Showing posts with label பாட்டி. Show all posts
Showing posts with label பாட்டி. Show all posts

ஏன் கடவுள்?



18+  வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!

ட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது.  இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.

வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால்,  அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?"  என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment;  இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.

அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.

இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது. 

குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.

திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ?   புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.

ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.

அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா?   அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?

மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு,  இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.  நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.

ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு,  விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'  என்றார். 

ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்;  என்ன ஒரு டைமிங். 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' 

அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?

இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.

ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும். 

அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.

அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!

நம் கேள்விகள் இதுவே.

அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்?   வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion. 

கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.

இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?

என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.


ந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு.  ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.


மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.

நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?



-பொன்னியின் செல்வன்-




பொங்கலன்று பாட்டியுடன்



ந்தப் பொங்கலுக்கு, பொங்கலோ பானையில் பொங்க, நிகழ்ச்சி நிரல்களோ தொலைக்காட்சியில் பொங்கிவழிந்தன.


எதை எடுப்பது? எதை விடுப்பது? ஆனாலும், கட்டைவிரல் நுனி களைத்துத்தான் போயிருக்கும். ஆமாம்! இருக்காதாப் பின்னே; கட்டைவிரலால் அந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்தியழுத்தி கட்டைவிரலே தேய்ந்திருக்கும். கழுதைத் தேய்ந்து கட்டைவிரலான கதையாய், கடைசியில் கட்டைவிரல் தேய்ந்து சுண்டுவிரலான கதையாய் அல்லவா ஆகியிருக்கும்.


நல்லவிதமாக, இந்த குழப்பமேதும் இல்லாமல், பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்ததால் கட்டைவிரல் தப்பித்தது.


சூர்யாவின் பேட்டி ஒரு சேனலில் வந்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில், மீடியாவைப் புகழ்ந்துத் தள்ளிவிட்டார் மனிதர். ஏனோத் தெரியவில்லை; இடம் பொருள் ஏவல் ஏதென்றறியாமல், 'ஈனம்' எனும் வார்த்தையினால் தோன்றிய சினம் குறைக்கவோ?


சூரியாவின் தம்பி கார்த்தியின் பேட்டிகள் சுவாரசியமாக இருக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது உள்ளத்தில் இருந்து பேசுவதும்; இயக்குனர் வரும்போது, எழுந்துநின்று மரியாதை செய்வதும்; பெருமைகளை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதும் என பிரமிக்க வைக்கிறார். சிவகுமாரின் மைந்தன் அல்லவா; சூரியாவின் தம்பி அல்லவா!


'நீயா நானா'  சிறப்பு நிகழ்ச்சியில் 'பேச்சு' தான் விவாதத்தலைப்பே. பேச்சாளர்கள் அணியில் உள்ள ஊறறிந்த பேச்சாளர்கள் மைக்கைப்பிடித்தால் விட மாட்டேனென்கிறார்கள். கேட்கப்படும் கேள்விக்கு நேராகவும் விடையளிக்க மாட்டேன்கிறார்கள். இதுல TRP ரேட்டிங்க் ஏத்தற மாதிரி, இறுதியில் ஒரு சச்சரவுப் பேச்சை ஒளிபரப்பி, மறக்காமல் 'தொடரும்' போட்டு விட்டார்கள்.


இணையத்தில் பார்த்தாலும் சில நிகழ்ச்சிகளை விளம்பரங்களோடுதான் பார்க்க முடிந்தது. அப்போதுதான் புரிந்தது; விளம்பர இடைவேளையில்தான் நிகழ்ச்சி ஓளிபரப்பாவதை. யாரு சார் சொன்னா பொருளாதாரம் படுத்து கிடக்குன்னு?


அவ்வப்போது, தொகுப்பாளினிகள் வந்து தூய இனிய செந்தமிழில், 'பொங்கள் வால்த்தும்' கூறினர், 'ஷோலர்' வரலாற்றையும் விவாதித்தனர்; உபயம்: ஆயிரத்தில் ஒருவன்.


'தமிழ் படம்' குழுவினரின் கலந்துரையாடல்கள் நல்ல நகைச்சுவையாகவும் காமெடியாகவும் இருந்தன. திரைப்படம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. 'தமிழ் படம்' பெயரில் 'ப்' இல்லை; ஏனோ தெரியவில்லை. மருதையில் இப்படித்தான் பேர் வைப்பாங்களோ!


இடையிடையே ஸ்ரேயா வந்துப் போனார். அதான் சொல்லியாச்சே 'இடையிடையே' என்று.


முக்கிய சேனல்களில், பட்டிமன்றம் இருந்தன. சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், இறையன்பு பட்டிமன்றமும் மிகச்சுவையாக இருந்தன. இறையன்பு பேச்சால் பிரமிக்க வைக்கிறார்கள். ஜெயா டி.வியில் பட்டிமன்றம் பயங்கர போர்;முழுமையாகப் பார்க்கப் பிடிக்கவில்லை. விஜய் டி.வியிலோ புதுமையாய் ஆன்மிக பட்டிமன்றம் இருந்தது. தலைப்பு, 'அவதாரம் தோன்றுவது காக்கவா? அழிக்கவா?' என்பதுதான். என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்டுவிடுவோம் என்று கேட்டதில், பல நேரங்களில் ச்சிப்பு பொத்துகிட்டு வருகிறது. மிக விரைவில் கி.வீரமணியும், கலைஞர் அவர்களும் இந்த தலைப்பில் பட்டிமன்றம் வைத்துப் பேசினால் ஆச்சரியமில்லை.


பொங்கல் தினத்தன்று ஒரு சேனலில், 'பொங்கல் செய்வது எப்படி' என்று ஆதிமுதல் அந்தம்வரை ஓன்னொன்னா விளக்கிக்கொண்டு இருந்தார்கள். 




அது சரி! 
குழந்தைகள் தினத்தன்று என்ன நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள் 
என்று அவர்களை விசாரிக்க வேண்டும்.




விஜய் டி.வியில், கோபிநாத்துடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி மயிர்க்கூச்செரிய வைத்தது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 'அகரம்' ஃபௌண்டேஷனின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹேட்ஸ் ஆஃப் சூர்யா!


என்ன ஒரே வருத்தம்ன்னா, பொங்கல் அன்று பாட்டிகிட்ட தொலைப்பேசியில பேசமுடியல.பாட்டியின் குரல் கேட்க முடியல. பாட்டி செல்போன் எங்கேயோ எப்படியோ தொலஞ்சிடுச்சாம். பாட்டியோட செல்ஃபோன உபயோகிக்க வாங்கிட்டு போறவங்க, எங்கயாச்சும் மறந்து வச்சிடறாங்களாம். பொங்கல் தினத்தன்று சர்க்கரைப் பொங்கல் சாப்பிட முடிந்தது. வெறும் சக்கரைப் பொங்கல் வாயில போட்டு என்ன பிரயோசனம்; அதுவும் பாட்டியின் குரல்கேட்க முடியாமல் 'செவிக்கு உணவில்லாத போது'!



-பொன்னியின் செல்வன்-

நிலவில் நூலகம் !





“நூல்……….…..” என்று தொடங்குகின்ற;
அல்லது “……….…..நூல்’ என்று முடிகின்ற;
அல்லது “……நூல்….…..” என்று கொண்ட;

நி
ற்
க.


ப்படி, தொடங்குகின்ற; முடிகின்ற; கொண்ட; என்றவுடன் ‘திருக்குறள்’ தான் போலும் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதீர்.


சற்றேனும் சிரமப்படாமல், சிந்தித்து சொல்லுங்கள்; ‘நூல்’ என்ற சொல் கொண்ட தமிழ் திரைப்படம் ஏதேனும் ஞாபகம் வருகிறதா? அட்லீஸ்ட். ‘காதல் நூல்’ என்றாவது தமிழ் திரைப்படம் வந்துள்ளதா? யாம் அறிந்தவரை இல்லை. ஆமாம் ! இவரு எல்லா மொழி திரைப்படமும் பார்த்து கரைத்து குடிச்சிட்டாரு; இதில் ‘யாமறிந்த’ ஒன்றுதான் குறைச்சல் !

சற்றே ‘கூகிள்’ செய்து பார்த்ததில், ஒரு தமிழ் திரைப்படம் ‘நூல்’ கொண்டு வெளிவந்தது தெரிந்தது. திரைப்படத்தின் பெயர் ‘நூல் வெளி’.


நகரங்களில், சினிமா கொட்டகையை கூட எளிதில் கண்டு பிடித்து விடலாம்; ஆனால் இந்த நூலகம் கண்டு பிடிப்பதற்கு பெரும் பிரயத்தனம் தான் பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சில சிறந்த நூலகங்கள்; சென்னை கன்னிமரா நூலகம். சென்னை தேவநேயப் பாவானர் நூலகம். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம். அதிலும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்தது.


சென்னையில் ஆட்டோ காரனிடம் நடந்த சம்பாஷனை; இதோ கீழே.

"யப்பா…. தேவநேயப் பாவானர் நூலகம் வரை போகனும்.. ஆட்டோ வருமா?"
"அத்து … எங்கக்கீது வாத்யாரே ?"
"அதான்ப்பா… இந்த ஆனந்தோ.. கீனந்தோ ? ஏதோ தியேட்டராமே ? அதுக்கு பக்கத்துலப்பா."
"அத்த மொதல்ல சொல்றதில்லயா வாத்யாரே ! இந்த பொஸ்தகம் எல்லாம் அடுக்கி வச்சிருப்பாங்களே அந்த பில்டிங்க் தானே ! ஏறு சாரே."

இதுதான் இன்றைய மக்களின், ‘நூலகம்’ பற்றிய விழிப்புணர்வின் விகிதாச்சாரம்.இப்படி எல்லாம் கேள்விகள் வந்தால் சந்திரனின் ‘நீர்’ இருந்து தான் என்ன பயன் ? ஒருவேளை, சந்திரனில் ‘நூல்’ இருந்திருக்க வேண்டுமோ ? 

அடுத்த முறை சந்திரயான் அனுப்பப் படும் போது, இந்திய செம்மொழிகளான சமஸ்கிருதத்திலும், தமிழிலும், ஒரு பொது மறை புத்தகத்தை (தமிழுக்கு : திருக்குறள்) நிலவில் வைத்து; சிறு மற்றும் முதல் ‘நூலகம்’ அமைத்து விட்டு வரலாம். பாருங்க, எல்லா விழிப்புணர்வுக்கும் திரைத்துறையையே நம்பிக் இருக்க முடியாது அல்லவா? இப்படி ‘நிலவில் நூலகம்’ வைத்தாலாவது சற்றேனும் நூலக விழிப்புணர்வு ஏற்படலாம் ! எவ்வளவோ யோசிக்கிறோம், இத யோசிக்க மாட்டோமா !


பாட்டி வடை எல்லாம் சுடுறாங்க நிலாவில் ! ஒருவேளை, பாட்டி சுட்ட வடை ஜவ்வு மாதிரி ‘நூல் நூலா’ இருக்கு என்று சொல்லி; “அட! நம்ம பாட்டி நிலாவில் ‘நூல்’ எல்லாம் வச்சிருக்காங்களே” என்று சொல்லியும் பெருமை பட்டு கொள்ளலாம்.


ஹரீஷ்

பாட்டி !!!



சௌந்தர்யவதி! ஆனாலும் துர்பாக்கியசாலி! அவள், சிறு வயதிலேயே தன் குங்குமம் பறி கொடுத்தவள்.

அவள் கூறிய கதைகளும், காட்டிய அன்பும், ஆட்டிய தூளியும்; இனி நான் எங்கேப் பெற முடியும்?

அவ்வப்போது வந்து, " ந்தா... காசு கொடு " ன்னு கேட்டு வாங்கிக்குவா. நான், புன்னகையோடும் மரியாதையோடும், அவளுக்கு, கையில் இருப்பதைத் தருவேன். எனக்கு தெரியும்; அவள் சேர்க்கும் பணம் என் அண்ணன் திருமணத்திற்கு அவள் தாலி வாங்கி தரணும்ன்னு ஆசைப் படுறது.

அவளுக்கு, எவ்வளவோ ஆசைகள் இருக்கும், இருந்து கொண்டும் இருக்கும். ஆனாலும், அவற்றை எப்போதாவது யாரிடமாவது சொல்லியிருப்பாளா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனாலும், அவள் ஆசை இன்னதென்று தெரிந்து விட்டால் அதை அவளுக்கு சொல்லாமலே செய்வதில் ஒரு பேரானந்தம் இருக்கும்!

அவள் கேட்கறது கோயிலுக்காக இருக்கும்; அவளுக்கு இருக்காது. என்னதான் கோயிலுக்கு பணம் தருவது எனக்கு அவ்வளவாக உடன் பாடு இல்லை என்றாலும், கடவுள் சிலைகள் மேல் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்றாலும், அவள் கேட்டால் கொடுத்து விடுவேன். கடவுளே கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா!

உலகில் நான் மதிக்கும் மிகப் பெரிய பெண், பாட்டி.

அவள் ஆக்கும் அமுது அமுதம். ராத்திரியில் வெளில நான் சாப்பிடக் கூடாது, வீட்டில் வந்து சாபிடனும்ன்னு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் இயக்க கற்றுக் கொண்டவள்.

நாங்கள் விருப்பப்பட்டோம் என்பதற்காகவே 'அறிவொளி' இயக்கத்தில் 'அ', 'ஆ' கற்று கொண்டு அவள் பெயரை எழுத பழகினாள். அவ என்ன கம்ப ராமாயணமா படிக்கப் போறா?

அவள், கிராமத்திலும் சிற்றூரிலும், தினமும் வெள்ளந்தியான மனிதர்களைப் பார்த்து பேசி வந்தவள்; அதுவே அவளுக்கும் பிடிக்கும். இப்போதோ, நகரத்தில் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொண்டு இருக்கிறாள். ஏனெனில், நானும் என் அண்ணனும் நகரத்தில் இருக்கின்றோம், என்ற ஒரே காரணத்தினால், அவள் இந்த நகரம் என்னும் நரகத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.
வள்ளுவன் வாக்கில் சொல்வதாய் இருந்தால்
      அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

      பிறன் போலே நோக்கப் படும்.

பணம் இல்லை என்றால் பெற்ற தாயாலும் கூட பிறர் போல பார்க்க படுவார் என்கின்றார் வள்ளுவர். அந்த அளவுக்கு பணம் தன் வேலை காட்டுகின்றதாம். நானோ நகரம் தாண்டி, நாடு தாண்டி, அவளைப் பார்த்து கொள்ளாமல், செய்நன்றி மறந்து பணம் புரட்ட வந்திருக்கேன். அது விதி செய்த சதி !

நகரத்தில் இருந்து, உடம்பு சரியில்லாம போச்சுன்னா வேது பிடிக்க, அந்த பச்சிலைகளை அவ எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? அது அவளுக்கு தான் வெளிச்சம்!

அவள் எதுவுமே கேட்க மாட்டாள்; அப்படி பட்டவ "ந்தா.. அந்த கஸ்தூரி என்ன ஆனான்னு தெரியல; சித்த டிவி போடு" -ங்கறா .

பாட்டி, தொலைகாட்சியில் நாடகம் பார்க்கும் போதும், "ஐயய்யோ இந்த பாவி பய இப்படி பண்றானே" என்று நடிப்பவர்களுக்காகவும் தன் இரக்கத்தை காட்டுபவள்.

அவள், அந்தக் காலத்து பெண்மணி. அவளுக்கு அகங்காரம் அசூயை என்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை; சத்தியம்... சத்தியம்... சத்தியம் ....!!! இதை அவளுடன் நான் அதிக காலம் இருந்ததினால் சொல்கிறேன்.

பல படங்களையும் பார்த்து  நான் அவ்வளவாக பிரமிப்பு அடைவதில்லை. ஆனாலும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்து மிகவும் பிரமித்து போனேன். படத்தின் பெயர் 'The Way Home'. முடிந்தால் அந்த படம் பாருங்கள். முடியலைன்னா உங்க பாட்டியையாவது பார்த்து கொள்ளுங்கள்.

நடு இரவாக இருக்கும். அவள் அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பாள். நானும் உறவினரும் வீட்டுக்கு வருவோம். தூங்கிகிட்டு இருக்கிறவ எழுந்து வருவாள். வந்து, சாப்டியான்னு கேட்டு, சாப்பிடலைன்னா சமையல் பண்ணி சாப்பாடு தருவா. இது நான் நடு ராத்திரியில் வருவதால் இல்லை, வீட்டிற்கு யார் நடு ராத்திரியில் வந்தாலும் அவர்களுக்கு இந்த உபசரிப்பு நிச்சயம்.

கோவில் போய்விட்டு வருவா. வந்தவுடன் கோவில் பிரசாதம் எல்லாத்தையும் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்து விடுவா. அவள் சாப்பிட்டாளா?என்று யாருக்கும் தெரியாது.

அவளுடைய வயதிற்கு, அவள் பார்த்த மனிதர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று நான் பிரமிப்பது உண்டு. அவளால் நாங்கள் பாக்கியம் அடைந்தோம் என்று பல முறை பலரால் அறிந்திருக்கின்றோம்.

ஒருமுறை வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்கள் பலவற்றை எடுத்து குப்பையில் போட்டு, வீட்டை சுத்த படுத்தணும்னு, பல பொருட்களை எடுத்து சென்று, தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அதில் சில பீங்கான் தட்டுகளும் அடங்கும். இதை எல்லாம் பாட்டி கவனித்து கொண்டு இருந்தாள். நான் வீட்டிற்க்கு வந்தவுடன், "பீரோவ்ல பீங்கான் தட்டு இருந்திச்சே அது எங்க?" ன்னு கேட்டா .. ...நான், "அத யாரு யூஸ் பண்றா, அதான் குப்பை தொட்டியில போட்டுட்டேன்" அப்டின்னேன்.
அவ, "அது உன் தாத்தா வாங்கியாந்தது" அப்டின்னா; அவள் கண்கள் ஈரமாவது தெரிந்தது; அப்போதும் அவள் திட்டவில்லை கோவப்படவில்லை. நான் அப்போதே திரும்பி போய் குப்பை தொட்டியிலிருந்து அந்த பீங்கான் தட்டை எடுத்து வந்து விட்டேன்.

அவள் சொல்லி இருக்கா, சின்ன வயசில என்ன இடுப்புல வச்சுக்கிட்டு, அவ ஆத்துக்கு குளிக்க வந்தாளாம். ஆத்துல நல்லா தண்ணி ஓடிகிட்டு இருந்திச்சாம். என்ன கரையில விட்டுட்டு அவ குளிச்சிட்டு வந்திருக்கா. வந்து பார்த்தா என்ன காணுமாம். அவ பதறி போயிட்டாளாம். உசிரே போச்சாம் அவளுக்கு; என்ன ஆச்சு புள்ளைக்கு-ன்னு? சுத்தி முத்தியும் பாத்தாளாம், ஒரன்டியும் அகப்படலயாம்; எங்கேயோ பக்கத்தில் 'பொளக்' 'பொளக்'ன்னு சத்தம் கேட்டிச்சாம்; கிட்ட வந்து பார்த்தா, காட்டான் மணி செடியில் தண்ணியில் கரையோரமா சிக்கிக்கிட்டு தண்ணிய குடிச்சுகிட்டு கிடந்தேனாம். "ஐயோ" அப்டீன்னு ஓடி வந்து என்ன தூக்கிட்டு வந்தாளாம். அப்புறம் தான் அவளுக்கு உசிரே வந்துச்சாம்.
எனக்கும் அப்பிடித்தான் இருக்கும்!

இப்பவும் அப்பப்ப பணம் கேட்கிறா. நானும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அடுத்த 'தாலி' வாங்க ஆரம்பமாகி விட்டாள் போல பாட்டி!

ஆயிரம் உன்டிங்கு அழகி; ஆனாலும் அவ்வாயிரமும் என் பாட்டி முன் பணிந்து தான் போக வேண்டும். பாட்டி, அந்த ஆயிரத்திற்கும் அன்பிலும், அழகிலும் அம்மாவாய் இருப்பாள்.

நான் வெளியூர் செல்லும் முன் அவளிடம் வாக்கு கொடுத்தபடி, அவளை அழைத்துக்கொண்டு கோவில் சென்றேன். அவள் கோவிலில் கூறிய ஆசிகள், என்றும் என் உள்ளங்களில் ரீங்காரமிடும். அவள் துக்கங்களை கூறி, பின் மனமார வாழ்த்துகின்றாள் "மவராசனா இரு"-ன்னு. நான் இப்போது நினைத்து கொள்கிறேன், உன் பேரனாய் இருந்து ஆண்டியாகவும் இருக்க ஆனந்தமே.

அவளை கஷ்ட படுத்துகின்றவரை-யோ, அவமரியாதை செய்பவரை-யோ, முகம் சுளிக்க வைப்பவரையோ யார் தடுத்தாலும் விடேன்.

நான் பல நேரங்களில் நினைப்பது உண்டு. பாட்டிக்கு ரகசியம் ஏதாவது மனதிற்குள்ளாகவே வைத்திருக்கிறாளா என்று. இப்போ நினைத்து பார்க்கும் போது உண்மை புரிகின்றது. அவள் பல ரகசியங்களை மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறாள் என்று. அவளை கஷ்டப் படுத்தியவரை-யும் , த்வேஷித்தவர்களை-யும் , வஞ்சித்தவர்களை-யும் வருத்தியவரையும் அவள் மற்றவரிடம் சொல்லுவதே இல்லை. எல்லாமே இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறாள். இவ்வளவுக்கு பின்னும், அவள் அவர்களை அன்புடன் அனுசரிக்கின்றாள், பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றாள் .
Paati ...... You are great !!!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்