Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

பிச்சை ஒழியுமா?


லகமே ஒரு நாடக மேடை! இதில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில், சதா சர்வ காலமும் கையில் பாத்திரம் ஏந்தும் கதாபாத்திரம் தான், பிச்சைக்காரர்கள் எனும் கதாபாத்திரம்; மக்கள் போடும் எந்த பதார்த்ததையும், பாத்திரத்தில் ஏந்தி பிழைப்பவர் தான், இந்த பிச்சைக்காரர்கள். பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியவில்லை என்பது இன்றைய எதார்த்தம் ஆகி விட்டது. ஆனாலும் அவர்களை பழிக்கத்தான் செய்கிறோம்.


இன்றைய போலி அரசியல்வாதிகள் பெறும் அன்பளிப்பை(!) புறந்தள்ளுவோம். அந்த அன்பளிப்பும்(!) பிச்சை பெறும் வகையை சேர்ந்தது!


?ui=2&view=att&th=124ec6bb8a88b736&attid=0.1&disp=attd&realattid=ii_124ec6bb8a88b736&zw[இப்படி, அரசியல்வாதிகளை குறிப்பிடும் போது ‘போலி அரசியல்வாதி’ என்று எழுதிவிடுவது ஒரு சேஃப்டி. பின்னால யாராச்சும் பிரச்சினை பன்னினால், “நாங்கள் போலி அரசியல்வாதியைப் பற்றி அல்லவா கூறினோம்; நீங்கள்…............?” என்று கூறி வாயடைத்துவிடலாம். ]




இராணிய கவிதை ஒன்று இருக்கிறதாம்; அதாவது, ஒரு காதலன் காதலியை பார்த்து, “ஏ… காதலியே! உன் இதயத்தை என்னிடம் கொடு. அதற்கு பரிசாக இந்த சாமர்கண்ட் நகரையே தருகிறேன்!”, என்கிறானாம். என்ன ஆச்சரியம் என்றால், அந்த சாமர்கண்ட் நகரமோ அந்த காதலனுடையது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? அதில் இருக்கும் காதல் ரசம், சாம்பார் இவற்றை விட்டுவிட்டுப் பார்த்தால் தெரிவது என்னவெனில், நம்முடையதாக இல்லாவிட்டாலும் தானம் செய்வதாக எளிதாகக் கூறிவிடலாம்! இப்படித்தான் ஆங்கிலேயர்கள், இந்தியாவை இந்தியர்களிடமே கொடுத்தார்களோ என்னவோ!


பிச்சைக்காரர்கள் வார்த்தையில் வித்தை புரிவர். அவர்களும் போலி அரசியல் வாதியின் வார்த்தை விளையாட்டுகளைப் பல நேரங்களில் புரிவார்கள். பின்னே என்னங்க, பார்க்கிறவரை எல்லாம் “சாமி…” என்கிறார். பத்து பைசா என்றால் – “தரும பிரபு!” ஒரு ரூபாய் என்றால் – “தரும மஹா பிரபு!”


பிச்சைப் எடுப்பது கேவலம் எனில் பிச்சைப் போடுவது அதை விட கேவலம். பிச்சையையும் உதவியையும் ஒன்று எனக் கருதக் கூடாது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கொள்கை இதில் ஒரு நல்ல கொள்கை. அதாவது உதவி என்பது, உணவுக்கும், மருத்துவத்திற்கும், கல்விக்கும் ஆக இருக்க வேண்டும் என்பது தான் அது. இதை வரிசை படுத்தி இருப்பதும் சிறப்பாக இருக்கிறது.


பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியுமா? அதாவது, பிச்சைக்காரர்கள் என்றால் பிச்சைக்காரர்களை அல்ல; அவர்கள் எடுக்கும் பிச்சை எனும் செயலை. கொடுப்பவர் இருப்பதால் தான் பிச்சை எடுப்பவர்களும் இருக்கிறார்கள். பத்து பைசா பிச்சை போட்டு விட்டு, ஐடி ரிடர்ன்ஸ் 80CC-ல் டிடக்ஷன் கிடைக்குமா என்று யோசிப்போர் ‘தரும பிரபு’-வாகவே சில நொடிகள் பூஜிக்கப்படுவதில் குறையொன்றுமில்லை.


பிச்சைப் இடுகிறவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை, ‘நாம் ஒருவரின் சுய மரியாதையை குழி தோன்டிப் புதைக்கிறோம்; ஒருவனை சோம்பேறி ஆக்குகிறோம்; சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறோம்’, என்று. உழைக்காத ஒருவனுக்கு பிச்சைப் போடுவதால், பிச்சைப் பெற்றவரின் போலி வாழ்த்துரையால் புண்ணியம் வருகிறதோ என்னமோ தெரியாது, ஆனால் பிச்சை இட்டதால் பாவம் வந்து சேரும்.


இரண்டு கைகளும், கால்களும், கண்களும் சரியாய் இருப்போருக்கும்; குறிப்பாய், சிறுவனாய் இருப்போருக்கு பிச்சைப் போடுவதை எப்படி ஏற்க முடியும்? கற்கை நன்றே … கற்கை நன்றே …. பிச்சை புகினும் கற்கை நன்றே … என்று கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று இருக்கையில்; பிச்சை எடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டுள்ள சிறாரை ஊக்குவிப்பது தவறுதானே?


சில நேரங்களில் பிச்சை கேட்பவர், நமக்கு தெரிந்த; நமக்கு தெரிந்து மறைந்த நபர் போல இருக்கக் கூடும். அந்த சமயங்களில் மட்டும் கை தானாகவே பர்ஸை நோக்கி பொகிறதே! அது ஏனோ தேரியவில்லை! அதை கேள்வி நியாயங்களுக்கு உட்படுத்துவது கடினம் தான்.


பிச்சைக் காரர்களுக்கு குறும்பும் அதிகம். பாருங்கள்! பிச்சைக் காரன் ஒருவன், ஒரு வீட்டில் சோறு வாங்கி கொண்டு விட்டு, “அம்மா…. சோறு ஆக்கின கைக்கு, தங்கத்திலேயே நல்ல வாட்ச் வங்கி போடுங்கம்மா” என்று கூறி சமையல் செய்தவருக்கு (வீட்டுக்காரருக்கு!) பாராட்டு மழை பொழிந்து செல்கிறார்.


“அமெரிக்காகாரனுக்கு ஏதாச்சும் பொறுப்பு இருக்கா? இந்த recession  வந்தாலும் வந்திச்சு. ‘தருமபிரபு’ எல்லாம் ‘கருமிபிரபு’வால்ல ஆயிட்டான். நல்ல வேளை இது வரை சேத்த பணத்தை எல்லாம் எந்த பேங்க்லயும் போடாததால திவாலாகாம தப்பிச்சோம்”. இப்படியாக, குறும்பாயும் உலகத்தை நோக்குகிறார்கள்.


சிறு துளி பெரு வெள்ளம்… புரியவில்லையா? பத்து பைசா, கால் ரூபா இப்படி இத சேர்த்தாலும் கோடி வரும்ங்க. மும்பைல இருக்க பிச்சைக்காரர்களின் வருட கலக்ஷன் 180 கோடியாம். இத எங்க போய் சொல்றது?


இப்போது எல்லாம் பிச்சைக்காரர்கள் மாநகரங்களை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்து விட்டனர். எல்லாம் வருமான நோக்கம் தான். பிச்சைக்காரர்களுக்கும் ஏரியா இருக்கிறது. அது கூகில் மேப்பை காட்டிலும் துள்ளியமானதும் கூட. சமீபத்தில், டெல்லியில் பிச்சைக்காரர்களை கைது செய்து நகரத்தை விட்டு அகற்றும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. சில மாநிலங்களில் பிச்சை எடுப்பது குற்றம் என்று கூட சட்டம் இருக்கிறது. டெல்லியிலும் கூட அப்படியே. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. டெல்லி உயர் நீதி மன்றம், ‘வறுமை ஒரு குற்றம் இல்லை; பிச்சைக்காரர்கள் நகரை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டியது இல்லை; அப்படி செய்தால், அது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம்’, என்று குறிப்பிட்டுள்ளது. 

ஆம்! ஒழிக்க வேண்டியது பிச்சைக்காரர்களை அல்ல பிச்சை எனும் செயலை! 


ஹரீஷ்



கணக்கு !!! !+!-!x!-! !!!



இது வெண்டைக்காய் விவகாரம்.

'மதம்' பெரிதா? 'மனிதம்' பெரிதா? என்று கணித முறையில் ஆராய்ந்தால், 'மனிதம்' தான் சிறந்தது எனத் தெரியவரும்.
வார்த்தை ஒன்று : {ம, த, ம் }
வார்த்தை இரண்டு : {ம, னி, த, ம் }
எண்  கணித முறையில் உள்ள செட் (Set), சப் செட் (Sub set) மற்றும் சூப்பர் செட் (Super Set) வழி பார்த்தோமேயானால், 'மனிதம்' என்ற வார்த்தையில், {ம, த, ம்} என்று, மதத்தின் அணைத்து எழுத்துக்களும் உள்ளன. அப்படி பார்க்கையில், 'மனிதம்' சூப்பர் செட்(Super set), 'மதம்' சப் செட்(Sub set).
ஆகா 'மனிதம்' தான் சிறந்தது. கணிதம் வாழ்க !!!

உலக தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையான, எண் கணித வளர்ச்சிக்கான பணிகளில், இந்தியாவின் பங்களிப்பு ஏதேனும் உண்டென்றால்; ஒன்றுமில்லை.
ஒன்றுமில்லை ?
ஆம்.... 'ஒன்றுமில்லை' ...
சற்றே பொறுப்போம்.
'ஒன்றுமில்லை' என்பதை, கணிதத்தின் படி கூற வேண்டும் என்றால், 'பூஜியம்' என்று தான் கூற வேண்டும்.
ஆக, இந்த 'ஒன்றுமில்லை' எனப்பட்ட 'பூஜியத்தை' உலகுக்கு தாரை வார்த்தது நமது இந்திய தேசம் தான்.

அதிலும் இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் இருக்கும் இரண்டு எண்களாக கருதப்படுவது.
பூஜியம் (0); மற்றும் ஒன்று (1).
இந்த இரண்டு எண்களும் தான் தகவல் தொழில் நுட்பத்தின் இரு கண்கள்.
இவற்றை இன்னும் பல விதங்களில் கூறுவது உண்டு. அவையாவன,
ஆன் (ON) - ஆஃப் (OFF)
எஸ் (YES) - நோ (NO)
ட்ரூ (TRUE) - ஃபால்ஸ் (FALSE)
இதையே தமிழில் மொழி பெயர்க்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளாமல் தோன்றுவது,
வ்வரும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - ஆனா வ்வராது .....

இந்த 'பூஜியம்' என்பது இல்லாது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், பல வேடிக்கைகள் நடக்கலாம். உதாரணத்திற்கு நாம் வாங்கும் சம்பளத்தில் பூஜியத்தை எடுத்து விட வேண்டியதுதான்.
அதாவது ரூபாய் 3500 என்று இருந்தால், ரூபாய் 35 ஆகி விடும். இவை எல்லாம் நம்மை போன்ற சாமானிய பட்டவர்களுக்குத் தான் இப்படிப்பட்ட கவலை. அதுவே தமிழக முதல்வராய் இருந்து, 1 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கவலை வந்து விடாது, ஏனென்றால் வாங்கும் சம்பளத்தில் தான் பூஜியம் இலையே. அதிலும் 9 ராசி எண்ணாக அமைந்து விட்டால், ஒரே குஷி தான்.

நம் குழந்தைகள், நிஜத்தில் புத்திசாலிகள் தான். நாம் தான் அவர்களை மனனம் செய்ய வைத்து, நியூரான்களை நசித்து விடுகின்றோம்.

ஒரு பொறியியல் மாணவனிடமும், ஒரு சிறு குழந்தையிடமும் ஒரே கணக்கு கேள்வி கேட்கப் படுகின்றது.
மொத்தம் மூன்று மூன்றுகளை உபயோகிக்கலாம். அதாவது 3, 3, 3.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் விடை 24 வர வேண்டும் என கேட்கப்படுகின்றது.
இதற்கு பொறியியல் மாணவன், கீழ் கண்டவாறாக விடை அளித்தான்.
= 3, 3, 3
= (3^3) - 3
= 27 - 3
= 24
விடை சரியான விடைதான்.
அதே கேள்விக்கு சிறு குழந்தை கீழ் கண்டவாறாக விடை அளித்தான். ஆனால் விடை கொண்டு வந்த விதம் தான் வேடிக்கை.
முதல் மூன்றை (3) திருப்பி இரண்டாம் மூன்றோடு (3) ஓட்டினான். இப்போது கையில் இருப்பது (8).
இப்போது இந்த எட்டை மீதம் இருந்த மூன்றோடு பெருக்கி விட்டான்,
= 3, 3, 3
= 8, 3
= 8 x 3
= 24
கெட்டிகார பிள்ளைகள்...

கணக்கில் சிறந்தவர்களை, 'கணக்குல புலி' என்கிறோம். புலி என்னைக்கு கணக்கு படித்தது ? என்று எண்ணி பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.
ஒரு வேளை இப்படியும் இருக்குமோ ? ...
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ ? ......
புலியின் ஓடும் வேகத்திற்கு, ஈடான வேகத்தில் கணக்கு போடுபவரைத்தான் இப்படி 'கணக்குல புலி' என்று சொல்லுகின்றார்கள் போலும் ?
அப்படிப் பார்த்தால், நாமெல்லாம் 'கணக்குல மான்' ; கேள்வி கேட்டவுடனேயே பதுங்கி விடுவோம். பிறகு இரண்டு கால் பாய்ச்சலில் ஓடியும் விடுவோம்.

கல்லூரியில், கணக்கு வாத்தியார் வகுப்பு முடிந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றவுடன், என்ன தாலாட்டு சத்தத்தையே காணோம், என்று தூக்கம் களைந்து எழுந்து பார்த்தால்; கரும் பலகையில், நாள் பட்ட கொத்து பரோட்டாவை பிச்சு போட்ட மாதிரி கிறுக்கி இருக்கும். முதல் பெஞ்ச் நண்பனிடம்  போய், 'இது என்னடா?' என்று விசாரித்தால், 'மாட்ரிக்ஸ்'(Matrix) என்பான். நாமோ புரியாதவனாய், 'ஃபஸ்ட் பார்ட்டா ? செகண்ட் பார்ட்டா ?' என்போம்.
இப்படி, பல நாள் முதல் பெஞ்ச் விசாரிப்பில் வெளிப்படுவன, லக்ராஞ்சே (Lagrange), ஃபோரியர் (Fourier), ஆயிலர் (Euler) எனப்படுவன.

இந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இதெல்லாம் சொல்லித் தர மாதிரியான கல்லூரி எங்காவது கண்டால் சொல்லி அனுப்பவும்.

இவையன்றி கணக்கு பரீட்சை முடிந்தவுடன் தேர்வு அறைக்கு பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பல துணுக்கு சீட்டுகள் கிடைக்கலாம். இப்போதெல்லாம் கையெழுத்து பிரதியுள்ள புத்தகங்களுக்கு பெருத்த மதிப்பிருக்கின்றது. இந்த குப்பைத்  தொட்டியைக் கிளறினால் , பல கையெழுத்துகள் அடங்கிய ஒரு முழு இன்ஜினியரிங் மேதமேடிக்ஸ் புத்தகம் கிடைக்கலாம்.

பதிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுக்கோள், தலையனை அளவு உள்ள புத்தகங்களுக்கு பதில், கைக்கு அடக்கமான வடிவில், எடை குறைவான அளவில் வெளியிட்டால் உங்கள் புத்தகங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கும். மாணவர்களும் ஆர்வத்துடன் வாங்குவார்கள். புத்தக சுமை குறையுமே என்ற ஒரே (!!!) ஆர்வத்தில் தான் இதைக் கேட்கின்றோம்.

அன்று, காந்திஜி இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒன்றுபட்டு பாடுபட்டு இந்திய விடுதலை வாங்கித்தந்தார்.
இன்று, கலாம் இந்திய இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, வளர்ந்த இந்தியாவை அடைய பாடுபடுகின்றார்.
இது 'இன்டெக்ரல் கால்குலஸ்' (Integral Calculus) கணக்கு.

மாறாக, ஏழு அமைச்சரையும் அழுது வடிந்து தான் கொடுத்தார்கள் என்பதாலும், தன் மத்திய அமைச்சர் மகனுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரியாது என்பதால், குடும்பம் சிறுமை படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மீண்டும் ஆரிய திராவிடர் பிரிவினையை தூண்டி விட முயற்சி செய்யலாம்,சில தமிழ் தலைவர்கள்.
இது 'டிஃபெரென்ஷியல் கால்குலஸ்' (Differential Calculus) கணக்கு.


குழந்தைகளுக்கு கணக்கு சொல்லி தரும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு அப்பா அவர் சிறு குழந்தைக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அப்பா கூறுகின்றார், 'ஒன்னும் ஒன்னும், ரெண்டு '.
குழந்தை, 'போப்பா, நீ பொய் சொல்லுற... அன்னிக்கு என் தலைய தடவி விட்டுக்கிட்டே, அம்மாகிட்ட ஒன்னும் ஒன்னும் மூணு -ன்னு சொன்ன',
அப்பா சிரித்துக்கொண்டே, 'டேய், அது வேற கணக்குடா'
குழந்தை, 'அப்போ அத மொதல்ல சொல்லிக்கொடு' !!!!!
இது குழந்தை கணக்கு !

கட்சி படு தோல்வி அடைந்து விட்டதால், எதிர் கட்சி தலைவராய் அமர மாட்டேன் என்று கூறுவது.
எம்.பி. எண்ணிக்கை குறைந்து விட்டதால், கொட நாட்டில் இருந்து அடுத்த காய் நகர்த்தலாம் என்று எண்ணுவதும்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை கூட்டணி தாவினால் பலம் பெருகும், என்று எண்ணி ஏமாறுவது.
இவை எல்லாம் அரசியல் கணக்கு !


சில சமயங்களில் சிங்கிள் டீ குடிக்க கூட காசு இருக்காது. மாச கடைசியாக வேற இருக்கும்.
வேறு வழியே இல்லாமல், நண்பருடன் நாயர் கடைக்கு சாயா குடிக்க சென்றால்,
'சேட்டா, ரெண்டு டீ.. ஸ்ட்ராங்கா......... '
'என்ட  மோனே, ஸ்ட்ராங்காயிட்டு வேணுமோ ? ............ போன மாச பாக்கியே இன்னும் கொடுத்திட்டு இல்லியே ..... '
'சேட்டா, இன்னும் ஒரு வாரம்தான் , சம்பளம் வந்து விடும் , கவலையே படாதீங்க'
டீ குடித்த பின், மீண்டும் அடுத்த மாச கடைசியில் தான் நாயர் கடைக்கு விஜயம் செய்வோம்.
இது காந்தி கணக்கு !!

ஹரீஷ்

பாட்டி !!!



சௌந்தர்யவதி! ஆனாலும் துர்பாக்கியசாலி! அவள், சிறு வயதிலேயே தன் குங்குமம் பறி கொடுத்தவள்.

அவள் கூறிய கதைகளும், காட்டிய அன்பும், ஆட்டிய தூளியும்; இனி நான் எங்கேப் பெற முடியும்?

அவ்வப்போது வந்து, " ந்தா... காசு கொடு " ன்னு கேட்டு வாங்கிக்குவா. நான், புன்னகையோடும் மரியாதையோடும், அவளுக்கு, கையில் இருப்பதைத் தருவேன். எனக்கு தெரியும்; அவள் சேர்க்கும் பணம் என் அண்ணன் திருமணத்திற்கு அவள் தாலி வாங்கி தரணும்ன்னு ஆசைப் படுறது.

அவளுக்கு, எவ்வளவோ ஆசைகள் இருக்கும், இருந்து கொண்டும் இருக்கும். ஆனாலும், அவற்றை எப்போதாவது யாரிடமாவது சொல்லியிருப்பாளா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனாலும், அவள் ஆசை இன்னதென்று தெரிந்து விட்டால் அதை அவளுக்கு சொல்லாமலே செய்வதில் ஒரு பேரானந்தம் இருக்கும்!

அவள் கேட்கறது கோயிலுக்காக இருக்கும்; அவளுக்கு இருக்காது. என்னதான் கோயிலுக்கு பணம் தருவது எனக்கு அவ்வளவாக உடன் பாடு இல்லை என்றாலும், கடவுள் சிலைகள் மேல் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்றாலும், அவள் கேட்டால் கொடுத்து விடுவேன். கடவுளே கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா!

உலகில் நான் மதிக்கும் மிகப் பெரிய பெண், பாட்டி.

அவள் ஆக்கும் அமுது அமுதம். ராத்திரியில் வெளில நான் சாப்பிடக் கூடாது, வீட்டில் வந்து சாபிடனும்ன்னு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் இயக்க கற்றுக் கொண்டவள்.

நாங்கள் விருப்பப்பட்டோம் என்பதற்காகவே 'அறிவொளி' இயக்கத்தில் 'அ', 'ஆ' கற்று கொண்டு அவள் பெயரை எழுத பழகினாள். அவ என்ன கம்ப ராமாயணமா படிக்கப் போறா?

அவள், கிராமத்திலும் சிற்றூரிலும், தினமும் வெள்ளந்தியான மனிதர்களைப் பார்த்து பேசி வந்தவள்; அதுவே அவளுக்கும் பிடிக்கும். இப்போதோ, நகரத்தில் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொண்டு இருக்கிறாள். ஏனெனில், நானும் என் அண்ணனும் நகரத்தில் இருக்கின்றோம், என்ற ஒரே காரணத்தினால், அவள் இந்த நகரம் என்னும் நரகத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.
வள்ளுவன் வாக்கில் சொல்வதாய் இருந்தால்
      அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

      பிறன் போலே நோக்கப் படும்.

பணம் இல்லை என்றால் பெற்ற தாயாலும் கூட பிறர் போல பார்க்க படுவார் என்கின்றார் வள்ளுவர். அந்த அளவுக்கு பணம் தன் வேலை காட்டுகின்றதாம். நானோ நகரம் தாண்டி, நாடு தாண்டி, அவளைப் பார்த்து கொள்ளாமல், செய்நன்றி மறந்து பணம் புரட்ட வந்திருக்கேன். அது விதி செய்த சதி !

நகரத்தில் இருந்து, உடம்பு சரியில்லாம போச்சுன்னா வேது பிடிக்க, அந்த பச்சிலைகளை அவ எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? அது அவளுக்கு தான் வெளிச்சம்!

அவள் எதுவுமே கேட்க மாட்டாள்; அப்படி பட்டவ "ந்தா.. அந்த கஸ்தூரி என்ன ஆனான்னு தெரியல; சித்த டிவி போடு" -ங்கறா .

பாட்டி, தொலைகாட்சியில் நாடகம் பார்க்கும் போதும், "ஐயய்யோ இந்த பாவி பய இப்படி பண்றானே" என்று நடிப்பவர்களுக்காகவும் தன் இரக்கத்தை காட்டுபவள்.

அவள், அந்தக் காலத்து பெண்மணி. அவளுக்கு அகங்காரம் அசூயை என்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை; சத்தியம்... சத்தியம்... சத்தியம் ....!!! இதை அவளுடன் நான் அதிக காலம் இருந்ததினால் சொல்கிறேன்.

பல படங்களையும் பார்த்து  நான் அவ்வளவாக பிரமிப்பு அடைவதில்லை. ஆனாலும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்து மிகவும் பிரமித்து போனேன். படத்தின் பெயர் 'The Way Home'. முடிந்தால் அந்த படம் பாருங்கள். முடியலைன்னா உங்க பாட்டியையாவது பார்த்து கொள்ளுங்கள்.

நடு இரவாக இருக்கும். அவள் அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பாள். நானும் உறவினரும் வீட்டுக்கு வருவோம். தூங்கிகிட்டு இருக்கிறவ எழுந்து வருவாள். வந்து, சாப்டியான்னு கேட்டு, சாப்பிடலைன்னா சமையல் பண்ணி சாப்பாடு தருவா. இது நான் நடு ராத்திரியில் வருவதால் இல்லை, வீட்டிற்கு யார் நடு ராத்திரியில் வந்தாலும் அவர்களுக்கு இந்த உபசரிப்பு நிச்சயம்.

கோவில் போய்விட்டு வருவா. வந்தவுடன் கோவில் பிரசாதம் எல்லாத்தையும் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்து விடுவா. அவள் சாப்பிட்டாளா?என்று யாருக்கும் தெரியாது.

அவளுடைய வயதிற்கு, அவள் பார்த்த மனிதர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று நான் பிரமிப்பது உண்டு. அவளால் நாங்கள் பாக்கியம் அடைந்தோம் என்று பல முறை பலரால் அறிந்திருக்கின்றோம்.

ஒருமுறை வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்கள் பலவற்றை எடுத்து குப்பையில் போட்டு, வீட்டை சுத்த படுத்தணும்னு, பல பொருட்களை எடுத்து சென்று, தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அதில் சில பீங்கான் தட்டுகளும் அடங்கும். இதை எல்லாம் பாட்டி கவனித்து கொண்டு இருந்தாள். நான் வீட்டிற்க்கு வந்தவுடன், "பீரோவ்ல பீங்கான் தட்டு இருந்திச்சே அது எங்க?" ன்னு கேட்டா .. ...நான், "அத யாரு யூஸ் பண்றா, அதான் குப்பை தொட்டியில போட்டுட்டேன்" அப்டின்னேன்.
அவ, "அது உன் தாத்தா வாங்கியாந்தது" அப்டின்னா; அவள் கண்கள் ஈரமாவது தெரிந்தது; அப்போதும் அவள் திட்டவில்லை கோவப்படவில்லை. நான் அப்போதே திரும்பி போய் குப்பை தொட்டியிலிருந்து அந்த பீங்கான் தட்டை எடுத்து வந்து விட்டேன்.

அவள் சொல்லி இருக்கா, சின்ன வயசில என்ன இடுப்புல வச்சுக்கிட்டு, அவ ஆத்துக்கு குளிக்க வந்தாளாம். ஆத்துல நல்லா தண்ணி ஓடிகிட்டு இருந்திச்சாம். என்ன கரையில விட்டுட்டு அவ குளிச்சிட்டு வந்திருக்கா. வந்து பார்த்தா என்ன காணுமாம். அவ பதறி போயிட்டாளாம். உசிரே போச்சாம் அவளுக்கு; என்ன ஆச்சு புள்ளைக்கு-ன்னு? சுத்தி முத்தியும் பாத்தாளாம், ஒரன்டியும் அகப்படலயாம்; எங்கேயோ பக்கத்தில் 'பொளக்' 'பொளக்'ன்னு சத்தம் கேட்டிச்சாம்; கிட்ட வந்து பார்த்தா, காட்டான் மணி செடியில் தண்ணியில் கரையோரமா சிக்கிக்கிட்டு தண்ணிய குடிச்சுகிட்டு கிடந்தேனாம். "ஐயோ" அப்டீன்னு ஓடி வந்து என்ன தூக்கிட்டு வந்தாளாம். அப்புறம் தான் அவளுக்கு உசிரே வந்துச்சாம்.
எனக்கும் அப்பிடித்தான் இருக்கும்!

இப்பவும் அப்பப்ப பணம் கேட்கிறா. நானும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அடுத்த 'தாலி' வாங்க ஆரம்பமாகி விட்டாள் போல பாட்டி!

ஆயிரம் உன்டிங்கு அழகி; ஆனாலும் அவ்வாயிரமும் என் பாட்டி முன் பணிந்து தான் போக வேண்டும். பாட்டி, அந்த ஆயிரத்திற்கும் அன்பிலும், அழகிலும் அம்மாவாய் இருப்பாள்.

நான் வெளியூர் செல்லும் முன் அவளிடம் வாக்கு கொடுத்தபடி, அவளை அழைத்துக்கொண்டு கோவில் சென்றேன். அவள் கோவிலில் கூறிய ஆசிகள், என்றும் என் உள்ளங்களில் ரீங்காரமிடும். அவள் துக்கங்களை கூறி, பின் மனமார வாழ்த்துகின்றாள் "மவராசனா இரு"-ன்னு. நான் இப்போது நினைத்து கொள்கிறேன், உன் பேரனாய் இருந்து ஆண்டியாகவும் இருக்க ஆனந்தமே.

அவளை கஷ்ட படுத்துகின்றவரை-யோ, அவமரியாதை செய்பவரை-யோ, முகம் சுளிக்க வைப்பவரையோ யார் தடுத்தாலும் விடேன்.

நான் பல நேரங்களில் நினைப்பது உண்டு. பாட்டிக்கு ரகசியம் ஏதாவது மனதிற்குள்ளாகவே வைத்திருக்கிறாளா என்று. இப்போ நினைத்து பார்க்கும் போது உண்மை புரிகின்றது. அவள் பல ரகசியங்களை மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறாள் என்று. அவளை கஷ்டப் படுத்தியவரை-யும் , த்வேஷித்தவர்களை-யும் , வஞ்சித்தவர்களை-யும் வருத்தியவரையும் அவள் மற்றவரிடம் சொல்லுவதே இல்லை. எல்லாமே இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறாள். இவ்வளவுக்கு பின்னும், அவள் அவர்களை அன்புடன் அனுசரிக்கின்றாள், பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றாள் .
Paati ...... You are great !!!

ஹரீஷ்

கள்ளமில்லா குழந்தைகள் !!!



அவர்கள் எப்போதும், ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதில் என்றுமே விருப்பம் கொள்வது இல்லை; அவர்களுக்கு எதாவது புதுசு புதுசாக செய்யணும். அரைச்ச மாவையே அரைச்சா, 'நீ சுத்த போர்' அப்டின்னு பளிச்சுன்னு சொல்லிட்டு போய்டுவாங்க.

அதிலும் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்களுக்கு எதையும் கிரகிக்கும் சக்தி அதிகம். உதாரணத்திற்கு, தாயானவள் தந்தையை காட்டி, 'அப்பா பாரு' என்றவுடன், குழந்தை உடனே கிரகித்து கொள்ளும். என்ன கொடுமை என்றால், இப்போது எல்லாம் உறவுகளை தொலைக்காட்சியில் தெரிந்து கொள்கின்றார்கள் 'மனைவி', 'சித்தி' எனவாக சீரியலில்.
தாயும் தந்தையும் வேலைக்கு போவோராக இருந்தால் கேள்வியே வேண்டாம். ஒரு வீடியோ கேம் பார்ட்னெர் கிடைத்து விடும. பணம் புரட்டுவதை காரணமாய் கொண்டு குழந்தையின் குணத்தில் கவனம் சிதறாமல் பார்த்து கொள்ளுவது பெற்றோரின் கடமை.

அவர்கள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு என்ன சொல்லுவது என்று சில நேரங்களில் தெரியாது. அதற்கு நாம் தான் தகுந்த வயதிற்கு ஏற்ற விளக்கங்கள் கொடுக்க வேண்டும்.மிக மிக சிறு வயது சிறுவன் கேட்கின்றான், 'அப்பா குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு எப்படிப்பா வந்தா?'
அப்பா, 'நம்ம குட்டி பாப்பா ரொம்ப குட்டியோண்டா இருக்கால்ல?'
சிறுவன், 'ம்... ஆமாம் ....'.
'அவளால நடக்க முடியுமா ?'
'முடியாது .......'.
'அதனால அம்மாவும் நானும் தூக்கிகிட்டு இந்த வீட்டு வாசப்படி வழியா வந்தோம்' அப்டின்னார்.
'ம்ம் சரிப்பா .. குட்டி பாப்பா அழகா இருக்கா .. நான் கிட்ட போனா சிரிக்கிறா...'.
'குட்டி பாப்பாவும் cute தான்... நீயும் cute தான்'.
சிறுவன், 'ஹைய்யா ...... !!'.

சற்றே வளர்ந்த சிறுவனாக இருந்தால், 'அம்மா தங்கச்சி எப்டிம்மா வந்தா?'
அம்மா, 'நீ முன்னாடி சின்ன பையனா இருந்தியா?'
சிறுவன், 'ஆமாம்'.
'இப்போ நீ வளர்ந்து கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டல்ல?'
'ம்ம் அப்டியா நான் வளர்ந்துடனா .......?'
'ம்ம்ம்ம் ஆமாம்டா கண்ணா, முன்னாடி நீனும் தங்கச்சி மாதிரி குட்டியோண்டா இருந்த, இப்போ பாரு நீயே பாத்ரூம் போற, டிரஸ் போட்டுக்கற, சாப்ட்ற'.
 'ம்ம் ஆமாம்'.
'நானும் அப்பாவும் உன்ன பார்த்து கிட்டோம். இப்ப நீ, நான், அப்பா எல்லோரும் சேர்ந்து குட்டி பாப்பாவ பார்த்துக்கலாம்னு, உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வந்திருக்கா'.
'ம் அப்டியா சேரி நானும் தங்கச்சி பாப்பாவை பார்த்துகிறேன். பாப்பாவுக்கு முத்தாய் தரலாமா?'

இப்படி எல்லாம் சொன்னவுடன் ஏற்று கொள்ளும் குழந்தையாக இருக்க வேண்டும் என்றால் குழந்தைகளை, ஆம்படையாள் டெலிவரியின் போது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூடாது. இல்லை என்றால், குழந்தை அதன் வயதிற்கு கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்கும். இதெல்லாம் தேவையா.இதற்கு மேலும் அவர்கள் தெரிந்து கொள்ள தான் வேண்டும் என்று நாம் ஒற்றை காலில் நின்றால், வேண்டுமானால் +2 ஸ்டேட் போர்டு பையாலாஜி புத்தகம் வாங்கி கொடுக்கலாம். சற்றே பண விருத்தி இருந்தால், X CBSE சயின்ஸ் புத்தகம் வாங்கி கொடுக்கலாம்.'என்ன கொடுமை சார் இது?' ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா சார்?

குழந்தைகளுக்கு வார்த்தை மேல் மிகுந்த பிரியம். சிறிது சிறுதாக எழுத்துக்களில் இருந்து அவர்கள் வார்த்தை தெரிந்து கொள்ளும் லாவகமே தனி தான்.சில நேரங்களில் ஒரு வார்த்தை தெரியும். அதில் இருந்து வரும் மறு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. ஆனாலும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதற்காக அவர்கள் பிரயத்தனம் படுவார்கள்.

ஒரு தாய், சிறு குழந்தையை கையில் வைத்து கொண்டு, அச்சிறு குழந்தையின் அண்ணனிடம்,'தம்பி போய் ரூம்ல இருந்து பீரோவ்ல tissue பேப்பர் எடுத்து வா'. அச்சிறுவன் செல்கின்றான் யோசித்து கொண்டே. ரூம் தெரியும், பீரோல் தெரியும், பேப்பர் தெரியும் அது என்ன tissue.அவனுக்கு பிடி படவில்லை. முயற்சியையும் விடவில்லை. இருந்தாலும் ரூமிற்கு வந்து பீரோவில் உள்ள சில செவ்வக வடிவ காகிதங்களை அள்ளி கொண்டு வந்து தாயாரிடம் கொடுக்கிறான்.

அவன் தாயாருக்கு அவனை திட்டுவதா ? சிரிப்பதா ?  என்று தெரிய வில்லை.'அப்பனுக்கு புள்ள தப்பாம தான் பொறந்திருக்க, அப்பா காச கரியாக்குராறு, புள்ள கழுவ யூஸ் பண்ண போறீங்களோ ' என குழந்தையை வாஞ்சையுடன் இழுத்து கொஞ்சி, சிறுவன் கையில் உள்ள 'பணத்தை' வாங்கி மடித்து பத்திரமாக வைத்து கொள்கின்றாள்.காந்தி, புளங்காகிதம் அடைந்து குழந்தை போல் சிரிக்கின்றார், மடிந்த நோட்டில்.

'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாடு கேட்குதா' என்ற பிடித்த இளையராஜா பாடலாகட்டும், அல்லது 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற இனிய பழைய பாடல் ஆகட்டும். இவை எல்லாம் நமக்கு பிடித்து இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ள படும், குழந்தை குழருவதை கேட்டால்.ஏனெனில்,
     குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் 
     மழலை சொல் கேளா தவர்

அவர்களுக்கு இருக்கும் இன்னொரு வரப் பிரசாதம், பொய் சொல்லத் தெரியாது. பொய் சொல்வதை பெரியவர்களிடம் இருந்து தான் தெரிந்து தெரிந்து கொள்கின்றார்கள். அதையும் சில நேரங்களில் எப்படி சொல்வது என்று தெரியாது.இப்படித்தான், ஒரு தாயும் தந்தையும் வெளியே புறப்பட கிளம்பி கொண்டு இருந்தார்கள்.ஹாலில் செல்போன் ரிங்குகிறது.அந்த சிறுவன் செல்போனை எடுத்து,
'அலோ' என்றான்.......................................................
சிறிது இடைவெளிக்கு பிறகு.'அப்பா ஷாப்பிங் கெளம்பிட்டு இருக்காங்க' என்றான். ......................................................
மீண்டும் சிறிது இடைவெளிக்கு பிறகு.'அப்பா வந்த வுடன் கால் பண்ண சொல்றேன் அங்கிள்',.......................சிறிது இடைவெளி.
'தெர்யாது அங்கிள்' .........இடைவெளி
'ம் சேரி அங்கிள்'.
சிறிது நேரம் கழித்து அப்பா வருகின்றார், 'யாருடா போன்-ல'?
சிறுவன், 'உங்க ஆபீஸ்ல இருந்து ஒரு அங்கிள் பண்ணினாங்க.'
அப்பா நினைத்து கொள்கின்றார், என்னது ஆபிசா ? .... 'என்னடா கேட்டாங்க?'
பையன், 'நீங்க எங்கன்னு கேட்டாங்க'.
அப்பா 'நீ என்ன சொன்ன?'.
பையன், 'நீங்க ஷாப்பிங் கிளம்பிட்டு இருக்கீங்க அப்டினேன்.'
அப்பாவுக்கு பதற்றம் அதிகம் ஆகி விட்டது, 'அப்புறம் என்ன கேட்டாங்க?'.
பையன் 'நாளைக்கு ஆபிஸ் வருவீங்களான்னு கேட்டாங்க, நான் தெரியாது அங்கிள் அப்டினுட்டேன்'.
அப்பா நினைத்து கொள்கின்றார், ஹ்ம்ம். கெட்டது குடி. Planned Sick Leave-kku ஆப்பா....
சிறுவனை திட்டவும் முடியாமல் குட்டவும் முடியாமல் நிற்கின்றார்.

குழந்தைகள் முன் தான் நாம் மிகவும் மரியாதையுடனும் பய பக்தியோடு நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் முன், கணவன் மனைவி பரஸ்பரம் அன்பு காட்டலாம். ஆனாலும் எக்காரணம் கொண்டும் காதல் காட்டுவது தகாது. சொல்ல போனால், பெரியவர் முன்னும் அப்படி நடந்து கொள்ள கூடாது, அது பெரியவர்களை அவமதிப்பது போல். இல்லை என்றால், பின்னொரு நாளில், குழந்தை தொலைகாட்சி பார்க்கையில், 'அம்மாவும் அப்பாவும் இப்படித்தான்' என்று மானத்தை வாங்கி விட கூடாதல்லவா.

பின் குழந்தைகளுக்கு உண்மையையை மறைக்க சொல்லி தர வேண்டி இருக்கும். இதுவும் தேவை தானா.இப்படித்தான், ஒரு வீட்டில்,காலிங் பெல் அடிக்கிறது. அந்த தந்தை வியூ பைண்டேர் வழியாக பார்க்கின்றார்.'ஐயையோ, அருவ பேச்சு ஆசாமி வந்துட்டாரே' என திரும்பி, 'நான் ரூமுக்குள்ள போய்டறேன். அவர்கிட்ட நான் வெளில போயிருக்கேன்னு சொல்லி அனுப்புடி. அவர் போன வுடன் வந்து என்ன கூப்பிடு.' என்று கூறி கொண்டே உள்ளே செல்கின்றார்.'சரிங்க நீங்க போங்க'கதவு திறக்க படுகின்றது,
'சார் இருக்காங்களா ?'.
'இல்லைங்களே வெளில போயிருக்காங்க'.
'அப்டியா, சார் வந்தா வந்துட்டு போனதா சொல்லுங்க. ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குங்களா ?'
அந்த அம்மணி உள்ளே செல்கின்றார், தண்ணீர் கொண்டு வர.இதை எல்லாம் கவனித்து கொண்டு அங்கே நிற்கும் சிறுவனை பார்த்து, 'ஹாய் குட்டி பையா. ஹொவ் ஆர் யு?'
'பைன் அங்கிள்'
'அப்பா எப்பப்பா வருவாங்க?'
குழந்தை ஒன்னும் தெரியாம 'அம்மா கூப்பிடவுடன் அங்கிள்'.
இதை கேட்டவுடன் புரிந்து கொண்டவராய் இருந்தால் அதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டார்.இல்லை மேலும் பேசி புண் ஆக்கி கொள்வது என்று தீர்மானமாய் இருந்து, அவர் மேலும், 'அம்மா எப்போ கூப்டுவாங்க?' என்று கேட்டால்,
'நீங்க போனவுடன் அங்கிள்' !!
வாழ்க கள்ளமில்லா குழந்தைகள் !!!

ஹரீஷ்

நகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் !





சில காலங்களுக்கு முன் வேலை இல்லாத காலங்களில், அதுவும் வேலை தேடுவதையே வேலையாக கொண்ட காலங்களில், வேலை தேடுதல் முடிந்த பிறகு, நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்றிருந்த சார்லி சாப்ளின் தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தேன்.

அவர் திரைப்படங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய பல படங்களில், சாப்ளின் வேலை வெட்டி இல்லாத, வேலை தேடும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கதா பாத்திரங்களே நிறைய சித்தரிக்க பட்டுள்ளன. பின்னே மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல். நம் இனமடா இவன் !.

நடிப்பில் சிகரம் தொட்டு, அன்பில் மக்கள் மனம் கவர்ந்து சாதனை படைத்தவர் சாப்ளின்.

ஒருவன் வாய் திறக்காமலே பேச முடியுமா. முடியும் என்பதற்கு சாப்ளினே சாட்சி. வாய் திறந்து பேசாமலே அன்பு, பாசம், ஆனந்தம், அசூயை, பயம், கோபம் எனவாக பல உணர்ச்சிகளையும் நடிப்பால் புரிய வைப்பார். புரிய வைப்பார் என்பதை காட்டிலும் உணர வைப்பார் என்பது இன்னும் பொருந்தும்.

மேற்பரப்பில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பாங்கு, ஆனாலும் ஆழத்தில் அன்பிற்கு ஏங்கும் குணமாகவும், மெல்லிய சோகமும் பிணைக்க பட்டிருக்கும் அவர் நடிப்பில்.

'தி கிரேட் டிக்டேடர்' என்ற திரைப் படத்தில், ஹிட்லர் போன்று தோற்றம் அளிக்கும் கதா பாத்திரத்தில், பட முடிவில் நீண்ட நேரம், உலக அமைதிக்கான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசுவார். அதை பார்த்தால் நம் உடல் நடு நடுங்கும். என்ன உணர்ச்சி மிகுந்த ஆழமான அர்த்தமான பேச்சு.

நாம் ஒரு கூட்டத்திற்க்கோ, விருது வழங்கும் விழாவிற்கோ செல்லும் பொது பார்த்தோமேயானால், மக்கள் பல வகையில் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தருவார்கள்.
சிலர் இரு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்; சிலரோ கை கட்டியபடியே விரல்களால் தங்கள் கைகளை தட்டி பாராட்டுவார்கள்;
சிலரோ தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க உட்கார்ந்து கொண்டே கைகளால் தங்கள் தொடையை தட்டுவார்கள்; அப்படிப்பட்டவர்கள், அருகில் இருப்பவர் தொடையை தட்டி மகிழ்ச்சி அடையாதவரை நாமும் மகிழ்ச்சியே அடைகின்றோம்!

தமிழக சட்டசபையில், முதல்வர் பேசுகின்றார். பல அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் பராக்கு பார்த்து கொண்டும் பக்கத்தில் பேசி கொண்டும் இருக்கின்றார்கள்; முதல்வர் கூறுகின்றார், 'இனி டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் என்பது உயர்த்த பட்டு, இரவு பன்னிரண்டு மணி வரை திறந்திருக்கும்'. உடனே மேஜையை தட்டி தட்டி, கட்சி பேதம் இன்றி ஆரவாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

இப்படியாக மகிழ்ச்சியையும், பாராட்டையும் பல விதங்களில் காட்டலாம்.
நம் ஊரிலோ பத்மஸ்ரீ விருதும் ப்ளாக்கில் கிடைக்கலாம்.
உலகின் மிக சிறந்த திரை கலைஞர்களுக்கு தரப்படும், உயரிய விருதாய் கருதப்படும் ஆஸ்கார் விழாவில், சாப்ளினுக்கு honorary ஆஸ்கார் தரப் பட்டது. அப்போது அனைத்து மக்களும் தங்கள் மரியாதையையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும், உங்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று அனைத்தையும் கூறும் விதமாய், அவ்விழா வரலாற்றில் கண்டிராத அளவிற்கு, அதிக நேர standing ovation பெறப்பட்ட மாபெரும் நடிகர் சாப்ளின்.

ஒரு அரசியல் வாதி, ஒருவரை குறிப்பிட்டு 'அவர் சட்டசபைக்கு குடித்து விட்டு வருகின்றார்' என்கின்றார். குடித்து விட்டு வந்ததாக கூறப் படுபவரோ 'இவர் தான் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாரா?' என்கின்றார்.
அவ்ளோ தான் பார்டெர் லைன். இதற்கு மேலே, இவரும் அவரைப் பற்றி பேச மாட்டார்; அவரும் இவரைக் கண்டு கொள்ள மாட்டார்.
அதுதான் ஒரு வாரத்திற்கான செய்தி (விளம்பரம்) கிடைத்து விட்டதே. இதை சுய விளம்பரம் என்று ச்சீப்-ஆக எண்ணி விடக் கூடாது. இவர் அவருக்கும், அவர் இவருக்கும், அர்ச்சனைகளால் கொடுக்கும் விளம்பரம். மக்கள் அவர்களை மறந்து விட கூடாதாம். இவர்கள் மட்டும் மக்களை மறந்து விடலாம். மாக்கள்...!

இப்படியாக அரசியல் வாதிகள் குடிமகன்களை பற்றி கவலை படாமல் குடி காரர்களை பற்றியே கவலை படுகின்றனர்.
இப்படிப் பட்ட அரசியல் வாதிகளும் நடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். என்ன? அவர்கள் மகா கலைஞன் சாப்ளின் போல மக்கள் மனதை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திடும் அளவுக்கு நடிக்க தெரியவில்லை.

நம் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள் ஆகவும் எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றார்கள். இந்த குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு நம்மால் பதிலே சொல்ல முடியாது. இத்தனைக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு காரணம், நாம் முன் எப்போதோ கொடுத்த அரை வேக்காட்டு விளக்கமாக இருக்கக் கூடும்.
இப்படித் தான் ஒரு தந்தை தன் மகனிடம், 'மனுஷங்க செத்தவுடன் திரும்பி இந்த எர்த்ல பொரப்பாங்க' அப்டினார். அந்த குழந்தை ஆச்சர்யமாய் 'அப்டியா!' என்று ஆவென்று கேட்டு கொண்டு இருந்தது. தந்தைக்கோ பெருமிதம், தம் மகன் ஆவென வாய் திறந்து கேட்டு கொண்டு இருந்தானே.
குழந்தை சற்றே வளர்ந்தது. புத்தகம் படித்து கொண்டு இருந்தது. திடீர் என்று ஒரு சந்தேகம். அப்பாவை கூப்பிட்டு 'அப்பா 1930-ல இந்தியாவில் 30 க்ரோர் பீபிள் தான் இருந்திச்சு இப்போ எப்டி 120 க்ரோர் பீபிள் ஆச்சு?'.. 'எப்டிபா செத்தவங்க நாலு நாலா பொறந்தாங்க ?'

அப்பா இப்போது ஆவென பார்த்து கொண்டு இருந்தார். கடிகாரத்தை பார்த்தார், சுற்றும் முற்றும் பார்த்தார். 'தம்பி நேரம் ஆயிடிச்சு பாரு, இன்னிக்கு படிச்சது போதும், வா போய் படுக்கலாம்'.

இப்படிப் பட்ட புத்திசாலித் தனமான குழந்தையாக தான் இருந்தார் சாப்ளின் தன சிறு வயதில். அவர் அம்மா ஒரு மேடையில் பாடி கொண்டு இருந்த போது சில தடங்கல்களால் அவரால் பாட முடிய வில்லை. உடனே கூட்டத்தினர் கூச்சலிட்டனர். உடனே சாப்ளின் தன அம்மா பாட வேண்டிய இடத்தில மேடையேறி பாடினார் மழலைக் குரலில். கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது. கூட்டத்தினர் மகிழ்ச்சியாய் காசுகளை தூக்கி மேடையில் போட்டனர். சாப்ளின் பாடுவதை நிறுத்தி விட்டார். உடனே எல்லோரும் 'பாடு பாடு' என்றனர். சாப்ளின் மழலையாய் 'காசு எடுத்து கிட்டு அப்புறம் பாடுறேன்' என்றார். கூட்டத்தினர் சிரித்து விட்டனர்.

சமீபத்தில் பார்த்த சாப்ளினின் திரைப்பட வரிசையில், ஒரு படத்தை தவிர்த்து, அணைத்து திரைப் படங்களிலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அதே போல் சொல்லி வைத்தார் போல் எல்லா படத்திலும் ஏதாவதொரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்.

ஒரு படத்தை தவிர்த்து என்று சொன்னோமே, அந்த படத்தில் உள்ள விசேஷம் என்ன என்றால், அதில் வரிசையாக பல பெண்களை திருமணம் செய்து கொள்ளுகின்றார். அனால் எந்த பெண்ணையும் காதல் செய்யவும் மாட்டார். என்ன ஒரு முரண்பாடு. முரண்பட்ட படத்தின் பெயர் Monseiur Verdoux.

ஒரே ஒரு திரைப் படத்தில் மட்டும் சாப்ளின் இறப்பதாக திரைக்கதை அமைந்திருகின்றது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு மேடைக் கலைஞன் ஆக இருந்து தன் கஷ்டங்களை மறைத்து, வலியை தெரிய விடாமல், மக்களை மகிழ்ச்சி அடைய செய்து விட்டு மேடைக் கச்சேரியை முடித்து விட்டு வந்து, அடுத்ததாக தன் காதலியின் மேடைக் கச்சேரியை பார்த்து கொண்டே உயிர் விடுகின்றார். படத்தின் பெயர் Limelight.

சாப்ளின் ஒரு நடிப்பு வங்கி, ஆனாலும் இந்த வங்கி இறக்கும் தருவாய் வரையிலும் திவால் ஆனதில்லை. சாப்ளின், வங்கிகளுக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து-இல் தன் இறுதி நாட்களை கழித்தார். பின் அங்கேயே காலமடைந்தார்.

தமிழ் என்ன ஒரு அருமையான மொழி.
இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்தான 'இ' என்ற எழுத்தை வாசிக்கும் போது உள்ள காலத்தை காட்டிலும் இந்த வாக்கியத்தின் கடைசி எழுத்தான 'ம்' என்ற எழுத்தை உச்சரிக்கும் போது உள்ள கால மாற்றம் அதிகமாக இருக்கும்.
இது கால வளர்ச்சியின் தத்துவமும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. எப்போது ஒருவர் மூச்சு விடுவதை முழுமையாய் நிறுத்துகின்றாரோ, அப்போது அவர் பிறந்தது முதல் சேர்த்து வைத்த கால வளர்ச்சி முழுமை அடைகின்றது. இதுவே 'காலமடைதல்'.

இவை இன்றி, இதற்கு இணையான இன்னும் சில வார்த்தைகளான 'சிவபதம்', 'சிவலோகபதவி', 'சுவர்க்கம் சேர்ந்தார்', 'புட்டுகிச்சு', 'பூட்ட கேசு', 'மண்டைய போட்டுட்டார்' போன்ற சொல் ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாம் சந்தோஷமாய் சாப்ளினை மீண்டும் பாப்போம்.

சாப்ளினின் முத்தான மூன்று படங்களாக நாம் கருதுவது
1. THE KID
2. CITYLIGHTS
3. THE CIRCUS
நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கலாம். அதற்காக என்னை போல் வேலையை விட்டு விட்டு VCD வாங்கி பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை. சில சாப்ளின் படங்கள் பார்த்து விட்டு குழந்தைகளுடன் போய் விளையாடி பாருங்கள், குழந்தைகள் உங்களோடு மிக குதூகலமாக விளையாடுவார்கள். அது சாப்ளினின் தாக்கம்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.

சார்லி சாப்ளின் முழு திரைப்பட தொகுப்பும் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன். பர்மா பஜாரில் சொல்லி வைத்து இருக்கிறேன். இப்போது தான் COPY போட ஆரம்பித்து இருகிறார்களாம், 'அட்த்த வாரம் வா வாத்யாரே பூராத்தையும் ரெடி பண்ணிரலாம்' என்கின்றார்.

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்