வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?

வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?



'ந்து மதத்ததில் சாதி கிடையாது' என்று நம்பும் நவீன நாயகர்களே....


'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டியம் கூறுவோரே...

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' என்று கட்டவிழ்த்து விடும்  காளையரே.....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' எனும் பெருந்தனக் காரர்களே....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' என்று உளரும் சிறு உள்ளதோரே....
***********
'இந்து மதத்ததில் சாதி கிடையாது' - அப்படியா?  நம்புவோமாக !?!

'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' - அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' - அப்படியா?  நம்புவோமாக !?!
***********
எவ்வளவோ நம்புறோம் இத நம்ப மாட்டோமா என்கிறீர்களா? நிற்க!

நாம் கூறுவதையாவது நம்பாதீர்கள்.

ஏன் என்றால்? நீங்களே கூட உங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது, இங்கே கூறப்போவது நேர்மையாக
இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இல்லை
மாறாக, பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்க சொல்லுவார்கள்

அப்படி பகுத்தறிந்து ஆராய்ந்து தான் இந்தக் கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடங்குவதற்கு முன்னர் சில கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கு முடிவில் விடை கிடைகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம்

கேள்விகள் இதோ:
- இந்து மதத்தின் சாரம் எவை ?
- வர்ணாசிரமத்தின் விளக்கம் எதிலே இருக்கிறது ?
- வர்ணாசிரமம் என்றால் என்ன ?
- வர்ணசிரமத்தினால் பயன் அடைவோர் யார் ?
- வர்ணசிரமத்தினால்,  இழப்பையும் இழிவையும் அடைவோர் யார் ?
- வர்ணாசிரமம் மனிதர்களுக்குத் தேவையா ?
- இந்து மதம்  மனிதர்களுக்குத் தேவையா ?
- மனிதர்களுக்கு  மதம் தேவையா ?

இந்து மதத்தில், இந்து மதத்தை விளக்க ஆதாரமாக இருப்பவையாகக் கூறப்படுவது:
  • வேதம்
  • மனு தர்மம் 
  • உபநிஷதம்
  • புராணம்
  • காவியம்
  • வேதாந்தம்
இன்னும் இத்யாதி இத்யாதிகள் இருக்கும்....

'இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரமத்தை, மொழி பெயர்க்கையில்  நம் மக்கள்தான் மனுதர்மத்தை திரித்து எழுதி விட்டார்கள்' - என்று நம்பிக்கொண்டு இருப்போர்களே;  உங்களுக்கே உங்களுக்காகதான் 'George Buhler' என்ற வெளிநாட்டு(ஜெர்மன்) அறிஞர் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மனுதர்மத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறோம்

மொழி பெயர்ப்பாளர் : ஜெர்மனிகாரர்
மொழி பெயர்த்தது : சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த வருடம் : 1886
மொழி பெயர்ப்பாளர் இறந்த வருடம் : 1898
தந்தை பெரியார் பிறந்த வருடம் : 1879

அது சரி, தந்தை பெரியார் பிறந்த வருடத்தை ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்று வியப்படையத் தேவை இல்லை; எங்கே இருந்து யார் வருவார் என்றே தெரியாது, என்ன சொல்வார் என்றே தெரியாது. '



பெரியார் சொல்லித்தான் George Buhler அப்படி மொழி பெயர்த்தார்' என்று தேவை இல்லாத விதண்டா வாதம் வைத்தாலும் வைத்து விடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கை தான்  :) 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார  நிருவனத்தில், மனுநீதி பற்றி தமிழர் தலைவர் அவர்கள் 'அசல் மனுதரும சாஸ்திரம்' என்ற அராய்ச்சி புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதை  வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், தற்போது தமிழகத்தில் இல்லாததால்(வெளிநாட்டில் [லண்டனில்] இருப்பதால்),  மனு நீதி பற்றிய  திராவிடர் கழக வெளியீடுகளை வாசிக்காமலே, இந்த முயற்சியில் இறங்கி இருப்பதால், ஒரு வகையில் இந்தக் கட்டுரையின் நோக்கதிற்கு ஒரு தேக்கம் தான். ஆனாலும், தந்தை பெரியார் காட்டிய ஆராய்ச்சிப் பாதையில், சிறிதேனும் முயற்சி செய்து ஆங்கில மொழி பெயர்ப்பையே ஆதாரமாகக் கொண்டுதான் இந்த கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது.




இந்து மதத்தின் மனு தர்மத்தைப் புரிந்து கொள்வதற்கு, கீழ்க் கண்ட தகுதிகள் இருந்தாலே போதும்.








தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் :)


ஆங்கிலப் புலமை இல்லாவிடினும்ஆங்கிலத்தில் வாசிக்க மற்றும் புரிந்து கொள்ளக் கூடிய திறமை
கற்பனையான இழிவு நிலையில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம்

அதிலும், இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கான சுட்டியும் இங்கே கொடுக்கப்படும்.மனு தர்மம் முழுமையையும் மொழி பெயர்ப்பது அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம். மாறாக, மனிதர்களை இழிவு படுத்தும், பிரிவு படுத்தும், ஒரு சாரார் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் ஓரவஞ்சனைப் பற்றிய, மற்றும் பகுத்தறிவுக்கு ஏற்க முடியாத அளவிற்கு உள்ள ஸ்லோகங்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் படும்.

'இப்படிக் கூறுகிறீரே, மனு தர்மத்தில் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் இருக்குமே; அதை எல்லாம் ஏன் கூறவில்லை' என்று சண்டை சச்சரவு செய்யாதீர்கள். அப்படி நல்ல செய்திகள் இருந்தால், அதை தாங்கள் எழுதுங்கள்; அதை வாசிக்க ஆர்வமாய் இருக்கிறோம்

நாம் என்ன கூறுகிறோம் என்றால், 'இழிவில் போய் மலர் வாசனை தேடலாமா' என்றுதான் கூறுகிறோம்.

தொடரும்....

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


காலப்  போக்கில் கல் தோன்றி; மற்றோர் நாள் மண் தோன்றி; அன்றோர் நாள் அமீபா(Amoeba) தோன்றி; வருடங்கள் உருண்டோடி குரங்கு உருவாகி; பரிணாம வளர்ச்சியில் பின் தோன்றிய பழங்குடிகளில், மூத்த குடியான திராவிடர்கள் தோற்றுவித்த உன்னத மொழி, உயிர் மொழி - தமிழ் மொழி !

அப்படிப்பட்ட தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழுப்பும் இவ்வேளையில், சந்து வழியாக சமஸ்கிருத கும்பல், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிக்க முயற்சி செய்கிறது.

நல்ல வாய்ப்பாக,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
போல், திராவிடர் கழகம்தான் இந்த சந்து வழி சமஸ்கிருத எழுத்துத் தினிப்பு முயற்சியைக் கண்டுபிடித்து, எழுத்து தினிப்பைத் தடுக்க தடுப்பணையும் போட்டுள்ளது.

விழிக்கு எப்படி ஒளி பிரதானமோ, அப்படியே மொழிக்கு ஒலி பிரதானம். எந்த ஒரு மொழிக்கும், ஒலி மிக முக்கியம்; அந்த ஒலிகளுக்கு இணையாகத்தான் எழுத்துக்கள் வருகின்றன. தமிழில் பல சிறப்பான ஒலிகள் உள்ளன. அதாவது, 'எ' 'ஒ' 'ற' 'ன' 'ழ'  போன்றவை.

'வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி.  சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.

தமிழின் மேன்மையைப் பாருங்கள்; தமிழோ, 'எல்லாமே நம் ஊர்தான்; எல்லோரும் நம் உறவினர்' 'பிறப்பால் எல்லா உயிரும் சமந்தான்' என்று கூறி இணைக்கிறது. அதாவது, காசியும் நம் ஊர்தான், கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியும் நம் உறவினர்தான், எனும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டது தமிழ் மொழி. நமக்கு மனிதர்கள் எதிரிகள் இல்லை; சில 'மனிதர்களின் தீய கொள்கைகள்தான் எதிரிகள்'. இந்த தீப கர்பத்தில், திராவிடர்களுக்கு பார்ப்பனர்களின் பார்ப்பனீயம்தான் தீய கொள்கையாக இருக்கிறது. பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இல்லை திராவிடர் கழகத்தினர். மாறாக, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்ப்பவர்கள்.
  
திராவிட மொழிகளுக்கு எல்லாம் தமிழே வேர் மொழி. அந்த வேரில் விஷத்தை ஏற்றினால், மரம் கிளைகளுக்கும் பரவிவிடும் என்ற எண்ணத்தில், விஷமிகள் விஷக் கிருமிகளை வேரில் புகுத்த எத்தனிக்கிறார்கள். பெரியார் வளர்த்த பகுத்தறிவுக் கூட்டத்திடம் பலிக்குமா இந்த விஷக் கிருமிகளின் விசேஷங்கள்? பலிக்காது! 
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
போல, நல்லதோர் சிந்தனைச் சிற்பிகளை அல்லவா தந்தை பெரியார் எனும் சமூக மருத்துவர் உருவாக்கியுள்ளார்கள்.

எது விஷக் கிருமி? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிப்பதுதான். சிறீராமன் சர்மா என்பவர் Unicode Consortium-க்கு ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார். என்ன விண்ணப்பம்? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் மொழி பெயர்க்க சிரமமாய் இருப்பதால், மொழி பெயர்ப்பை எளிதாக்க சமஸ்கிருத எழுத்துக்கள் 26 ஐ தமிழில் எழுத்தாக தினிக்க விண்ணப்பம் இட்டுள்ளார்.

தமிழகத்தின், மொத்த மக்கள் தொகையில்  6 கோடியே 25 லட்சம்  பேரில், நூற்றுக்கு நான்கு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இருக்க மாட்டார்கள் (இது உத்தேசமான கணக்குத்தான். அடுத்த வருடம் சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்தவுடன் உண்மை நிலவரம் அறியலாம்). அந்த நான்கு சதவீதத்தில் எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருக்கப் போகிறார்கள்?. நான்கு சதவீதம் என்று உத்தேசித்தால், தமிழக மக்கள் தொகையில், ஆறே கால் கோடி பேரில், வெரும் 25 லட்சம் மக்களுக்காக, மற்ற 6 கோடி மக்கள் புழங்கும் ஒரு மொழியில், சமஸ்கிருத மொழியின் எழுத்துகளை சேர்த்தால், ஏற்றுக் கொள்ளலாமா? உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் கூடுதல் பேருக்கும் இந்த 'சந்து வழி சமஸ்கிருதத்  திணிப்பால்' திண்டாட்டம் வந்து விடுமே! பார்த்தீர்களா இந்த சமஸ்கிருத கூட்டம் 'சந்து வழி சிந்து பாடுவதை'! இதைத் தடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா!? கடமை கிடக்கட்டும். இந்த சமஸ்கிருதத் தினிப்பை தடுக்க வேண்டியது நமது உரிமை அல்லவா!?

சமஸ்கிருத படைப்புகளை நம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, சமஸ்கிருத எழுத்தைத் தமிழில் தினிக்கப் பார்க்கிறார்கள். தமிழில் உள்ள உலகப் பொது மறையான உயரிய திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க சிரமமாய் இருக்கும் என்று கூறி, தமிழ் எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், இந்த 'சைட் வாசல் சமஸ்கிருதத் தினிப்பு' கூட்டத்திற்க்குப் பொறுக்குமா?

தமிழை நீச பாஷை என்றவர்கள் தான் சமஸ்கிருதம் போற்றும் சங்கராச்சாரியார்கள்.

"பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?" என்று தந்தை பெரியார் அவர்கள் கொதித்து எழுந்ததின் காரணத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.

தமிழ் செழுமையான மொழி. இந்த செழுமையான மொழியில் வார்த்தைகள் ஏராளம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வார்த்தைகள் கூட்டிக் கொண்டே போகலாம் - ஒலிகள் மாறாமல்.

தமிழ் ஓர் உயிர் மொழி. அதிலும், திராவிட மொழிகளுக்கு தமிழே ஆணி வேர். அந்த ஆணி வேரை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது சமஸ்கிருதத்தால்.
சமஸ்கிருதம் ஓரு பட்ட மரம்; தமிழோ வளரும் ஆல மரம்! தமிழனுக்கு என்றொரு நாடு, என்று பெருமை கொள்ளும் நாளும் வரும்.

உண்மையுடன் 
பொன்னியின்  செல்வன்

நன்றி : 

‘தை ஒன்று’ தமிழ் புத்தாண்டின் தொடக்கம்

vallur.jpg  
'தை ஒன்று' தமிழ் புத்தாண்டின் முதல் நாள். அத்-'தை'-யை கொண்டாடுவது தமிழர்க்கு மாண்பு. அதாவது, 'தை' என்ற மாதத்தை.
மனிதர்களுக்கு புத்தாண்டு தேவையா? என்று வினவினால்; தேவைதான். ஏன் தேவை? என்றால்:
  • -    மனிதர்கள் புத்துணர்ச்சி பெற
  • -    பழையன கழிந்து புதியன புக ஒரு வாய்ப்பு
  • -    சற்றே இளைப்பாற; உழைத்த உழைப்பிற்கு களிப்பு பெற
  • -    முன்னேற்றத்தின் வழிகோலாய் புது வகையில், புது வியூகத்தில் முயற்சிகள் மேற்கொள்ள
  • -    அன்பைப் பறிமாற
  • -    ஆறுதல் பெற
  • -    தேறுதல் அடைய
  • -    சென்ற வருட சத்தியத்தையே மீண்டும் இந்த வருடமும் தொடர J
என்று பல வகையிலும் புத்தாண்டுகள் பேருதவியாய் இருக்கும்.

இப்படிப்பட்ட புத்தாண்டு எவ்வாறாக அமைந்திருக்க வேண்டும்? என்று சிந்தித்து பார்த்தால்:
  • -    மதச் சார்பின்மையாகவும்
  • -    மூட நம்பிக்கைகள் இன்றியும்
  • -    பகுத்தறிவு கண்ணோட்டத்தோடும்
  • -    கற்றறிந்த அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
  • -    இயற்கையோடு இணைந்த
  • -    எளிமையாய், இனிமையாய், இனத்திற்கு பெருமையாய்
இருக்க வேண்டும்.

ஆனாலும், சில வருடங்கள் முன்வரையிலும் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்த தமிழ் வருடப்பிறப்பு (சித்திரை 1) மேற்கூறிய வகையறாவில் வரவில்லை.
தமிழர்க்கு என்று ஒரு ஆண்டுக்குறிப்பேடு இல்லை என்ற வருத்தத்தை போக்கும் வகையில், 'தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாள்' என்று அரசு சட்டம் இயற்றியது. அதன் சுருக்கம் வருமாறு :

58. In 1921, over 500 scholars under the leadership of the great scholar and founder of 'Thani Tamil Iyakkam', Thiru Maraimalai Adigalar had met in Pachaiyappa's College at Chennai and had decided that Tamils need a separate calendar and a new calendar in the name of Saint Thiruvalluvar could be followed and this would constitute the 'Tamil Year'. They also determined that the birth year of Thiruvalluvar was 31 BC. This decision was accepted by Hon'ble Chief Minister Kalaignar even as early as 37 years ago and it was ordered to be followed in the Government Diary from 1971 and the Government Gazette from 1972. In view of the consensus amongst almost all Tamil Scholars that the first day of the month of Thai, is the first day of the Tamil year, this Government has decided to declare 1st Thai as the Tamil New Year day. Therefore, the people of Tamil Nadu, who now celebrate Pongal as the festival of Tamils, can now celebrate it as Tamil New Year day also with redoubled joy. On this day let the people of this State plant trees bearing the 'Mukkani' fruits of banana, mango and jackfruit; draw colourful Kolams; decorate their houses with array of lamps showing them in new splendour; wearing new clothes sing and dance in praise of Tamil pride and self respect; spread the message of equality and shower their love and joy.

விடுவார்களா இந்து மத பக்தர்கள்; 'தமிழ் நாடு முருக பக்த பேரவை', போட்டார்கள் ஒரு கோர்ட் கேசை! இதில் வியப்பைப் பாருங்கள்; கிறிஸ்துவ அமைப்புகளோ, இஸ்லாமிய அமைப்புகளோ, புத்த அமைப்புகளோ, சமன அமைப்புகளோ கோர்ட் கேஸ் போடவில்லை. இதில் இருந்து புரிவது என்னவென்றால், சித்திரை ஒன்று என்பது இந்து மதத்தின் உற்பத்தி என்று. ஆக சித்திரை ஒன்று மதம் சார்ந்தது என்பது தெளிவாகிறது.

கேஸ் இதுதான்:

கற்பனை கதாபாத்திரமான பிரம்மா, சித்திரை ஒன்றில்தான் உலகை படைத்தார், என்று தமிழ் இந்துக்கள் நம்புகிறார்களாம்!
தமிழ் இந்து calendar 60 வருட சுழற்சியை பின்பற்றுகிறதாம்; அதுவும் ''Nirayana' vernal equinox' படியாம். அது என்ன ''Nirayana' vernal equinox' என்று கேட்காதீர்கள். Vernal Equinox பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக்கவும் :
http://www.nasa.gov/audience/forstudents/5-8/features/FirstDayAutumn_Feat_5-8.html


வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அவர்கள், "60 வருட சுழற்சி எப்படி உருவானது என்பது விவாதத்திற்குரியது; அந்த 60 வருடங்களுக்கும் சம்ஸ்கிருத பெயர்கள் எப்படி வந்தது?" என்றும் சுட்டிக்காட்டி வினவினார்.மேலும், "இந்த கேள்விகள் எந்த அறிஞராலும் விளக்கப்படவில்லை. ஆகையால் விவாதம் அறுதியிட்டு நம்ப இயலாததாகிறது" என்றும் கூறினார்.
 

இவ்வாறாக, தமிழ் வருடப்பிறப்பை 'தை ஒன்றாக்கியது' சட்டப்படி செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்கள்.

கற்பனையான முருகனை நம்பினோர், முருகனை நம்பாமல் ஹை கோர்ட்டை நம்பினார்களோ இல்லியோ.அதான் முருகன் தண்டிசுட்டார் போல! இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் கற்பனை கதாபாத்திரம்தான் முருகன் என்று!

1921-ல் 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இசைவு தர ஏற்றுக் கொள்ளபட்டதுதான் 'தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு' என்பது.
'தை' என்ற ஓர் எழுத்து; 'தை' என்ற அந்த ஓரு வார்த்தைதான், தமிழ் புத்தாண்டின் தொடக்கம். இதை நாம் ஏதொ வாய்க்கு வந்தபடியில் கூறவில்லை. மாறாக, எந்த பூத கணமும் கூறவில்லை, தேவ கனமும் கூறவில்லை; அசரீரியாகவும் கேட்கவில்லை; கடவுள் என்ற பெயரில் வானத்தில் இருந்து குதித்து வரமும் கொடுக்க வில்லை.
'தை ஒன்று' தான் தமிழரின் வருடத்தில் முதல் நாள் என்று தமிழறிஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள்.

கருத்தரங்கம்
தமிழாண்டு தீர்மானிப்புக் கருத்தரங்கம்
இடம்
பச்சையப்பன் கல்லூரி, சென்னை
தலைமை
தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்
முன்னிலை
பேராசிரியர் கா.நமச்சிவாயம்
வருடம்
1921
முடிவு
திருவள்ளுவராண்டின் அடிப்படையில் தை முதல் நாளே ஆண்டின் தொடக்கம்.
முடிவெடுத்த ஏழு முதன்மை தமிழறிஞர்கள்
  •  மறைமலையடிகளார்
  • பேரா. கா.நமச்சிவாயர்
  • தமிழ்த் தென்றல் திரு.வி.க.
  • தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணி-யம்
  • சைவப் பெரியார் சச்சிதானந்தம்
  • நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  • நாவலர் சோமசுந்தர பாரதியார் 



பின்னர் தந்தை பெரியாரும் தமிழ் புத்தாண்டு பற்றி தமிழறிஞர்கள் கூறியதை ஏற்று மக்களிடையே பரவலாக்கினார்கள். இப்படி கற்றறிந்த அறிஞர் பெருமக்களாலும், பட்டறிவு பல்கலைக்கழகமாய் விளங்கும் தந்தை பெரியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட்துதான், 'தை ஒன்று தமிழ் புத்தாண்டு'.

இந்து மத நூலான அபிதான சிந்தாமணியில் இருக்கிறது, தமிழ் வருடப்பிறப்பின் விளக்கம். இந்து மத நூலாயிற்றே, வில்லங்கம் இல்லாமலா இருக்கும். கவலையே படாதீர்கள், 'காம லீலை' 'காம ரசம்' 'காம சாம்பார்' 'காம இச்சை' 'காம எச்சை' என்று அள்ளி தெளிக்கும் வகையில் இருக்கிறது இந்த வருடப்பிறப்பின் கதை.
எந்தக் கதை? சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாக சித்தரிக்கும் கதை.

கதை இதோ:
கற்பனை கதாபாத்திரமான நாரதருக்கு, ஒரு நாள் காம இச்சை ஏற்பட்டதாம். அதுவும் தேவ ரிஷியான நாரதர், தேவலோகத்தில் இருந்திண்டு காம இச்சையை   அணைக்காமல் இருக்கலாமோ என்ன?
அதனால்
 நாரதர், எங்கு போனால் தன் காம இச்சையைத் தீர்க்க முடியும்? என்று, தன்னுடைய 'Palm Top Computer' எடுத்து - அதாங்க 'ஞான திருஷ்டியில' பார்த்து;
ஆங்! இந்த வேலைக்கு, 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து' கற்பனை கதாபாத்திரமான 'கிருஷ்ணன்'தான் சரி என்றுணர்ந்து, கிருஷ்ணனைப்  பார்க்க வருகிறார் நாரதர்.

கிருஷ்ணன் நாரதரைப் பார்த்து:
"என்ன ஒய்! எங்கே இந்த பக்கம்? என்ன வேணும் உமக்கு?" என்கிறார்.

நாரதர், "அது ஒன்னும் இல்லைங்காணும்…..ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்ம்…..... " என்றபடியே தலையை சொறிகிறார் - பல்லை இளிக்கிறார்.

"அட சும்மா சொல்லுங்கானும்.. நமக்குள்ள என்ன
 formality"  என்கிறார் கிருஷ்ணன்.

"சொன்ன கோச்சுக்கப் புடாது. உங்களாண்ட 60000 கோபிகையர் இருக்கா"

"ஆமா! இருக்கா. அதுக்கு?"

"அதில நேக்கு ......."

"நோக்கு ? ......."

"நேக்கு ஒன்னே ஒன்னு தரேளா"

"அட! இதென்ன பிரமாதம்; பேஷா செஞ்சிட்டா போச்சு! நீர் என்ன பண்றீர்ணா; இன்னிக்கு ராவுல, என்னுடைய 60000 கோபிகையர்களில், நான் இல்லாத
 ஏதாவது ஒரு கோபிகையர் வீட்டுக்கு போய், என்ஜாய் பண்ணும் ஒய்!"

நாரதருக்கோ மகா குஷி. பின்னே? கிருஷ்ணரின் கோபிகை என்றால் சும்மாவா? நாரதர் உடனே மனக்கணக்கு போடுகிறார்; கிருஷ்னனுக்கு இன்று இரவுக்கு ஒன்று போக, மீதம் 59999 இருக்குமே! என்று மலைத்து விட்டாராம். 'இங்கி பிங்கி பாங்கியோ''சா பூ த்ரீயோ' - யாருக்கு தெரியும்.

இரவும் வந்தது.

நாரதர் கோபிகையர் வீடுகளுக்கு விஜயம் செய்தார். எந்த கோபிகையர் வீட்டுக்குப் போனாலும் அங்கெல்லாம் கிருஷ்ணன் படுத்துக்கொண்டு இருக்கிறாராம்.. இது ஏதடா வம்பா போச்சே!
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார் என்றால் இதுதான் போலும்! என்று சலித்து கொண்டே; நாரதர் சல்லடை போட்டுத் தேடுகிறார் ஒவ்வொரு வீடாக.

கடமை உணர்ச்சி என்ற ஒண்டு இருக்கிறது அல்லவா? அதுவும் கடமை 'காமத்திற்கு' என்றால் கேட்கவே வேண்டியது இல்லை; அர்த்த சாமமானாலும் காமக் கடமைக்கு அளவேது? எவ்வளவு தேடியும் எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, கிருஷ்ணன் வீட்டுக்கே போக முடிவு செய்கிறார் முடிவாக.

அப்படிப் போகும் போது என்ன எண்ணினாராம் நாரதர் என்றால்? அது ஒரு தனி வெட்கக்கேடு. வேறென்ன, நம்மூரில் சொல்வார்களே, 'துணிக் கடை பொம்மையைக் கூட விட மாட்டான் போல இவன்' என்று. அதுபோல,
கிருஷ்ணனையே சல்லாபித்து விடுவதாக கங்கணம் கட்டி கொண்டாராம் நாரதர். இது ஏது புதுக்கதையாக இருக்கிறது.
அதாவது, தன்னை அலைய விட்டு காம இச்சையை அடக்க விடாமல் மோசம் செய்த கிருஷ்ணனையே 'மோசம்' செய்வதாக எண்ணிக் கொண்டாராம் நாரதர்.
  

நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து :
    
"கிருஷ்ணா இது உமக்கே அடுக்குமாங்கானும்"
கிருஷ்னனோ, "எது நாரதரே?"
"இப்படி ஒவ்வொரு கோபிகையர் வீட்டிலேயும், நான் வரும் நேரமாகப் பார்த்து  attendance போட்டிண்டு என்ன டீல்-ல விட்டுட்டியே கிருஷ்ணா. என் காம இச்சையை அடக்க, என்னைப் பெண்ணாக்கி உன்னையே நான் அடைய விரும்புகிறேன்." என்று நாரதர் கெஞ்ச.

கிருஷ்ணன் நாரதரை ஸ்திரீ நாரத அம்மாள் ஆக்கி, அந்த ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தாராம். எவ்வளவு வருடம் என்றால்? 60 வருடம்! இந்த 60 வருடத்திற்கும் 60 குழந்தைகளாம்! அந்த 60
 குழந்தைகளும் 60 வருடங்களாகி விட்டன.

பின்னர் ascending order-ல்
  ஆளுக்கு ஒரு முறை இந்த உலகத்தை ஆள சொல்லி விட்டார்களாம். அப்படிப் பட்ட முட்டாள்தனமான வருடப்பிறப்பு தான், 'சித்திரை' மாதத்தில் அடுத்த ascending order  வருடத்திற்கு மாறுமாம்.

இது மூட நம்பிக்கைகள் நிறைந்தல்லவா  இருக்கிறது!

'தை ஒன்று தமிழ் புத்தாண்டு'-ல் எந்த மூட நம்பிக்கைக்கும் இடமில்லையே!
அந்த முட்டாள்தனமான புதுவருட பிறப்பின் படி, தற்போதைய வருடம் - விக்ருதி. அதாவது 'விக்ருதி' தான் உலகை ஆண்டு வருகிறாராம்.
'பாரக் ஒபாமா', 'டேவிட் கேமரூன்', 'விளாடிமிர் புடின்'
 என அகில உலகத் தலைவர்கள் யாராக இருந்தாலும், எது செய்வதாக இருந்தாலும் இந்த 'விக்ருதி' அனுமதியோடதான் செய்கிறார்கள் போலும்.
இது பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்கிறாதா?

இப்படிப்பட்ட மூடத்தனமான புது வருடப்பிறப்பை தந்தை பெரியார்தான், மாற்றி அமைக்க தளம் அமைத்து கொடுத்தார்கள்!
இனி தமிழ் புத்தாண்டு என்றாலே 'திருவள்ளுவர்' ஆண்டு கணக்கின்படி 'தை' மாதம் ஒன்றாம் தேதிதான்.

பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வரும் போது ஜனவரி மாதத்தில்தான் பூமி சூரியனை மிக அருகில் சந்திக்கிறது. இதனை அறிவியலில் 'Perihelion' என்று கூறுகிறார்கள்.




இந்த வகையில், இயற்கையோடு இணைத்து பார்க்கையிலும், தை என்பது ஆங்கில மாதமான 'ஜனவரி'யின் மத்தியில்தான் தொடங்குகிறது. ஆக, நம் 'தை ஒன்று தமிழ் புத்தாண்டு' என்பது, பூமிப்பந்து சூரியனுக்கு மிக மிக அருகில் தொடங்கி ஒரு சுற்று சுற்றி வருகிறது என்று கொள்வது மிக மிகப் பொருந்தும்! அதாவது பூமிப்பந்து சூரியனுக்கு மிகக்குறைந்த தூரத்தில் இருந்து சுற்ற ஆரம்பித்து; நாளாக நாளாக தூரம் மாறிக்கொண்டே வரும். ஒரு வருடம் சுற்றிய பிறகு மீண்டும் ஆரம்பித்த இட்த்திலேயே இருக்கும், அதாவது சூரியனுக்கு மிக மிக அருகில்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடுவார்களே தொடக்கப் புள்ளியில் இருந்து; அது போல!

மதச் சார்பு இன்றி, மூட நம்பிக்கை இன்றி, பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு, அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன உணர்வைத் தந்து, இயற்கையோடும் ஒத்துப்போகும் – 'திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்று' நம் புத்தாண்டாய் இருப்பதில் நமக்கு எப்போதும் ஏற்றமே!

ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்க; தந்தை பெரியார் பாணியிலேயே கூறுவதாய் இருந்தால், இது நம் கருத்துதானே ஒழிய இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. சற்றே சிந்தித்துப் பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

நன்றி – ஆதாரம்:

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்