
இந்தப் பொங்கலுக்கு, பொங்கலோ பானையில் பொங்க, நிகழ்ச்சி நிரல்களோ தொலைக்காட்சியில் பொங்கிவழிந்தன.
எதை எடுப்பது? எதை விடுப்பது? ஆனாலும், கட்டைவிரல் நுனி களைத்துத்தான் போயிருக்கும். ஆமாம்! இருக்காதாப் பின்னே; கட்டைவிரலால் அந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்தியழுத்தி கட்டைவிரலே தேய்ந்திருக்கும். கழுதைத் தேய்ந்து கட்டைவிரலான கதையாய், கடைசியில் கட்டைவிரல் தேய்ந்து சுண்டுவிரலான கதையாய் அல்லவா ஆகியிருக்கும்.
நல்லவிதமாக, இந்த குழப்பமேதும் இல்லாமல், பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்ததால் கட்டைவிரல் தப்பித்தது.
சூர்யாவின் பேட்டி ஒரு சேனலில் வந்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில், மீடியாவைப் புகழ்ந்துத் தள்ளிவிட்டார் மனிதர். ஏனோத் தெரியவில்லை; இடம் பொருள் ஏவல் ஏதென்றறியாமல், 'ஈனம்' எனும் வார்த்தையினால் தோன்றிய சினம் குறைக்கவோ?
சூரியாவின் தம்பி கார்த்தியின் பேட்டிகள் சுவாரசியமாக இருக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது உள்ளத்தில் இருந்து பேசுவதும்; இயக்குனர் வரும்போது, எழுந்துநின்று மரியாதை செய்வதும்; பெருமைகளை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதும் என பிரமிக்க வைக்கிறார். சிவகுமாரின் மைந்தன் அல்லவா; சூரியாவின் தம்பி அல்லவா!
'நீயா நானா' சிறப்பு நிகழ்ச்சியில் 'பேச்சு' தான் விவாதத்தலைப்பே. பேச்சாளர்கள் அணியில் உள்ள ஊறறிந்த பேச்சாளர்கள் மைக்கைப்பிடித்தால் விட மாட்டேனென்கிறார்கள். கேட்கப்படும் கேள்விக்கு நேராகவும் விடையளிக்க மாட்டேன்கிறார்கள். இதுல TRP ரேட்டிங்க் ஏத்தற மாதிரி, இறுதியில் ஒரு சச்சரவுப் பேச்சை ஒளிபரப்பி, மறக்காமல் 'தொடரும்' போட்டு விட்டார்கள்.
இணையத்தில் பார்த்தாலும் சில நிகழ்ச்சிகளை விளம்பரங்களோடுதான் பார்க்க முடிந்தது. அப்போதுதான் புரிந்தது; விளம்பர இடைவேளையில்தான் நிகழ்ச்சி ஓளிபரப்பாவதை. யாரு சார் சொன்னா பொருளாதாரம் படுத்து கிடக்குன்னு?
அவ்வப்போது, தொகுப்பாளினிகள் வந்து தூய இனிய செந்தமிழில், 'பொங்கள் வால்த்தும்' கூறினர், 'ஷோலர்' வரலாற்றையும் விவாதித்தனர்; உபயம்: ஆயிரத்தில் ஒருவன்.
'தமிழ் படம்' குழுவினரின் கலந்துரையாடல்கள் நல்ல நகைச்சுவையாகவும் காமெடியாகவும் இருந்தன. திரைப்படம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. 'தமிழ் படம்' பெயரில் 'ப்' இல்லை; ஏனோ தெரியவில்லை. மருதையில் இப்படித்தான் பேர் வைப்பாங்களோ!
இடையிடையே ஸ்ரேயா வந்துப் போனார். அதான் சொல்லியாச்சே 'இடையிடையே' என்று.
முக்கிய சேனல்களில், பட்டிமன்றம் இருந்தன. சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், இறையன்பு பட்டிமன்றமும் மிகச்சுவையாக இருந்தன. இறையன்பு பேச்சால் பிரமிக்க வைக்கிறார்கள். ஜெயா டி.வியில் பட்டிமன்றம் பயங்கர போர்;முழுமையாகப் பார்க்கப் பிடிக்கவில்லை. விஜய் டி.வியிலோ புதுமையாய் ஆன்மிக பட்டிமன்றம் இருந்தது. தலைப்பு, 'அவதாரம் தோன்றுவது காக்கவா? அழிக்கவா?' என்பதுதான். என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்டுவிடுவோம் என்று கேட்டதில், பல நேரங்களில் ச்சிப்பு பொத்துகிட்டு வருகிறது. மிக விரைவில் கி.வீரமணியும், கலைஞர் அவர்களும் இந்த தலைப்பில் பட்டிமன்றம் வைத்துப் பேசினால் ஆச்சரியமில்லை.
பொங்கல் தினத்தன்று ஒரு சேனலில், 'பொங்கல் செய்வது எப்படி' என்று ஆதிமுதல் அந்தம்வரை ஓன்னொன்னா விளக்கிக்கொண்டு இருந்தார்கள்.
அது சரி! குழந்தைகள் தினத்தன்று என்ன நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள் என்று அவர்களை விசாரிக்க வேண்டும். |
விஜய் டி.வியில், கோபிநாத்துடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி மயிர்க்கூச்செரிய வைத்தது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 'அகரம்' ஃபௌண்டேஷனின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹேட்ஸ் ஆஃப் சூர்யா!
என்ன ஒரே வருத்தம்ன்னா, பொங்கல் அன்று பாட்டிகிட்ட தொலைப்பேசியில பேசமுடியல.பாட்டியின் குரல் கேட்க முடியல. பாட்டி செல்போன் எங்கேயோ எப்படியோ தொலஞ்சிடுச்சாம். பாட்டியோட செல்ஃபோன உபயோகிக்க வாங்கிட்டு போறவங்க, எங்கயாச்சும் மறந்து வச்சிடறாங்களாம். பொங்கல் தினத்தன்று சர்க்கரைப் பொங்கல் சாப்பிட முடிந்தது. வெறும் சக்கரைப் பொங்கல் வாயில போட்டு என்ன பிரயோசனம்; அதுவும் பாட்டியின் குரல்கேட்க முடியாமல் 'செவிக்கு உணவில்லாத போது'!
-பொன்னியின் செல்வன்-