ஏன் கடவுள்?



18+  வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!

ட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது.  இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.

வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால்,  அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?"  என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment;  இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.

அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.

இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது. 

குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.

திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ?   புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.

ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.

அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா?   அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?

மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு,  இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.  நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.

ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு,  விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'  என்றார். 

ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்;  என்ன ஒரு டைமிங். 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' 

அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?

இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.

ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும். 

அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.

அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!

நம் கேள்விகள் இதுவே.

அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்?   வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion. 

கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.

இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?

என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.


ந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு.  ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.


மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.

நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?



-பொன்னியின் செல்வன்-




கல்வியும் கேள்வியும்

Exam Royalty Free Stock Photo

ற்போது, இந்தியா முழுமைக்கும், பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரே நுழைவுத் தேர்வுமுறை வரலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. அதாவது சீர்மை uniformity படுத்துவதற்காக; மற்றும், மாணவர்கள் அதிகமான நுழைவுத்தேர்வுகள் பங்கேற்கும் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக.

அதாவது, மாணவர் அதிகாலையிலேயே எழுந்து, குளிரும் பனியில், ஐ.ஐ.டி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வந்து; சிற்றுண்டி என்ற பெயரால் சிறிது பிரெட்டை பிட்டுச் சாப்பிட்டுவிட்டு; பின், பள்ளிக்கு சென்று பாடங்களையும் கவனித்துவிட்டு; மாலை வந்து ஸ்டேட் என்ட்ரென்ஸ் எஃஸாம் கோச்சிங்  சென்றுவிட்டு; பின், பள்ளியில் பயிலும் பாடத்திற்கான டியூஷன் சென்றுவிட்டு வந்து; அதற்கும் பின், பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடம், கோச்சிங் கிளாசில் கொடுத்த வீட்டுப்பாடம், டியூஷனில் கொடுத்த வீட்டுப்பாடம் என அனைத்தையும் முடித்துவிட்டு மணியைப் பார்த்தால் இரவு பணிரெண்டு.

அதிலும் மாணவர்களுக்கு இருக்கும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் பாடம் நடத்தும்போது, என்னதான் டியூஷனில் அந்தப் பாடத்தை ஏற்கனவே கற்றிருந்தாலும், டியூஷனில் அந்தப் பாடத்தை கற்காதது போலும், தான் டியூஷனே போகவில்லை, பள்ளி ஆசிரியராகிய உங்கள் பாடத்தைத்தான் முழு கவனத்தோடும் கவனிக்கிறேன் என்பதுபோல் கவனிக்க வேண்டிய கட்டாயம். இல்லாட்டி, இன்டேர்னல் மார்க் யார் சார் போடுறது? பள்ளி ஆசிரியரல்லவா இன்டேர்னல் மார்க் போடுவது.

+2 முடிந்து நுழைவுத்தேர்வு இருந்த காலங்களில், நுழைவுத்தேர்வு எழுதப் போகும்போது மறக்காமல் தாயக்கட்டை எடுத்துப்போகும் வழக்கம் எல்லாம் உண்டு. பின்னே, பதில் எப்படி எழுதுவதாம்? அதிலும் சிலர், நல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், துளியும் பயமின்றி தைரியமாக பரீட்சையெழுதலாம். என்னதான் முட்டி மோதினாலும், அந்தர் பல்டியடித்தாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை பிறகு ஏன் வீண் டென்ஷன்? அப்படி இருக்கையில்தான், ஆகா! தாயமே நம் சகாயம், என்று எண்ணத் தோன்றும்.

அப்புறம் இந்த கணக்குப் பாடம் இருக்கே, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அப்போதுதான் முடிந்த +2 பொதுத்தேர்வில், 10 மதிப்பெண் கேள்வியாக வந்த அதே கேள்வி; அதுவும், மூன்று பக்கம் வரை நீள்கிற பெரிய பதில்; நுழைவுத்தேர்விலோ வெறும் கால் மதிப்பெண் அல்லது அரை மதிப்பெண்ணுக்கு கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கும். அப்போது மட்டும் தாயத்தை சற்றே வேகமாக உருட்டுவது ஷேமம். நேரம் பொன் போன்றது இல்லையா?

நுழைவுத்தேர்வில் கேள்வி வரிசைகள் விதவிதமாக இருக்கும். அதாவது, கேள்விகள் ஒன்றுதான்; ஆனாலும், கேள்வி வரிசைகள் வித்தியாசமாக இருக்கும். தேர்வு அறையில், வரிசையில் உட்கார்ந்திருக்கும் மாணவருக்கு, கேள்வி வரிசை வெவ்வேறாக இருக்கும். ஆனாலும் கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? வழக்கம்போல், முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர் எழுதிய அதே பதிலை, பின்னால் இருக்கும் மாணவரும் எழுதினால்தான், தேர்வு எழுதிய திருப்தி இருக்கும்.

முன்னால் இருக்கும் மாணவருக்கு கேள்வி, நிலவைப் பற்றி இருக்கும்;
பின்னால் இருக்கும் மாணவருக்கோ கேள்வி, தாஜ்மகாலைப் பற்றி இருக்கும். ஆனாலும் விடை தேர்வு செய்வதோ முன்னால் இருக்கும் மாணவரைப் பார்த்து. இப்படியாக, அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுபோடும் விதமாக மதநல்லிணக்கமும் இருக்கும் நுழைவுத்தேர்வில்.

பெரும்பாலும், நுழைவுத்தேர்வுகள் அருகில் உள்ள கல்லூரிகளில் நடக்கும். நுழைவுத்தேர்வு நடக்கும்போது, சில கல்லூரிகளில் ஐஸ்சர்பத் மோர் எல்லாம் கொடுப்பார்கள். நுழைவுத்தேர்வு முடிந்தவுடன் திரும்பிவரும் மாணவரிடம், 'என்ன பரீட்சை சூப்பரா?' என்று வினவினால், மாணவனோ 'ம்.... மோர் ரொம்ப சூப்பர்' என்று சொல்வதையும் கேட்க நேரிடும். பின்னே, எது சிறப்பாக செய்தாரோ அதைத்தானே மாணவர் சொல்லமுடியும்.

அதிலும் சில மாணவர், ஏதோ சட்டசபைக்கு வரும் அரசியல்வாதிபோல், நுழைவுத்தேர்வு அறைக்குள் நுழைந்து, அடுத்த ஐந்து நிமிடத்தில் பேப்பரை கொடுத்துவிட்டு சென்றுவிடுவர்.

இவ்வாறாக, நுழைவுத்தேர்வு பல சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் சில வருடம் முன்னர்தான் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

மேலும், நுழைவுத்தேர்வை ரத்துசெய்ததன் மூலம் கிராமப்புற மாணாக்கர் பலரும் இப்போது நல்ல விதமாக பொறியியல் கல்லூரிகளில் சேர, அவர்கள் எடுத்த நல்ல பொதுத்தேர்வு மதிப்பெண்ணே போதும் என்ற நிலை இருக்கிறது. கிராமப்புற மாணாக்கர் தற்போதுதான் நகர்ப்புற மாணவர்களின் போட்டியை சமாளிக்க முடிகிறது. நகர்ப்புற மாணவர்களால் நுழைவுத்தேர்வு சிறப்பாக செய்வதற்கு தகுந்த வசதிகள் இருக்கின்றன. ஆனால், கிராமப்புற மாணாக்கருக்கு அந்த வசதியும் இல்லை, வசதி இருப்பினும் செலவு செய்யும் சூழ்நிலையும் இருப்பதில்லை. அப்படி இருக்கையில், கல்வியில் இரண்டு சம  சூழ்நிலைகள் உள்ளோருக்கு இடையில்தானே போட்டி இருக்கவேண்டும். அதுதானே முறையாக இருக்கும்?  அந்தவகையில் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் ரத்துசெய்தது சிறப்பான செயலாகும்.

மாநிலத்திற்குள்ளேயே இந்த கல்வி சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்றால், இந்தியா முழுதும் ஒரே நுழைவு தேர்வு வந்தால், பின், மாநிலத்தின் மாநகரங்களில் உள்ள மாணாக்கருக்கும் நாட்டின் தலைநகரில் உள்ள மாணாக்கருக்கும் கூட அது கல்விச்சூழலில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் அபாயம் இருக்கிறதா என்றுத் தெளிவாகத் தெரியவில்லை. அப்படி நகர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உண்டாக்குமேயானால்; அது, கிராமப்புற மாணாக்கரை எவ்வளவு பாதிக்கும்? மிக அதிகமாக அல்லவா பாதிக்கக்கூடும்.

இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் வரும் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறதாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2002 ஆம் ஆண்டில், 86வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது; அதாவது, கல்வி அடிப்படை உரிமை (Right to Education). அதில் குறிப்பிடப்படுவது என்னவெனில், ஆறு முதல் பதினான்கு வயதுவரை உள்ள அணைத்து மாணவர்களுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் கல்வி அடிப்படை உரிமையின் நோக்கம். இது இன்னும் ஏட்டளவிலே இருக்கிறது. இதை நடைமுறைப் படுத்த செயல்வடிவம் இன்னும் வரவேண்டி உள்ளது.

கல்வி அடிப்படை உரிமையினால் குறைந்தபட்சம் சில தலைமுறையையாவது மேல்நிலைப்பள்ளி அடைய வைக்க முயற்சி செய்துவிட்டு, பிறகு தானே இந்த மேல்நிலைக் கல்விச்சீர்மை பற்றி சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.

எடுத்துக்காட்டிற்கு,  உயர்கல்வி எனும் சீர்மையான கனியை அடைய வேண்டும் என்கிறார்கள்; அப்படியெனில் முதலில் அடிப்படைப் பள்ளிக்கல்வி எனும் மரம் சிறப்பாக அமைய வேண்டும் அல்லவா? மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறாக இருக்கிறதே.

"இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 88 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில்லை. இந்தநிலையை போக்க உயர்கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது." என்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் அவர்கள்.

அப்படி இருக்கையில்,  கல்வி அடிப்படை உரிமையை நடைமுறை படுத்துவதும், நுழைவுத்தேர்வு என்ற சுமையை அகற்றுவதும், கல்விக் கடன்கொடுக்கும் நடைமுறையை மேலும் எளிமை படுத்துவதும் தானே நிறைய மாணாக்கர் உயர்கல்விக்கு பல்கலைக்கழகங்களை அடைய ஏதுவாக இருக்கும்.


- பொன்னியின் செல்வன் -

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்