இன்றைய போலி அரசியல்வாதிகள் பெறும் அன்பளிப்பை(!) புறந்தள்ளுவோம். அந்த அன்பளிப்பும்(!) பிச்சை பெறும் வகையை சேர்ந்தது!
இராணிய கவிதை ஒன்று இருக்கிறதாம்; அதாவது, ஒரு காதலன் காதலியை பார்த்து, “ஏ… காதலியே! உன் இதயத்தை என்னிடம் கொடு. அதற்கு பரிசாக இந்த சாமர்கண்ட் நகரையே தருகிறேன்!”, என்கிறானாம். என்ன ஆச்சரியம் என்றால், அந்த சாமர்கண்ட் நகரமோ அந்த காதலனுடையது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? அதில் இருக்கும் காதல் ரசம், சாம்பார் இவற்றை விட்டுவிட்டுப் பார்த்தால் தெரிவது என்னவெனில், நம்முடையதாக இல்லாவிட்டாலும் தானம் செய்வதாக எளிதாகக் கூறிவிடலாம்! இப்படித்தான் ஆங்கிலேயர்கள், இந்தியாவை இந்தியர்களிடமே கொடுத்தார்களோ என்னவோ!
பிச்சைக்காரர்கள் வார்த்தையில் வித்தை புரிவர். அவர்களும் போலி அரசியல் வாதியின் வார்த்தை விளையாட்டுகளைப் பல நேரங்களில் புரிவார்கள். பின்னே என்னங்க, பார்க்கிறவரை எல்லாம் “சாமி…” என்கிறார். பத்து பைசா என்றால் – “தரும பிரபு!” ஒரு ரூபாய் என்றால் – “தரும மஹா பிரபு!”
பிச்சைப் எடுப்பது கேவலம் எனில் பிச்சைப் போடுவது அதை விட கேவலம். பிச்சையையும் உதவியையும் ஒன்று எனக் கருதக் கூடாது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கொள்கை இதில் ஒரு நல்ல கொள்கை. அதாவது உதவி என்பது, உணவுக்கும், மருத்துவத்திற்கும், கல்விக்கும் ஆக இருக்க வேண்டும் என்பது தான் அது. இதை வரிசை படுத்தி இருப்பதும் சிறப்பாக இருக்கிறது.
பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியுமா? அதாவது, பிச்சைக்காரர்கள் என்றால் பிச்சைக்காரர்களை அல்ல; அவர்கள் எடுக்கும் பிச்சை எனும் செயலை. கொடுப்பவர் இருப்பதால் தான் பிச்சை எடுப்பவர்களும் இருக்கிறார்கள். பத்து பைசா பிச்சை போட்டு விட்டு, ஐடி ரிடர்ன்ஸ் 80CC-ல் டிடக்ஷன் கிடைக்குமா என்று யோசிப்போர் ‘தரும பிரபு’-வாகவே சில நொடிகள் பூஜிக்கப்படுவதில் குறையொன்றுமில்லை.
பிச்சைப் இடுகிறவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை, ‘நாம் ஒருவரின் சுய மரியாதையை குழி தோன்டிப் புதைக்கிறோம்; ஒருவனை சோம்பேறி ஆக்குகிறோம்; சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறோம்’, என்று. உழைக்காத ஒருவனுக்கு பிச்சைப் போடுவதால், பிச்சைப் பெற்றவரின் போலி வாழ்த்துரையால் புண்ணியம் வருகிறதோ என்னமோ தெரியாது, ஆனால் பிச்சை இட்டதால் பாவம் வந்து சேரும்.
இரண்டு கைகளும், கால்களும், கண்களும் சரியாய் இருப்போருக்கும்; குறிப்பாய், சிறுவனாய் இருப்போருக்கு பிச்சைப் போடுவதை எப்படி ஏற்க முடியும்? கற்கை நன்றே … கற்கை நன்றே …. பிச்சை புகினும் கற்கை நன்றே … என்று கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று இருக்கையில்; பிச்சை எடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டுள்ள சிறாரை ஊக்குவிப்பது தவறுதானே?
சில நேரங்களில் பிச்சை கேட்பவர், நமக்கு தெரிந்த; நமக்கு தெரிந்து மறைந்த நபர் போல இருக்கக் கூடும். அந்த சமயங்களில் மட்டும் கை தானாகவே பர்ஸை நோக்கி பொகிறதே! அது ஏனோ தேரியவில்லை! அதை கேள்வி நியாயங்களுக்கு உட்படுத்துவது கடினம் தான்.
பிச்சைக் காரர்களுக்கு குறும்பும் அதிகம். பாருங்கள்! பிச்சைக் காரன் ஒருவன், ஒரு வீட்டில் சோறு வாங்கி கொண்டு விட்டு, “அம்மா…. சோறு ஆக்கின கைக்கு, தங்கத்திலேயே நல்ல வாட்ச் வங்கி போடுங்கம்மா” என்று கூறி சமையல் செய்தவருக்கு (வீட்டுக்காரருக்கு!) பாராட்டு மழை பொழிந்து செல்கிறார்.
“அமெரிக்காகாரனுக்கு ஏதாச்சும் பொறுப்பு இருக்கா? இந்த recession வந்தாலும் வந்திச்சு. ‘தருமபிரபு’ எல்லாம் ‘கருமிபிரபு’வால்ல ஆயிட்டான். நல்ல வேளை இது வரை சேத்த பணத்தை எல்லாம் எந்த பேங்க்லயும் போடாததால திவாலாகாம தப்பிச்சோம்”. இப்படியாக, குறும்பாயும் உலகத்தை நோக்குகிறார்கள்.
சிறு துளி பெரு வெள்ளம்… புரியவில்லையா? பத்து பைசா, கால் ரூபா இப்படி இத சேர்த்தாலும் கோடி வரும்ங்க. மும்பைல இருக்க பிச்சைக்காரர்களின் வருட கலக்ஷன் 180 கோடியாம். இத எங்க போய் சொல்றது?
இப்போது எல்லாம் பிச்சைக்காரர்கள் மாநகரங்களை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்து விட்டனர். எல்லாம் வருமான நோக்கம் தான். பிச்சைக்காரர்களுக்கும் ஏரியா இருக்கிறது. அது கூகில் மேப்பை காட்டிலும் துள்ளியமானதும் கூட. சமீபத்தில், டெல்லியில் பிச்சைக்காரர்களை கைது செய்து நகரத்தை விட்டு அகற்றும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. சில மாநிலங்களில் பிச்சை எடுப்பது குற்றம் என்று கூட சட்டம் இருக்கிறது. டெல்லியிலும் கூட அப்படியே. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. டெல்லி உயர் நீதி மன்றம், ‘வறுமை ஒரு குற்றம் இல்லை; பிச்சைக்காரர்கள் நகரை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டியது இல்லை; அப்படி செய்தால், அது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம்’, என்று குறிப்பிட்டுள்ளது.
ஆம்! ஒழிக்க வேண்டியது பிச்சைக்காரர்களை அல்ல பிச்சை எனும் செயலை!
ஆம்! ஒழிக்க வேண்டியது பிச்சைக்காரர்களை அல்ல பிச்சை எனும் செயலை!
ஹரீஷ்



