Showing posts with label திராவிடர் கழகம். Show all posts
Showing posts with label திராவிடர் கழகம். Show all posts

வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?

வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?



'ந்து மதத்ததில் சாதி கிடையாது' என்று நம்பும் நவீன நாயகர்களே....


'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டியம் கூறுவோரே...

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' என்று கட்டவிழ்த்து விடும்  காளையரே.....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' எனும் பெருந்தனக் காரர்களே....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' என்று உளரும் சிறு உள்ளதோரே....
***********
'இந்து மதத்ததில் சாதி கிடையாது' - அப்படியா?  நம்புவோமாக !?!

'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' - அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' - அப்படியா?  நம்புவோமாக !?!
***********
எவ்வளவோ நம்புறோம் இத நம்ப மாட்டோமா என்கிறீர்களா? நிற்க!

நாம் கூறுவதையாவது நம்பாதீர்கள்.

ஏன் என்றால்? நீங்களே கூட உங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது, இங்கே கூறப்போவது நேர்மையாக
இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இல்லை
மாறாக, பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்க சொல்லுவார்கள்

அப்படி பகுத்தறிந்து ஆராய்ந்து தான் இந்தக் கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடங்குவதற்கு முன்னர் சில கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கு முடிவில் விடை கிடைகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம்

கேள்விகள் இதோ:
- இந்து மதத்தின் சாரம் எவை ?
- வர்ணாசிரமத்தின் விளக்கம் எதிலே இருக்கிறது ?
- வர்ணாசிரமம் என்றால் என்ன ?
- வர்ணசிரமத்தினால் பயன் அடைவோர் யார் ?
- வர்ணசிரமத்தினால்,  இழப்பையும் இழிவையும் அடைவோர் யார் ?
- வர்ணாசிரமம் மனிதர்களுக்குத் தேவையா ?
- இந்து மதம்  மனிதர்களுக்குத் தேவையா ?
- மனிதர்களுக்கு  மதம் தேவையா ?

இந்து மதத்தில், இந்து மதத்தை விளக்க ஆதாரமாக இருப்பவையாகக் கூறப்படுவது:
  • வேதம்
  • மனு தர்மம் 
  • உபநிஷதம்
  • புராணம்
  • காவியம்
  • வேதாந்தம்
இன்னும் இத்யாதி இத்யாதிகள் இருக்கும்....

'இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரமத்தை, மொழி பெயர்க்கையில்  நம் மக்கள்தான் மனுதர்மத்தை திரித்து எழுதி விட்டார்கள்' - என்று நம்பிக்கொண்டு இருப்போர்களே;  உங்களுக்கே உங்களுக்காகதான் 'George Buhler' என்ற வெளிநாட்டு(ஜெர்மன்) அறிஞர் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மனுதர்மத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறோம்

மொழி பெயர்ப்பாளர் : ஜெர்மனிகாரர்
மொழி பெயர்த்தது : சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த வருடம் : 1886
மொழி பெயர்ப்பாளர் இறந்த வருடம் : 1898
தந்தை பெரியார் பிறந்த வருடம் : 1879

அது சரி, தந்தை பெரியார் பிறந்த வருடத்தை ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்று வியப்படையத் தேவை இல்லை; எங்கே இருந்து யார் வருவார் என்றே தெரியாது, என்ன சொல்வார் என்றே தெரியாது. '



பெரியார் சொல்லித்தான் George Buhler அப்படி மொழி பெயர்த்தார்' என்று தேவை இல்லாத விதண்டா வாதம் வைத்தாலும் வைத்து விடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கை தான்  :) 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார  நிருவனத்தில், மனுநீதி பற்றி தமிழர் தலைவர் அவர்கள் 'அசல் மனுதரும சாஸ்திரம்' என்ற அராய்ச்சி புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதை  வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், தற்போது தமிழகத்தில் இல்லாததால்(வெளிநாட்டில் [லண்டனில்] இருப்பதால்),  மனு நீதி பற்றிய  திராவிடர் கழக வெளியீடுகளை வாசிக்காமலே, இந்த முயற்சியில் இறங்கி இருப்பதால், ஒரு வகையில் இந்தக் கட்டுரையின் நோக்கதிற்கு ஒரு தேக்கம் தான். ஆனாலும், தந்தை பெரியார் காட்டிய ஆராய்ச்சிப் பாதையில், சிறிதேனும் முயற்சி செய்து ஆங்கில மொழி பெயர்ப்பையே ஆதாரமாகக் கொண்டுதான் இந்த கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது.




இந்து மதத்தின் மனு தர்மத்தைப் புரிந்து கொள்வதற்கு, கீழ்க் கண்ட தகுதிகள் இருந்தாலே போதும்.








தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் :)


ஆங்கிலப் புலமை இல்லாவிடினும்ஆங்கிலத்தில் வாசிக்க மற்றும் புரிந்து கொள்ளக் கூடிய திறமை
கற்பனையான இழிவு நிலையில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம்

அதிலும், இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கான சுட்டியும் இங்கே கொடுக்கப்படும்.மனு தர்மம் முழுமையையும் மொழி பெயர்ப்பது அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம். மாறாக, மனிதர்களை இழிவு படுத்தும், பிரிவு படுத்தும், ஒரு சாரார் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் ஓரவஞ்சனைப் பற்றிய, மற்றும் பகுத்தறிவுக்கு ஏற்க முடியாத அளவிற்கு உள்ள ஸ்லோகங்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் படும்.

'இப்படிக் கூறுகிறீரே, மனு தர்மத்தில் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் இருக்குமே; அதை எல்லாம் ஏன் கூறவில்லை' என்று சண்டை சச்சரவு செய்யாதீர்கள். அப்படி நல்ல செய்திகள் இருந்தால், அதை தாங்கள் எழுதுங்கள்; அதை வாசிக்க ஆர்வமாய் இருக்கிறோம்

நாம் என்ன கூறுகிறோம் என்றால், 'இழிவில் போய் மலர் வாசனை தேடலாமா' என்றுதான் கூறுகிறோம்.

தொடரும்....

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


காலப்  போக்கில் கல் தோன்றி; மற்றோர் நாள் மண் தோன்றி; அன்றோர் நாள் அமீபா(Amoeba) தோன்றி; வருடங்கள் உருண்டோடி குரங்கு உருவாகி; பரிணாம வளர்ச்சியில் பின் தோன்றிய பழங்குடிகளில், மூத்த குடியான திராவிடர்கள் தோற்றுவித்த உன்னத மொழி, உயிர் மொழி - தமிழ் மொழி !

அப்படிப்பட்ட தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழுப்பும் இவ்வேளையில், சந்து வழியாக சமஸ்கிருத கும்பல், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிக்க முயற்சி செய்கிறது.

நல்ல வாய்ப்பாக,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
போல், திராவிடர் கழகம்தான் இந்த சந்து வழி சமஸ்கிருத எழுத்துத் தினிப்பு முயற்சியைக் கண்டுபிடித்து, எழுத்து தினிப்பைத் தடுக்க தடுப்பணையும் போட்டுள்ளது.

விழிக்கு எப்படி ஒளி பிரதானமோ, அப்படியே மொழிக்கு ஒலி பிரதானம். எந்த ஒரு மொழிக்கும், ஒலி மிக முக்கியம்; அந்த ஒலிகளுக்கு இணையாகத்தான் எழுத்துக்கள் வருகின்றன. தமிழில் பல சிறப்பான ஒலிகள் உள்ளன. அதாவது, 'எ' 'ஒ' 'ற' 'ன' 'ழ'  போன்றவை.

'வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி.  சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.

தமிழின் மேன்மையைப் பாருங்கள்; தமிழோ, 'எல்லாமே நம் ஊர்தான்; எல்லோரும் நம் உறவினர்' 'பிறப்பால் எல்லா உயிரும் சமந்தான்' என்று கூறி இணைக்கிறது. அதாவது, காசியும் நம் ஊர்தான், கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியும் நம் உறவினர்தான், எனும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டது தமிழ் மொழி. நமக்கு மனிதர்கள் எதிரிகள் இல்லை; சில 'மனிதர்களின் தீய கொள்கைகள்தான் எதிரிகள்'. இந்த தீப கர்பத்தில், திராவிடர்களுக்கு பார்ப்பனர்களின் பார்ப்பனீயம்தான் தீய கொள்கையாக இருக்கிறது. பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இல்லை திராவிடர் கழகத்தினர். மாறாக, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்ப்பவர்கள்.
  
திராவிட மொழிகளுக்கு எல்லாம் தமிழே வேர் மொழி. அந்த வேரில் விஷத்தை ஏற்றினால், மரம் கிளைகளுக்கும் பரவிவிடும் என்ற எண்ணத்தில், விஷமிகள் விஷக் கிருமிகளை வேரில் புகுத்த எத்தனிக்கிறார்கள். பெரியார் வளர்த்த பகுத்தறிவுக் கூட்டத்திடம் பலிக்குமா இந்த விஷக் கிருமிகளின் விசேஷங்கள்? பலிக்காது! 
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
போல, நல்லதோர் சிந்தனைச் சிற்பிகளை அல்லவா தந்தை பெரியார் எனும் சமூக மருத்துவர் உருவாக்கியுள்ளார்கள்.

எது விஷக் கிருமி? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிப்பதுதான். சிறீராமன் சர்மா என்பவர் Unicode Consortium-க்கு ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார். என்ன விண்ணப்பம்? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் மொழி பெயர்க்க சிரமமாய் இருப்பதால், மொழி பெயர்ப்பை எளிதாக்க சமஸ்கிருத எழுத்துக்கள் 26 ஐ தமிழில் எழுத்தாக தினிக்க விண்ணப்பம் இட்டுள்ளார்.

தமிழகத்தின், மொத்த மக்கள் தொகையில்  6 கோடியே 25 லட்சம்  பேரில், நூற்றுக்கு நான்கு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இருக்க மாட்டார்கள் (இது உத்தேசமான கணக்குத்தான். அடுத்த வருடம் சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்தவுடன் உண்மை நிலவரம் அறியலாம்). அந்த நான்கு சதவீதத்தில் எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருக்கப் போகிறார்கள்?. நான்கு சதவீதம் என்று உத்தேசித்தால், தமிழக மக்கள் தொகையில், ஆறே கால் கோடி பேரில், வெரும் 25 லட்சம் மக்களுக்காக, மற்ற 6 கோடி மக்கள் புழங்கும் ஒரு மொழியில், சமஸ்கிருத மொழியின் எழுத்துகளை சேர்த்தால், ஏற்றுக் கொள்ளலாமா? உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் கூடுதல் பேருக்கும் இந்த 'சந்து வழி சமஸ்கிருதத்  திணிப்பால்' திண்டாட்டம் வந்து விடுமே! பார்த்தீர்களா இந்த சமஸ்கிருத கூட்டம் 'சந்து வழி சிந்து பாடுவதை'! இதைத் தடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா!? கடமை கிடக்கட்டும். இந்த சமஸ்கிருதத் தினிப்பை தடுக்க வேண்டியது நமது உரிமை அல்லவா!?

சமஸ்கிருத படைப்புகளை நம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, சமஸ்கிருத எழுத்தைத் தமிழில் தினிக்கப் பார்க்கிறார்கள். தமிழில் உள்ள உலகப் பொது மறையான உயரிய திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க சிரமமாய் இருக்கும் என்று கூறி, தமிழ் எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், இந்த 'சைட் வாசல் சமஸ்கிருதத் தினிப்பு' கூட்டத்திற்க்குப் பொறுக்குமா?

தமிழை நீச பாஷை என்றவர்கள் தான் சமஸ்கிருதம் போற்றும் சங்கராச்சாரியார்கள்.

"பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?" என்று தந்தை பெரியார் அவர்கள் கொதித்து எழுந்ததின் காரணத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.

தமிழ் செழுமையான மொழி. இந்த செழுமையான மொழியில் வார்த்தைகள் ஏராளம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வார்த்தைகள் கூட்டிக் கொண்டே போகலாம் - ஒலிகள் மாறாமல்.

தமிழ் ஓர் உயிர் மொழி. அதிலும், திராவிட மொழிகளுக்கு தமிழே ஆணி வேர். அந்த ஆணி வேரை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது சமஸ்கிருதத்தால்.
சமஸ்கிருதம் ஓரு பட்ட மரம்; தமிழோ வளரும் ஆல மரம்! தமிழனுக்கு என்றொரு நாடு, என்று பெருமை கொள்ளும் நாளும் வரும்.

உண்மையுடன் 
பொன்னியின்  செல்வன்

நன்றி : 

ஏன் கடவுள்?



18+  வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!

ட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது.  இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.

வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால்,  அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?"  என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment;  இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.

அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.

இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது. 

குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.

திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ?   புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.

ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.

அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா?   அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?

மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு,  இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.  நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.

ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு,  விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'  என்றார். 

ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்;  என்ன ஒரு டைமிங். 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' 

அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?

இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.

ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும். 

அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.

அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!

நம் கேள்விகள் இதுவே.

அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்?   வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion. 

கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.

இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?

என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.


ந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு.  ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.


மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.

நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?



-பொன்னியின் செல்வன்-




நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்