தங்கள் மரியாதையையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும், உங்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று அனைத்தையும் கூறும் விதமாய், அவ்விழா வரலாற்றில் கண்டிராத அளவிற்கு, அதிக நேர standing ovation பெறப்பட்ட மாபெரும் நடிகர் சாப்ளின்.

ஒரு அரசியல் வாதி, ஒருவரை குறிப்பிட்டு 'அவர் சட்டசபைக்கு குடித்து விட்டு வருகின்றார்' என்கின்றார். குடித்து விட்டு வந்ததாக கூறப் படுபவரோ 'இவர் தான் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாரா?' என்கின்றார்.
அவ்ளோ தான் பார்டெர் லைன். இதற்கு மேலே, இவரும் அவரைப் பற்றி பேச மாட்டார்; அவரும் இவரைக் கண்டு கொள்ள மாட்டார்.
அதுதான் ஒரு வாரத்திற்கான செய்தி (விளம்பரம்) கிடைத்து விட்டதே. இதை சுய விளம்பரம் என்று ச்சீப்-ஆக எண்ணி விடக் கூடாது. இவர் அவருக்கும், அவர் இவருக்கும், அர்ச்சனைகளால் கொடுக்கும் விளம்பரம். மக்கள் அவர்களை மறந்து விட கூடாதாம். இவர்கள் மட்டும் மக்களை மறந்து விடலாம். மாக்கள்...!

இப்படியாக அரசியல் வாதிகள் குடிமகன்களை பற்றி கவலை படாமல் குடி காரர்களை பற்றியே கவலை படுகின்றனர்.
இப்படிப் பட்ட அரசியல் வாதிகளும் நடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். என்ன? அவர்கள் மகா கலைஞன் சாப்ளின் போல மக்கள் மனதை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திடும் அளவுக்கு நடிக்க தெரியவில்லை.

நம் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள் ஆகவும் எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றார்கள். இந்த குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு நம்மால் பதிலே சொல்ல முடியாது. இத்தனைக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு காரணம், நாம் முன் எப்போதோ கொடுத்த அரை வேக்காட்டு விளக்கமாக இருக்கக் கூடும்.
இப்படித் தான் ஒரு தந்தை தன் மகனிடம், 'மனுஷங்க செத்தவுடன் திரும்பி இந்த எர்த்ல பொரப்பாங்க' அப்டினார். அந்த குழந்தை ஆச்சர்யமாய் 'அப்டியா!' என்று ஆவென்று கேட்டு கொண்டு இருந்தது. தந்தைக்கோ பெருமிதம், தம் மகன் ஆவென வாய் திறந்து கேட்டு கொண்டு இருந்தானே.
குழந்தை சற்றே வளர்ந்தது. புத்தகம் படித்து கொண்டு இருந்தது. திடீர் என்று ஒரு சந்தேகம். அப்பாவை கூப்பிட்டு 'அப்பா 1930-ல இந்தியாவில் 30 க்ரோர் பீபிள் தான் இருந்திச்சு இப்போ எப்டி 120 க்ரோர் பீபிள் ஆச்சு?'.. 'எப்டிபா செத்தவங்க நாலு நாலா பொறந்தாங்க ?'

அப்பா இப்போது ஆவென பார்த்து கொண்டு இருந்தார். கடிகாரத்தை பார்த்தார், சுற்றும் முற்றும் பார்த்தார். 'தம்பி நேரம் ஆயிடிச்சு பாரு, இன்னிக்கு படிச்சது போதும், வா போய் படுக்கலாம்'.

இப்படிப் பட்ட புத்திசாலித் தனமான குழந்தையாக தான் இருந்தார் சாப்ளின் தன சிறு வயதில். அவர் அம்மா ஒரு மேடையில் பாடி கொண்டு இருந்த போது சில தடங்கல்களால் அவரால் பாட முடிய வில்லை. உடனே கூட்டத்தினர் கூச்சலிட்டனர். உடனே சாப்ளின் தன அம்மா பாட வேண்டிய இடத்தில மேடையேறி பாடினார் மழலைக் குரலில். கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது. கூட்டத்தினர் மகிழ்ச்சியாய் காசுகளை தூக்கி மேடையில் போட்டனர். சாப்ளின் பாடுவதை நிறுத்தி விட்டார். உடனே எல்லோரும் 'பாடு பாடு' என்றனர். சாப்ளின் மழலையாய் 'காசு எடுத்து கிட்டு அப்புறம் பாடுறேன்' என்றார். கூட்டத்தினர் சிரித்து விட்டனர்.

சமீபத்தில் பார்த்த சாப்ளினின் திரைப்பட வரிசையில், ஒரு படத்தை தவிர்த்து, அணைத்து திரைப் படங்களிலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அதே போல் சொல்லி வைத்தார் போல் எல்லா படத்திலும் ஏதாவதொரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்.

ஒரு படத்தை தவிர்த்து என்று சொன்னோமே, அந்த படத்தில் உள்ள விசேஷம் என்ன என்றால், அதில் வரிசையாக பல பெண்களை திருமணம் செய்து கொள்ளுகின்றார். அனால் எந்த பெண்ணையும் காதல் செய்யவும் மாட்டார். என்ன ஒரு முரண்பாடு. முரண்பட்ட படத்தின் பெயர் Monseiur Verdoux.

ஒரே ஒரு திரைப் படத்தில் மட்டும் சாப்ளின் இறப்பதாக திரைக்கதை அமைந்திருகின்றது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு மேடைக் கலைஞன் ஆக இருந்து தன் கஷ்டங்களை மறைத்து, வலியை தெரிய விடாமல், மக்களை மகிழ்ச்சி அடைய செய்து விட்டு மேடைக் கச்சேரியை முடித்து விட்டு வந்து, அடுத்ததாக தன் காதலியின் மேடைக் கச்சேரியை பார்த்து கொண்டே உயிர் விடுகின்றார். படத்தின் பெயர் Limelight.

சாப்ளின் ஒரு நடிப்பு வங்கி, ஆனாலும் இந்த வங்கி இறக்கும் தருவாய் வரையிலும் திவால் ஆனதில்லை. சாப்ளின், வங்கிகளுக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து-இல் தன் இறுதி நாட்களை கழித்தார். பின் அங்கேயே காலமடைந்தார்.

தமிழ் என்ன ஒரு அருமையான மொழி.
இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்தான 'இ' என்ற எழுத்தை வாசிக்கும் போது உள்ள காலத்தை காட்டிலும் இந்த வாக்கியத்தின் கடைசி எழுத்தான 'ம்' என்ற எழுத்தை உச்சரிக்கும் போது உள்ள கால மாற்றம் அதிகமாக இருக்கும்.
இது கால வளர்ச்சியின் தத்துவமும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. எப்போது ஒருவர் மூச்சு விடுவதை முழுமையாய் நிறுத்துகின்றாரோ, அப்போது அவர் பிறந்தது முதல் சேர்த்து வைத்த கால வளர்ச்சி முழுமை அடைகின்றது. இதுவே 'காலமடைதல்'.

இவை இன்றி, இதற்கு இணையான இன்னும் சில வார்த்தைகளான 'சிவபதம்', 'சிவலோகபதவி', 'சுவர்க்கம் சேர்ந்தார்', 'புட்டுகிச்சு', 'பூட்ட கேசு', 'மண்டைய போட்டுட்டார்' போன்ற சொல் ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாம் சந்தோஷமாய் சாப்ளினை மீண்டும் பாப்போம்.

சாப்ளினின் முத்தான மூன்று படங்களாக நாம் கருதுவது
1. THE KID
2. CITYLIGHTS
3. THE CIRCUS
நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கலாம். அதற்காக என்னை போல் வேலையை விட்டு விட்டு VCD வாங்கி பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை. சில சாப்ளின் படங்கள் பார்த்து விட்டு குழந்தைகளுடன் போய் விளையாடி பாருங்கள், குழந்தைகள் உங்களோடு மிக குதூகலமாக விளையாடுவார்கள். அது சாப்ளினின் தாக்கம்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.

சார்லி சாப்ளின் முழு திரைப்பட தொகுப்பும் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன். பர்மா பஜாரில் சொல்லி வைத்து இருக்கிறேன். இப்போது தான் COPY போட ஆரம்பித்து இருகிறார்களாம், 'அட்த்த வாரம் வா வாத்யாரே பூராத்தையும் ரெடி பண்ணிரலாம்' என்கின்றார்.

ஹரீஷ்

இந்தி(ய) மொழி !!



தமிழ் மக்களுக்கு இந்தி மொழி அவசியமா என்று கேட்கிறீர்கள்.

ஒரு வார்த்தையில் சொல்வதாய் இருந்தால், 'ஆம்'.

ஒரு வாக்கியத்தில் சொல்வதாய் இருந்தால்,
'தாய் மொழியாம் தமிழ் மொழியும்; தேச இனைப்பு மொழி, மற்றும் அலுவல் மொழியாம் இந்தியும் தெரிந்து கொள்ள வேண்டும்'.

ஒரு பாராவில் கூறுவதாய் இருந்தால்,
'நம் தாய் மொழி தமிழ். அதை நீங்கள் மறைத்தாலும் மறுத்தாலும் பேசித்தான் ஆக வேண்டும்.
இந்தி நம் தேசிய இனைப்பு மொழி. தமிழகம் இந்தியாவில் இருப்பதால் தேசிய இனைப்பு மொழியும் அவசியமே.
இவற்றோடு ஆங்கிலமும் அவசியமே, அப்போது தான் நீங்கள் 'திரை கடல் ஓடி திரவியம் தேடலாம்'.
அப்போது தான் 'WORLD IS FLAT' ஆகும், இல்லை என்றால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியது தான். கிணற்று தவளையாய் காலம் தள்ள வேண்டியது தான்'.


ஒரு பாராவிற்கும் மேலே சொல்லி பாடுபடுத்த வேண்டும் என்றால்,
இரயிலை மறித்தவர்கள் மற்றும் தார் பூசி அழித்தவர்கள் பேரன் பேத்திகள் படித்தது என்ன கார்ப்பரேஷன் பள்ளியிலா ?
இல்லையே, எல்லாம் கடைந்து எடுக்க பட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் (with attached Hindi).
இவை எல்லாம் இந்தி எதிர்ப்பின் வெளிப்பாடா? இல்லையே?

அனால் நாம் வாயை திறந்தாலோ 'இந்தி திணிப்பு' என்று கூறுவர்.
செவ்வாய் கிரகத்தில் இருந்து ஏலியன்ஸ் வந்து மார்ஸ் மொழியா திணித்தது?
நம் இந்தியாவில் பெரு வாரியான மக்களால் பேசப்படும் இந்தியை தானே தெரிந்து கொள்ள சொல்கின்றார்கள்.

தமிழை செம்மொழி ஆக்கி இருக்கின்றோம் என்கின்றீர்கள்.
இருக்கட்டும் .செம்மொழி ஆக்கிய பிறகு தமிழகத்தில் எத்தனை பேர், தமிழையாவது எழுத படிக்க தெரிவதில் கூடி இருக்கிறார்கள்?

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், என்றார் பாரதி.
அவர் சொல்லலாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது, ஏனெனில் அவர் தமிழ் கவிஞன்.
மேலும் அவருக்கு அந்த தகுதியும் இருக்கின்றது, ஏனெனில் அவருக்கு பல மொழிகள் தெரியும்.

ஒரு மொழி மட்டும் தெரிந்து கொண்டு, இவர்கள் பேசுகின்ற பேச்சு இருக்கின்றதே, 'நகர்கின்ற ரயிலில், தண்டவாளத்தில் தலை வைத்தோம்' என்று கூறி இன்னும் எவ்வளவு காலம் தான் தள்ள போகின்றீர்கள் தெரியவில்லை. கேட்டால் இந்தி எதிர்ப்பாம்.
ஆமாம் இந்த வீண் வெட்டி பேச்சாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை ரயிலும் தண்டவாளமும் ஒன்றையே குறிக்கின்றன என்று. ரயில் என்ன மயிலா நகர்வதற்கு? வேண்டுமானால் புகை வண்டி கூவுவது உங்களுக்கு குயில் போல் இருக்கலாம்.

உங்களை எல்லாம் யார் தலை வைக்க சொன்னது.
ஒரு தண்டவாளத்தில் கால் வைத்து, மற்றொரு தண்டவாளத்தில் கழுத்து வைத்து, நடுவில் உடலை வைத்து புகை வண்டியை ஓட வைத்திருந்தால் இந்நேரத்தில் தமிழகத்தில் குடும்ப அரசியலாவது குறைந்திருக்கும்.
.
(மன்னிக்கவும், நம்மிலும் பெரியவர்களை இவ்வாறாக கூறுவதாக தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். என்ன இருந்தாலும் தலைவர்கள் மேல் உள்ள நல்ல அபிப்ராயத்தால் அவர்கள் தவறுகளை சுட்டி காட்டுவது தவறு இல்லை)

மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதால் நம் தமிழ் மொழி அழியாது.
சொல்லப் போனால், 'பல நாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்திடுவோம்' என பாரதி கூறியது போல் செய்தால் தமிழுக்கு புது வரவுகளே கிடைக்கும்.

இங்கு சில நேரங்களில் தமிழை வாழ வைக்க ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வாசிகளை அல்லவா நம்ப வேண்டி இருக்கிறது.

தமிழ் நண்பன் ஒருவனும், இந்தி நண்பன் ஒருவனும் ஹோட்டலில் பார்சல் சொல்லி இருந்தார்கள்.
பார்சல் வர லேட் ஆகிவிட்டது. இந்தி நண்பன் கேட்டான், 'வடா ஆயா ஹே ? '
தமிழ் நண்பன் கூறினான், 'ஆமாம் ஆயா சுட்ட வடை தான் !' என்று.
இதெல்லாம் தேவையா ...

சென்னை கடற்கரையில் இந்தி நண்பன் தமிழ் நண்பனை பார்த்து, 'ஸீதா ராஸ்தா ஹே க்யா? ' என்றான்.
தமிழ் நண்பன் கூறினான், 'இங்கே கண்ணகிக்கு தான் சிலை இருக்கு, சீதைக்கு இல்லை. அதுவும் சில நேரம் கானா போய்டும். அப்புறம் திடீர்னு வரும். ஆனா ராமர் பத்தி எதுவும் என்னிடம் கேட்காதே !'

சிரிக்காதீர்கள் .... இதுவும் தேவையா ...

அடிக்கடி தந்தி அடிக்கும் தலைவர்களுக்கு வேண்டுமானால் இந்தி தேவை இல்லாமல் இருக்கலாம். நமக்கு இந்தி அவசியமே !
நமது அண்டை மாநிலங்களின் மொழி தெரிந்து கொள்வதால் பாதகமில்லை.
அதே நேரத்தில்,
நம் தேச இனைப்பு மொழி, மற்றும் அலுவல் மொழியாம் இந்தி தெரிந்து கொள்ளா விட்டால் நமக்கு ஒரு சாதகமுமில்லை !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்