Showing posts with label தடாகம். Show all posts
Showing posts with label தடாகம். Show all posts

களைப்பறியா கலைஞர் !!



அகராதியில் உழைப்பு என்று தேடிப் பார்த்தால் அதில் பல அர்த்தங்கள் இருக்கலாம்; ஆனாலும் நிஜத்தில் நம் கண் முன் பார்க்கும் ஒரு ஒப்பற்ற தலைவர் கலைஞர். அவர், உழைப்பிற்கு உருவம் தந்த தலைவர்.

சூரியனும், அவர் எழுந்தவுடன் தான் உதயமாகும். அவருடைய உழைப்பிற்கு ஈடு இணை இந்த தமிழகத்தில் எந்த இளைஞனாலும் கூட இயலாது.
இந்த 85 வயதிலும், முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். எங்கோ எதிலோ படித்தது, ஒரு மனிதன் தோல்வி அடைய பல காரணம் இருக்கலாம். அனால் ஒரு மனிதன் ஜெயிக்க ஒரு காரணம் தான் இருக்க முடியும் 'உழைப்பு'.

கலைஞருக்கு உழைக்க வில்லை என்றால் தான் களைப்பு வரும்;
உழைத்தால் தான் களிப்பு வரும். அவருடைய உதவியாளர்கள் திணறித்தான் போவார்கள் அவருடன் பணி புரிவதற்கு. பல முறை சட்ட சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். ஐந்தாம் முறையாய் முதல்வராய் இருக்கிறார். தமிழை இரண்டாம் தர மொழியாக்கி விடுவார்களோ என்று எண்ணி பயந்து, பெரியார், அண்ணா வழியில் இந்தியை தமிழகத்தில் எதிர்த்தது என அவர் கலந்து கொண்ட போராட்டங்கள் கணக்கில் அடங்கா.

இப்போதும் அறுவை சிகிச்சைக்கு பின் சக்கர நாற்காலியில் போகும் போது அவர் எண்ணம் எதுவாக இருக்கும் என்று எண்ணி பார்த்தால், ' அப்பாடா இவ்வளவு நாள், மனம் சிந்திக்கும் வேகத்திற்கு நடக்க முடியாம இருந்திச்சு. இப்போது வேகமாய் நகர்ந்து பல வேலைகள் செய்யலாம். பல அதிகாரியை வேலை வாங்கலாம்' என்றுதான் எண்ணி இருக்கும்.

தமிழகத்தின் வரலாற்றை முழுமையாய் அறிந்த இரண்டு நபர்கள் இப்போது உள்ளார்கள் எனின் அவர்கள் கி வீரமணியும், கலைஞர் என்றும் தான் மூத்த தலைவர்களும் கூறுகின்றனர்.

கலைஞருக்கு, தமிழ் மேல் கொள்ளை ஆசை; ஆதலாலே தமிழ் கவிஞர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றார்கள். கவிஞர் வைரமுத்துவிற்கு தினம் ஒரு முறையாவது கலைஞரிடம் தொலைப்பேசியில் பேசி விட வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் திருப்தி. தமிழ் தமிழிடம் பேசுவது தித்திக்காமலா இருக்கும்.

கலைஞருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரின் நகைச்சுவை திறன் நிருபர்களிடம் மிக பிரசித்தம்.

திருவாரூரில் திருக்குவளை எனும் சிறு கிராமத்தில் பிறந்து, தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளுள் ஒன்றான தி.மு.க வின் தலைவராகவும் , தமிழகத்தின் முதல்வராயும் இருப்பதால், அவர் யாராலும் எதையும் சாதிக்க முடியும் , 'உழைப்பு இருந்தால்', என்பதை நிரூபித்து இருக்கிறார்.

கலைஞர் கவியரங்கம் என்றால் ஒரே குதூகலம் தான். காண கண்கள் இரண்டும் கூட தேவை இல்லை. ஆனால் கேட்டு மகிழ இரண்டு காதுகள் கூட போதாது. இரண்டாயிரம் காதுகளாவது தேவைப்படும். அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை, மேடைகளில் அவர் கடைசியாகத்தான் பேசுவார். அவர் முன்னமே பேசினால், கூட்டம் களைந்து விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு.

அவர் எழுதிய தமிழ் திரைப்பட வசனங்களை,நம்மால் எழுதி வைத்து எழுத்து கூட்டியும் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்ன உணர்ச்சி மிகுந்த எழுத்துக்கள். பராசக்தி நீதிமன்ற வசனம் 'ஓடினேன் ஓடினேன்' ஆகட்டும் , மனோகரா வசனம் ஆகட்டும். இவை என்றும் அவர் பெயரை சொல்லும்.

எவ்வளவோ தமிழ் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அதிலும் குறளோவியம், அவர் திருக்குறளை கதையுடன் கூறும் விதம் அற்புதம். அவரின் எழுத்து பாணியே தனிதான்.

அவருக்கு குடும்பம் பெரியது தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் என்றாவது செய்தித்தாளிலோ, செவி வழியாகவோ கலைஞர் அடிக்கடி குடும்பத்துடன் குன்னூரில் ஓய்வு எடுக்கிறார் என்றோ, ஊட்டியை ஊர் சுற்ற போய் உள்ளார் என்றோ கேட்டிருப்போமா? குடும்பத்துடன் இருக்கும் நேரத்தை காட்டிலும் கழகத்திற்குத்தான் அதிக நேரம் உழைத்திருப்பார்.

முப்பால் தந்த வள்ளுவனுக்கு முக்கூடல் சங்கமத்தில் சிலை எழுப்பினார். அலைகள் இவ்வளவு நாளாய் கரையை இடித்தன, இப்போது தமிழை இடித்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு அலையும், நான் நீ என்று போட்டி போட்டு கொள்கின்றன, 'நான் இடிப்பேன்' 'நீ இடிப்பாய்' என்று. தமிழை இடிப்பதால் இனித்து விடுவோம் என்று என்னிக்கொள்கின்றன போலும்.
இதைப் பார்த்து, வள்ளுவர் கூறுகின்றார், 'அலைகளே என்னை இடிப்பதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் வரம் பெற்றீர்கள். இப்போது கன்னியாக்குமரியில் இருந்து நகர்ந்து சென்னை செல்லுங்கள். அங்கு, என்னை சிலையாய் எழுப்பியவன் இருக்கிறான். அவனின் தலைவன் அண்ணா, கடற்கரையில் உறங்கி கொண்டு இருக்கிறான். போய் அவனை, இயன்றால் எழுப்புங்கள். அப்படி செய்தீர்களேயானால் தமிழ்க்கடல் கலைஞன் கொண்டு வந்த கடல் நீரை நன்னீராக்கும் பணியில் நீங்கள் இனிப்படைவீர்கள். உம் வரமும் நிறைவேறும்'.

அண்ணாவின் கனவு, இரண்டு அரையணாவுக்கு ஒரு கிலோ அரிசி. இதை அண்ணா நூற்றாண்டில் நிறைவேற்றி உள்ளார்.
சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற எண்ணற்ற நல்ல திட்டங்கள் கொண்டு வந்தவர்.

யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்னும் உத்தி அறிந்தவர், வள்ளுவன் மொழியில் சொல்லுவதாய் இருந்தால்,
      இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
      அதனை அவன் கண் விடல்.

வாழ்க நூறாண்டுகள்; உங்களுக்கும் ஓய்வு தேவை; வழிவிடுங்கள் இளைஞர்களுக்கு; அருகில் இருந்து வழி காட்டுங்கள்.

இந்தி எதிர்ப்பு, இரு மனைவி, இலவசங்கள், குடும்ப அரசியல் இவைவிடுத்து கலைஞரை பார்த்தால் அவர் ஒரு தமிழ் இன தலைவர் தான்.
இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

ஹரீஷ்

கருப்பு வெளிச்சம் - ஒபாமா !!



குழந்தைகளும் அவர் கையில் குதுகலமாகத் தான் காட்சி அளிக்கின்றன. அவரிடம் அப்படி என்ன சிறப்பு.
அவரை கண்டாலே பெண்கள் பரவசம் அடைகின்றார்கள். இதோ நம் அண்ணன், இதோ நம் தந்தை போன்றவர், இதோ நம் மகன் இங்கே என்று.
ஆண்களோ, நம் நண்பன் இதோ இருக்கின்றான் என்று ஆனந்தமடைகின்றார்கள்.
அப்படி என்ன ஒரு ஈர்ப்பு ... காந்தியை அவர் வணங்குவதால் வந்த காந்த சக்தியோ.

கார்டூனிஸ்ட்களுக்கோ மிகுந்த கொண்டாட்டம், அவர்கள் வரைவதற்கு ஏற்ற ஒரு கார்ட்டூன் முகம் கிடைத்து இருக்கின்றதே.

பதவி ஏற்ப்பு விழாவில் ஒரு வார்த்தை பிறண்டாதால் மீண்டும் ஒரு முறை தனிமையில் பதவி ஏற்றார்.

   சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை
   வெல்லும் சொல் இன்மை அறிந்து

என்பதை முற்றும் உணர்ந்திருக்கின்றார்.

அவரை அந்த மதம், இந்த மதம் என்று கூறிப் பார்த்தார்கள். அவரோ, தான் மனித மதம் என்பதில் மனம் கொண்டவர். ஆகையால், அவரிடம் மத விஷயங்கள் மந்தமாகவே எடு பட்டன.

அவரை நிறம் கொண்டு, கறுப்பர் இனம் என்று பாகு படுத்த பார்த்தனர்.
ஆனாலும் அவர் வெள்ளை மாளிகைக்கு ஒரு புது அர்த்தம் கற்பித்து இருக்கின்றார்.
வெள்ளை - அணைத்து வர்ணங்களையும் வெளியிடுவது .
கருப்பு - அணைத்து வர்ணங்களையும் உள் வாங்குவது.
அதாவது, அணைத்து குண நலன்களையும் உள்ளடக்கிய ஒருவர், உலகுக்கே கட்டளைகள் வெளியிடும் மாளிகையில் இருக்கின்றார்.

எங்கள் நாட்டிலும் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களோ அரிசியிலும் அரசியல் பண்ணுவார்கள் .
சுடுகாட்டு கூரையிலும் ஊழல் புரிவார்கள்.

எங்கள் அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை பார்த்து இருந்தால், ஒருவேளை, ஒரு டாலருக்கு பீட்சாவும் கோக்கும் கொடுப்பதாக கூறி இருக்கலாம் நீங்கள். நல்ல வேளை அமெரிக்க மக்கள் தப்பித்தார்கள்.

மக்கள் அளித்த வாக்கால் வெள்ளை மாளிகையில் அமர்ந்து இருக்கின்றீர். நீங்கள் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஆரம்பித்து இருக்கின்றீர். வாழ்த்துக்கள்.

கியூபா விற்கு மக்கள் போய் வரவும் பண பட்டு வாடாக்களையும் அனுமதிப்போம் என்று சொன்னீர். அதையும் செய்தீர்.

தாங்கள் கூறிய படி குண்டனமோ சிறையை சிறிது சிறிதாய் மூடுவோம் என்றீர். இதோ அந்த வேலை ஆரம்பித்தும் விட்டது. அங்கே நடக்கும் மனித உரிமை மீறலை தைரியமாய் தெரிவித்து அதற்கு வருந்தவும் செய்தீர். செம்மையான காரியம் செய்தீர்.

இப்போது அதிபர் பதவிக்கு வந்ததால், அப்படியே ஒசாமாவை-யும் ஒரு ஓரமாய் உட்கார வைக்க முடியுமா என்றும் பாருங்கள்.

அவரோடு போட்டி இட்டவர்களை காட்டிலும் அவரிடம் அதிக பண பலம் இல்லைதான், ஆனாலும், தன் மன பலத்தால் அனைவரையும் ஓரம் போ ! ஓரம் போ ! என்று ஒதுக்கி காட்டியவர்.

உலக பொருளாதாரம் படுத்து கிடக்கும் இவ்வேளையில், உலகமே, இதோ பொருளாதாரத்தை எழுப்பி நிமிர்ந்து நிற்க வைக்க, வெள்ளை மாளிகையில் கார் வேந்தன் வந்திருக்கிறார், பராக் பராக் பராக் !! என்கின்றனர்.

ஆம்,
ஒபாமா ..
பராக் ஒபாமா .... !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்