கனத்த கடிதங்கள் !!



காலச் சக்கரம் முன்னே சுழல சுழல, காலங்காலமாக மிதி வண்டியில், க்ளிங்-க்ளிங் க்ளிங்-க்ளிங் ஓசையுடன் வந்து அஞ்சல்காரர் கொடுக்கும் கடிதங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன.

இன்றைய குழந்தைகள் அஞ்சல் அட்டையையும்(Post Card), இன்லேண்ட் லெட்டரையும் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.
தொலைப்பேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் வந்த பின்னால் கடிதங்களின் போக்குவரத்து குறைந்து தான் இருக்கிறது.
தொலைப் பேசியில் ஒருவர் பேசுகையில், பேசி முடிக்கும் முன்னரே, எதிர் முனையில் இருப்பவர் இடை மறித்துப் பேசக் கூடும்.
இப்படி இடையில் பேசி குறுக்கிடும் இடைஞ்சல்கள் அஞ்சல்களில் இல்லை.இவ்வாறாக கடிதம் எழுதுவதில் ஒரு சௌகரியமும் இருக்கிறது. நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவர்; நாம் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் வரை, அதாவது எழுதியதைப் படித்து முடிக்கும் வரை எதிர்ப் பேச்சு எதுவும் பேச முடியாது. இன்றும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன், “ஊருக்கு போய் கடிதம் போடுகிறோம்” எனக் கூறுவது இதற்குத் தான் போலும்.

கடுதாசிகளில் பல வகை உண்டு. அவற்றில் ஒரு புதிரான கடுதாசிதான் மொட்டைக் கடுதாசி. திருப்பதியில் போய் மொட்டைப் போட்ட ஒருவரை கண்டுபிடிப்பது எப்படி மிக சுலபமோ, அவ்வளவு சுலபம் இந்த மொட்டைக் கடுதாசி எழுதியவரைக் கண்டுபிடிப்பதும் (!).

கடிதங்கள் வரலாறு ஆன கதைகளும் உண்டு. ஜவஹர்லால் நேரு அவர்கள் சிறைச்சாலையில் இருந்து மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் “Glimpses of World History” என ஒரு வரலாற்று புத்தகமாக வந்தது.

கடிதங்கள் பல செய்திகளையும் தாங்கி வருகின்றன.
இந்த முறையும் ஊர் திருவிழவுக்கு வர இயலாது, எனவும்; விதை நெல் வாங்க பணம் வேறு எங்காவது புரட்ட முடியுமா என்று பார்த்து கொள்ளுங்கள், எனவும்; இந்த கோடை விடுமுறையில் குழந்தைகள் நீச்சல் பயிற்சி செல்லுகிறார்கள், அதனால் இந்த விடுமுறைக்கும் குழந்தைகள் கிராமத்திற்கு வர முடியாது, எனவும்; அண்ணாச்சி மகன் திருமணத்திற்கு என் பெயரில் 100 ரூபாய் மொய் எழுதி விடவும். எனக்கு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத வேலை இருக்கிறது, எனவும்; உங்களுக்கு ஒரு பேரன் பிறந்திருக்கான். கைக்குழந்தையும் மருமகளும் சுகம். குழந்தையை உங்கள் மருமகளின் மதத்தில் பதிந்திருக்கிறோம்.
இவ்வாறாக கடிதங்கள் இயலாமை, மறுப்பு, வெறுப்பு, துக்கம், கோபம், மகிழ்ச்சி என மனிதனின் பல உணர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

கிராமங்களில் படிக்கத் தெரியாதவர்களுக்கு கடிதம் படித்துக் கொடுப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. படித்து முடித்தவுடன், கடிதத்தில் இருந்த செய்திக்கேற்ப பத்து பைசாவோ, ஐம்பது பைசாவோ கிடைக்கலாம். பெட்டிக் கடைகாரருக்கு கடிதம் படித்துக் கொடுத்தால் தேன் மிட்டாயோ, புளிப்பு மிட்டாயோ கிடைக்கக் கூடும்.

கிராமங்களில் எழுதத் தெரியாதவர்களுக்கும் கடிதம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்டோர் கடிதம் எழுத பெரும்பாலும் சிறுவர்களையே எழுதித்தர சொல்லுவார்கள். அப்போது வெளியிடக்கூடாத (“Off the Record”) செய்திகள் பலவும் வெளி வரும். ஆனாலும் செய்தியின் முக்கியம் கருதி அதைக் கடிதத்தில் பதிய வேண்டாம் என்றும் சொல்லி விடுவார்கள். இப்படியாக கடிதங்கள் புழுங்கிய மணங்களின், மிச்சம் ஒட்டி இருக்கும் சிறிது சந்தோஷங்களை மட்டுமே செய்திகளாக சுமந்து செல்கின்றன.

இன்றும் கிராமங்களில், கூரை வீடுகளின் கொக்கியில் தொங்கும் கடிதங்கள், கடந்த கால் நூற்றாண்டில் மனிதனின் படிமம் ஆக இருக்கின்றது.
அந்த கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல, காலத்தை கடந்து வந்த மனிதனின் மணங்களின் பதிவு.
கடந்த காலங்களில் கிராமத்தை விட்டு நகரம் என்னும் நரகத்தை அடைந்த மகன், மகள், பேரன், பேத்தி என உறவுகளின் இதயத்தை தாங்கி கொண்டு, இன்றும் கடிதங்கள் கொக்கியில் ஏக்கத்துடன் தொங்குகின்றன; என்றாவது ஒரு நாள் இதை எழுதிய மனிதர்களை பார்த்து விட மாட்டோமா என்று.

கொக்கியில் தொங்கும் அந்த கடிதங்கள் இன்னும் கனத்துக் கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கின்றன.

ஹரீஷ்

தமிழ் ஐயா !!



தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள் மேல் எப்போதுமே அன்பாக இருப்பார்கள்; எந்த பேதமும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால்? அவர்களுக்கு தெரியும், எப்படியும் யாரும் தமிழுக்கு டியூஷன் வர மாட்டார்கள் என்று.

அதிலும், வகுப்பு ஆசிரியரும் டியூஷன் போகும் ஆசிரியரும் வெவ்வேறாக இருந்துவிட்டால், வகுப்பாசிரியர் மேல் நமக்கு வருவது வெறும் பக்தி அல்ல, அது ‘பய’(ம்) பக்தி.

இந்த தொல்லைகள் எல்லாம் தமிழ் ஆசிரியர்களிடம் இல்லை.

தமிழ் ஆசிரியர்களை மறந்து போய் சார் போட்டுக் கூப்பிட்டால், உடனே கோபம் வந்து விடும். அவர்களை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட வேண்டும். அதிலும் ‘ஐயா’ வகுப்பறைக்குள் நுழையும் போது, மற்ற ஆசிரியர்களை வணக்கம் செய்வதைப் போல் ‘குட் மார்னிங் சார்’, என்று சொல்வதை விரும்ப மாட்டார்கள். மாறாக ‘வணக்கம் ஐயா’ எனக் கூறி மரியாதை செய்வதையே தமிழ் ஐயாக்கள் விரும்புகிறார்கள். இந்த மரியாதையை விரும்புவது தமிழ் ஐயாக்கள் இல்லை, தமிழுக்கு தர வேண்டிய மரியாதை, என்பதைத்தான் தமிழ் ஐயாக்கள் மாணவர்களை இவ்வாறாக கூறச் செய்வது.

அதிலும் சில தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களை பார்த்து மறந்து போய் ‘குட் மார்னிங் சார்’ சொல்லிவிட்டால் போதும். “ ஹொவ் டேர் யூ சே குட் மார்னிங்?, சே ‘வணக்கம்’ ” (How dare you say good morning, say ‘வணக்கம்), எனக் கூறி ஆங்கிலத்திலும் பிரமிக்க வைப்பார்கள்.

சில தமிழ் ஆசிரியர்கள் மற்ற பாடப்பிரிவின் மேலும் பாசம் அதிகம். அதிலும் குறிப்பாக உயிரியலில் (Zoology-யில்) வரும் ஹியூமன் ஃபிசியாலஜியை (Human Physiology) விளக்கி மாணவர்களை வயதுக்கு ஏற்றவாறு ஹார்மோன்களை உசுப்பேத்தவும் செய்வார்கள்.

சில தமிழாசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழையும் ஆங்கிலத்தில் தான் நடத்துவார்கள். வகுப்பறையில் நுழைந்தவுடன், ஒரு மாணவனை எழுப்பி படிக்க சொல்லி, தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் விளக்கம் கூறுவார்.

மாணவன் படிக்கிறான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

ஆசிரியரின் விளக்கம், ‘Every city is ours; All are our Relaives !’, ஹ்ம்ம்…. நெக்ஸ்ட் லைன் ’

மாணவன், ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’

ஆசிரியர், ’ All good and evil to us are not by others; But by ourself !!’, ‘ஹ்ம்ம்…. நெக்ஸ்ட் லைன் ’

மாணவர்களோ, மனதிற்குள்ளாக. ஆமாம் ஐயா, பத்தாவது முடித்துவிட்டு வேறு பள்ளியில் சேராமல், இந்த பள்ளியில் சேர்ந்தோம் அல்லவா. நடப்பது தமிழ் வகுப்பா, ஆங்கில வகுப்பா எனத் தெரியாமல் இருக்கும் எங்களுக்கு, ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ தான்.

சில தமிழாசிரியர்கள் முழுமையாய் தமிழில் மட்டும் தான் பேசுவார்கள். ஆங்கில வார்த்தைக் கலப்பே இருக்காது. அவ்வப்போது ‘இந்த தமிழ் வார்த்தை தெரியாதா உனக்கு?’ என ஏசுவது போல் ஏசி, புதுப் புது தமிழ் வார்த்தையைப் புகட்டுவார்கள். இப்படிப் பட்ட தமிழ் ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களைப் போல், ‘போய் சாக்பீஸ் எடுத்துவா’ எனக் கூறமாட்டார்கள். மாறாக, ‘போய் வெண்சுதைக் கட்டிக் கொண்டுவா’ எனக் கூறுவார்கள். இதைக் கேட்டுவிட்டு மாணவர் முழித்தால், அதை உணர்ந்தவராய், ‘அதான்டா ஒங்க சாக்கு பீசு….’ என இழுவையாய், சொல்லக் கூடாததை கூறியது போல் கூறி, ஒரு தூய தமிழ் வார்த்தையைப் புகட்டி இருப்பார். இப்படிப் பட்ட ஆசிரியரின் தயவால் வீட்டிற்க்கு போய் பாட்டியிடம், ‘பாட்டி ஒரு கோப்பை தேநீர் கிடைக்குமா?’ எனக் கேட்டால், பாட்டியோ, ‘என்னது கேப்பங் களியா’ என எதிர் கேள்வி கேட்கக் கூடும்.

தமிழ் தாள்கள் திருத்தப்பட்டு கொடுத்தவுடன் பல மாணவர்களின் தாள்களைப் பார்த்தால் ‘ழ’ ‘ற’ ‘ண’ க்களை சுற்றி ஆசிரியரின் சிகப்பு மை வட்டம் நிறையவே விழுந்திருக்கும். இதைப் பார்த்தவுடன் தான் நமக்கு புரியும், நம்மை சுற்றி நம்மை மாதிரியே நிறைய தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று.

‘அறம் செய விரும்பு’ எனும் வாக்கியத்தை ஒரு மாணவன் பிழையாய் ‘அரம் செய்ய விரும்பு’ என எழுதியிருந்தான். இதைக் கண்ட தமிழ் ஐயா அவனை எழுப்பி, ‘உன் அப்பா என்ன செய்கிறார்’ எனக் கேட்க. அதற்கு மாணவன், ‘இரும்பு பட்டறை வச்சிருக்காங்க, ஐயா’ என்கிறான். உடனே ஐயா, ‘அப்படியா, அப்ப பட்டறையில் அரம் செய்யவே விரும்பு, உட்கார்’ எனக் கூறி நேரத்திற்கு ஏற்ற நகைச்சுவைகளும் கூறுவார்கள் தமிழ் ஐயாக்கள்.

தமிழ் ஆசிரியர்களின் கிண்டலும் கேலியும் சற்று தூக்கலாகவே இருக்கும். தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளினிகளை வகுப்பில் அவர்கள் கிண்டல் செய்வதே ஒரு அலாதிதான்.

‘வன்க்க்க்க்க்க்க்க்….க……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… வாலெப்பலம் நழ்ழாருக்கும்’ எனவாக தொகுப்பாளினிகளின் ‘ழ’ க்களை கூறி மாணவர்களை சிரிக்க வைத்து, அப்படி பேசக் கூடாது என சிந்திக்கவும் வைத்திடுவார்கள்.

இந்நேரத்தில் இராமாயனத்தில் வரும் சுந்தர காண்டம் காண்டம் வகுப்பு எடுக்கையில் சேது சமுத்திரம் பற்றியும் ராமரின் கல்வியையும் அலசி இருப்பர்கள். அதாவது ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் என்று.

பாரதியை, கம்பனை, வள்ளுவனை, இளங்கோவை, பாரதிதாசனை, மு.வ-வை, பூங்குன்றனாரை, ஔவையாரை என தமிழ் வளர்த்த தங்கங்களை குறைவின்றியும் பாரபட்சமின்றியும் மாணவர்கட்கு வாரி வழங்கியவர்கள் தமிழ் ஐயாக்கள்.

ராமனை, லட்சுமனனை, பரதனை, குகனை, அனுமனை, வாலியை, தருமனை, அர்ஜுனனை, கண்ணனை, கர்ணனை, சேரனை, சோழனை, பாண்டியனை என காவிய நாயகர்களையும், சரித்திர வீரர்களையும் தங்கள் பேச்சால் கண்முன்னே உலாவ விட்டு கிராஃபிக்ஸ் காட்டிய வித்தகர்கள் தமிழ் ஐயாக்கள்.

தமிழ் ஐயா, பேச்சால் கிராஃபிக்ஸ் காட்டிய பிறகும், கோனார் தமிழ் உரையில் அருஞ்சொற்பொருள், பொருளுரை, பொழிப்புரை, தெளிவுரை என எல்லாம் நெட்டுறு செய்த பிறகும், சீதைக்கு ராமன் சிற்றப்பன் எனக் கூறினால். பின் தமிழ் ஐயாக்கள் மோதிரம் கழற்றி வைத்து விட்டு, விளாசி எடுக்காமல் வேறு என்னதான் செய்வார்கள். வாழ்க தமிழ் ஐயா !

ஹரீஷ்

பொய் எதிர்ப்பு சக்தி !!



பொய் எதிர்ப்பு சக்தி என்றால் என்னவென்று யோசிக்கக்கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி தெரியும், அது என்ன பொய் எதிர்ப்பு சக்தி ?
இதை வாசித்து முடிக்கும் போது அது தானாகவே தெரிந்து விடும்.

உண்மை என்ற ஒன்று இருப்பது போல், பொய் என்ற ஒன்றும் இருக்கிறது.
வள்ளுவன் கூறுவது யாதெனில்,
   பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
   எல்லா அறமும் தரும்
அதாவது, பொய் சொல்லாதவனுக்கு புகழ் வரும்; அவனை அறியாமலே மற்ற எல்லா நல்லதும் உண்டாகும்.

இதை மீறி, தனக்கு நல்லது உண்டாக வேண்டாம் என எண்ணி, ஒருவர் பொய் சொல்லும்போது, அவர் உள்ளே
  • இரத்த அழுத்த மாற்றம்
  • நாடித்துடிப்பு மாற்றம்
  • மூச்சு விடும் சுழற்ச்சியில் மாற்றம்
  • உடல் வெப்ப மாற்றம்
  • இதயத்துடிப்பு மாற்றம்
போன்ற பல மாற்றங்கள் ஏற்படும்.

ஒருவர் பொய் சொல்லும் போது, அவரையும் அறியாமல் டிரம்ஸ் சிவமணி, இதயத்தில் புகுந்து சற்றே வேகமாக ‘லப் டப், ‘லப் டப்’ ‘லப் டப்’ ’ இசைத்துக் கொண்டிருப்பார்.

பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க, இப்போது உண்மை அறியும் சோதனை கருவி , ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detectors / Polygraph) எல்லாம் வந்துவிட்டது. அது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு, சொல்லப்படுவது பொய்யா? மெய்யா? என்று கூறிவிடும்.

சில நேரங்களில் , உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்), பிரச்சினைகளையும் கூடவே கொண்டு வரும். கிரிக்கெட் வீரர் காம்ப்ளி-யிடம் உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்) சமீபத்தில் உபயோகப் படுத்தப்பட்டு, சச்சின் பற்றி தவறான கருத்துக்களை கூறி விட்டார். இதற்கு காம்ப்ளி மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

இப்படி சில நடை முறை பிரச்சினைகள் இருப்பதால், உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்) , இன்னும் முழுமையாய் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப் பட வில்லை.


பொய் சொல்லுபவர்களை கண்டு பிடிக்க மேலும் சில வழிகள் உள்ளன. அதாவது.

ஒருவர் பொய் சொல்லும் போது, அவர் தன்னுடைய முகத்தையோ, உதட்டையோ விரலால் தொட்டுக்கொண்டோ, காது மடலையோ, நாசி நுனியையோ விரலால் வருடி கொண்டோ இருக்கக் கூடும். இதை கருத்தில் கொண்டு எந்த அரசியல்வாதி பொய் சொல்லுகிறார் என்று பார்க்கலாம் என்று நினைத்தால், அதில் ஒரு சிக்கல். பின்னே, வரிசையாய் அனுமார் வால் மாதிரி எல்லா அரசியல்வாதிகளும் நடிகர்களாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த வித்தை எல்லாம் எடுபடாது. இந்த அனுமார் வால் இன்னும் எவ்வளவு தூரம் நீளுமோ தெரியவில்லை?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும் போது பெருவாரியான நேரங்களில் கண்ணைப் பார்த்து பேச மாட்டார்கள். அதுவும் குற்ற உணர்ச்சியின் காரணமாக.
இதிலும் கெட்டது குடி. கருப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டால் அதுவும் கடினமாகிவிடும், எதிரே இருப்பவர் நம்மிடம் பேசுகிறாரா இல்லை தூக்கத்தில் பேசுகிறாரா என்பதையே அறிய முடியாது, இதில் பொய் சொல்வதைப் போய் எப்படி கண்டுபிடிப்பது?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும் போது நீண்ட வாக்கியங்களை உபயோகப்படுத்தக் கூடும்.
அக்கா தன் தம்பியிடம், “டேய், ஃப்ரிட்ஜில் அடித்தட்டில் வச்சிருந்த சாக்லேட்டை நீ எடுத்து சாப்ட்டியாடா ? ”.
அதற்கு தம்பி, “நான் ஒன்னும் ஃப்ரிட்ஜில் அடித்தட்டில் இருந்த சாக்லேட் எடுத்து சாப்பிடல”, என்கிறான்.
அந்த தம்பி சாக்லேட் எடுத்து சாப்பிட்ட போது அது மேல் தட்டில் இருந்திருக்கலாம், யார் கண்டது?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும்போது பல விஷயங்களையும் சுற்றி வளைத்து பேசக்கூடும். மேலும் தேவையில்லாத விஷயங்களைக் கூறி மழுப்பவும் கூடும்.
இதில் அரசியல்வாதிகள் சற்றே சிறந்தவர்கள். இப்படித்தான் நிருபர் ஒருவர், “உங்கள் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேரவில்லை என்கிறார்களே, அது உண்மையா”, எனக் கேட்கிறார்.
அதற்கு அரசியல்வாதி, “எங்கள் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேரவில்லையா என எங்களைக் கேட்கிறீர்கள்” (அதான் கேட்டாச்சே சார்!) “நாங்கள் கூறுவது என்னவென்றால்” (அதை முதலில் சொல்லுங்கள் சார். ப்ளீஸ்,அடுத்த பேட்டி ஒன்னு இருக்கு) “எங்கள் தொகுதியில் மொத்தம் மூன்று அரசுப் பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி” (‘பெண்கள்’ சொல்லும் போது மட்டும் ஏன் சார் இளிக்கிறீங்க) ”இவற்றில் கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 200 மாணவர்கள் தான் அரசுப் பள்ளிகளில் இருந்து விலகி, வேறு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். இதுவே சென்ற ஆட்சியில் இந்த எண்ணிக்கை 400 ஆக இருந்தது” (அந்த பள்ளியின் மொத்த கொள்ளளவே 600 தான், சென்ற ஆட்சியில் 400, இப்போ 200. தேவலை, காமராஜர் கனவுக்கு கல்லறை கட்டியாச்சு !) ”இது சென்ற ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் பாதியாய் குறைந்துள்ளது என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்”
இப்படி, ஆம் / இல்லை என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை, மிகச் சுருக்கமாக ஒரு பத்தியில் கூறக் கூடும் !!!!



ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இரானுவத்தில், இரானுவ வீரர்களிடம் கையடக்க வடிவிலான பொய் கண்டுபிடிக்கும் இயந்திரமான ‘பொய் கண்டுபிடிப்பானை’ (Lie detectors or Polygraph) உபயோகிக்க கொடுத்து இருக்கிறார்களாம்.
நமது திருமணங்களிலோ, மணநாள் அன்று, மணமகன் கையில் மணமகளை கைப்பிடித்து கொடுக்கும் போதே மணமகனுக்கு ஒரு ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detector) கையில் கொடுக்கப் பட்டு விடுகிறது.

ஆம்! மிகப் பெறிய ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detectors) மனைவிகள் தான்!அவர்கள் தான் கனவனின் பொய் , பொய் சதவிகிதம், எதற்கு பொய் எல்லாத்தையும் சொல்லாமலே கண்டு பிடிப்பவர்கள்.

மனைவிகள் ஒரு கேள்வியை ஒருமுறைதான் கேட்பவர்கள் என்று தவறாக் எண்ணிவிடக் கூடாது. கணவர் பொய் சொல்லுகிறார் என்ற சந்தேகம் மட்டும் வந்து விட்டால் போதும், ஒரே கேள்வியை பல இடைவெளிகளில் பல சூழ்நிலைகளில் பல விதமாய் கேட்டு, பொய்யா ? மெய்யா ? என உறுதி படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள்.
மனைவி முன்னர் கேட்ட அதே கேள்வியை, இரண்டாம் முறையாய் கேட்டு விட்டால், கணவன் திகைத்து போய் அப்போதுதான் யோசிப்பார், போன தடவை என்ன சொன்னோம் என்று. இப்படியே சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிந்தால், உடனே தலைக் கவசம் ஏதேனும் எடுத்து மாட்டிக் கொண்டால், தம்பிரான் புன்னியத்தில் பூரிக் கட்டை தாக்குதலில் தலையாவது தப்பக்கூடும்.

சற்றே சமயோசிதமான புருஷர்கள் என்றால் பல சூழ்நிலைகளிலும் ஒரே பதிலைக் கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

இப்படித்தான்,
வெள்ளி இரவு, வேலை காரணமாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர தாமதம் ஆகும் என்பதை மனைவியிடம் தெரிவிக்க போன் செய்தால்.
“ஆபீசில் வேலை இருக்கிறது” (நண்பன் வீட்டில் பார்ட்டி!) , “நீ சாப்ட்டு தூங்கிடு. எனக்கு சாப்பாடு வேண்டாம்” (அதான் சைட் டிஷ் இருக்கே!)

மறுமுனையில் மனைவி, “சரிங்க…………..” என ஒரு மாதிரியாக இழுத்துக்கொண்டே, “ஏங்க, ஆபீசில் மல்லுக் கட்டறதுக்கு பதில் ராம் அண்ணா வீட்டுக்கு போய் அவங்க குழந்தையை பார்த்திட்டு வரலாம்ல, அந்த அக்காதான் ஊருக்கு போயிருக்காங்கள்ல, அவங்களுக்கும் துனையா இருக்கும்ல?”

நாமோ மனதிற்குள்ளாக, (அடிப் பாவி பொய் சொல்றதையும் கண்டு பிடிச்சு, பார்ட்டி நண்பனையும் கண்டுபிடிச்சு, லொகேஷனையும் கண்டு பிடிக்கிறாளே) என்று எண்ணிக்கொண்டு, “இங்கே தல போற வேலை இருக்கு, இதுல அவன எல்லாம் போய் இப்ப பார்க்க முடியாதும்மா”.

அவள், “ம்ம்ம்…. சரிங்க …. அந்த அண்ணன் வீட்டுக்கு போனால் அஞ்சப்பரில் இரால் வறுவல் வாங்கிட்டு போங்க-ன்னு சொல்லலாம்னு இருந்தேன். போன தடவை நம்ம வீட்டுக்கு அவங்க எல்லாம் வந்தப்ப அசைவம் சமைக்க முடியல, அதான்………. ”

நாமோ மனதிற்குள்ளாக, (போதும்டி, இப்ப சைட் டிஷ்ஷையும், கடையையும் கண்டு பிடிச்சிட்டியா, சந்தோஷமா?), என எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம், நான் அப்புறம் போன் செய்றேன்” என வைத்து விடுகிறோம்.

இப்படி, பேசும் போதே பொய்யையும் கண்டு பிடித்து விடுகிறார்கள் மனைவிகள்.
வேர் இஸ் தி பார்ட்டி டுனைட் (Where is the Party tonight) !! நண்பன் வீட்டில் !!!

இப்படியாக கணவன் கூறும் பொய்யை, எதிர்க்கும் சக்தியான மனைவியிடம் இருந்து தப்பிக்க, கணவர்கள் பெரும் பாடுதான் படுகிறார்கள்.

இப்போது தெரிகிறதா 'பொய் எதிர்ப்பு சக்தி' யார் என்று. ‘மனைவி’ தாங்க !!!

ஹரீஷ்

கருத்து சுதந்திரம் !!


சமீபத்தில் நான்  எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு பலர்,
‘இவர் என்ன தான் சொல்ல வருகிறார்’ என்று மிகக் கோவமாய் கேட்கிறார்கள்.  எனக்கோ ஒன்றும் புரியவில்லை, படிப்பவர்கள் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? என்று.

ஒன்று மட்டும் புரிகிறது. கருத்து சுதந்திரம் என்பது எழுதுபவருக்கு மட்டும் இல்லை. அதைப் படிப்பவருக்கும் இருக்கிறது என்பதை வாசகர்களின் இத்தகைய கருத்தால் நிரூபனமாகிறது.


கருத்துகள் கூறப்பட்டால், முதலில் அதை காது கொடுத்து கேட்க வேண்டும். பிறகு அதை ஏற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அண்ணாவின் மொழியில் மொழிவதாய் இருந்தால் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு”. மல்லிகை தோட்டம் உள்ளது கூவம் ஆற்றங்கரையா அல்லது காவிரி ஆற்றங்கரையா என்பதை அதன் மணம் உணர்த்தி விடும்.


சட்டசபையில் ஒரு கட்சிக்காரர் மறு கட்சிக்காரரை, “யோவ்! வெளிய வாய்யா ஒன்ன பாத்துக்கிறேன்“ என கோவமாய் உரக்க கூறினால், அதுவும் கருத்து சுதந்திரமே. ஆனால், அவை அவைக்குறிப்பில் இடம்பெறாது. ஏனென்றால் கருத்தை சொல்ல சுதந்திரம் இருக்கிற அதே வேளையில்; அவை, அவைக்குறிப்பில் இடம்பெற சில வரைமுறையும் இருக்கிறது.


பேச்சு சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பில் முக்கியமான ஒன்றாகும். அதாவது Right to Speech.
இந்த பேச்சுரிமை, குடியாட்சிக்கும் முடியாட்சிக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசங்களில் ஒன்று.


அரசாட்சி நடைபெறும் வளைகுடா நாடுகளில், அரசருக்கு எதிராய் ஏதாவது பேசுவதாகத் தெரிந்தால், அதை குற்றம் என்று, எதிர்த்து பேசியவரை, ஒட்டகம் வெட்டுகிற இடத்தில் ஒரு ஓரமாய் நிக்க வைத்து, ஹலால் செய்து விட்டு சென்று விடக் கூடும். ஏதோ கருத்து கந்தசாமி என ஜம்பம் விட்டு கொண்டு கண்ட இடத்திலேயும் கருத்து சொல்லி விட முடியாது. ஆக கருத்திற்கு பொருள் மட்டும் முக்கியம் இல்லை, இடமும் முக்கியம் எனத் தெரிகிறது.


குடியாட்சி நடக்கும் பல வளர்ந்த நாடுகளின் ஜனாதிபதிகளை, நேருக்கு நேர் நின்று சாதாரன அடித்தட்டு குடிமகன் கூட கேள்விகள் கேட்க முடியும். நிருபர்கள் கூட , ஜனாதிபதியிடம் தங்கள் காலனியின் அளவை பகிர்ந்து கொள்ள, 'இதோ பாருங்கள் !' என்று தூக்கி எறிந்து காட்ட முடியும் என்றால் எவ்வளவு சுதந்திரம் பாருங்களேன்.


நடிகையிடம் ஒரு விசிறி, “நீங்கள் ஒவர் ஆக்டிங் பண்றீங்க” என்றான். உடனே அந்த நடிகை தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அந்த நடிகையின் மேலாளர் ஓடி வந்து நடிகையை சாந்த படுத்தும் விதமாய், “மேடம் அவன் ஏதோ உளறுகிறான் மேடம். அவன் சொல்வதை நம்பாதீர்கள். நீங்கள் நடிப்பது ஒவர் ஆக்டிங் இல்லை மேடம். நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாக நடிக்கிறீர்கள், அதைத்தான் அந்த முட்டாள் அப்படி உளருகிறான்” என்கிறார். இதை நம்பி, அந்த நடிகை ப்ரொடியூஸரிடம், தான் அதிகமாக நடிப்பதாய் கூறி சம்பளம் கூட்டி கேட்டால். ப்ரொடியூஸரின் கருத்து, “சம்பளமும் உடுத்தும் துணியும் இன்வெர்ஸ்லி ப்ரொபோர்ஷனல் (Inversely Proportional), பரவாயில்லையா மேடம் ?” எனக் கூறக்கூடும்.
ஆக, எண்ணங்கள் பல விதம் அதை ஏற்பது அவரவர் விதம்.


நம் நண்பர் ஒருவர் அதிகமாக பேசமாட்டார். நண்பர்களிடமும் அதிகம் பேச மாட்டார், உறவினர்களிடமும் அப்படியே. நாங்களோ அவரை, “நீன் பேசவே மாட்டேன் என்கிறாய். ஏன், எங்களாண்ட பேச பயமா கீதா ?” என்று சும்மனாகாச்சுக்கும் கேலியெல்லாம் செய்வோம். அவரோ ஒரு புன்சிரிப்பையே பதிலாய் தருவார். சமீபத்தில் அந்த நண்பருக்கு திருமணம் முடிந்தது.
நாங்கள், முன் போல் அவரை கேலி கிண்டல் எல்லாம் செய்வதில்லை. அதான் கல்யாணம் ஆயிடுச்சே, நாமளே புரிஞ்சுக்க வேண்டாமா !! கல்யாணத்துக்கு முன்னாலேயே அதிகம் பேச மாட்டார்; இப்போ கல்யாணமும் வேறு முடிந்து விட்டது. பிறகு கேள்வி எதற்கு? கேலிதான் எதற்கு ?. வெந்த புன்னில் வேலைப் பாய்ச்சவா?


பல தரப்பட்ட மக்களிடம் அவர்களின் எண்ணங்களை சேகரித்து, அதன் விடையை பிரதிபலிப்பதுதான் கருத்துக் கணிப்பு.
இந்த கருத்து கணிப்பு, சில நேரங்களில் குடும்பங்களை பிரிக்க செய்யும் பிறகு சேர்க்கவும் செய்யும். இதற்கு மேல் இதைப் பற்றி விளக்கினால் அது அரசியல் ஆகி விடக் கூடும்.
கருத்து கணிப்பு என்பது, ஒரே ஆளிடம் பலமுறை கருத்து கேட்பது கிடையாது, அது ஓரவஞ்சனை. பல்வேறு தரப்பட்ட மக்களிடம் கேட்பது தான் கருத்து கணிப்பு. சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிரபல தினசரி நாளிதழில், ‘எந்த கட்சி தேர்தல் பிரசாரத்தில் முன்னிலை வகிக்கிறது?’ என்ற கருத்துக் கணிப்பு கேள்வி இருந்தது. அதில் குறிப்பிடப்பெற்ற ஒரு கட்சி குறைந்த சதவிகிதத்தில் இருந்தது. நம் நண்பரோ குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியின் நடிகரின் ரசிகர். நண்பர், இரவு முழுதும் கணினியில் உட்கார்ந்து பல முறை வோட்டளித்து அந்த குறிப்பிட்ட கட்சியின் சதவிகிதத்தை உயர்த்திக் கொண்டு இருந்தார்.
இதை, மறுநாள் எங்களிடம் கூறிக் கொண்டும் இருந்தார். நம் நண்பரில் மற்றொருவர் சற்றே டெக்கீ (Techie – Technology) ஆசாமி. அதே விஷயத்தை அவர் கணினியில் புகுந்து ஐந்தே நிமிடத்தில் மற்றொறு கட்சி பெறும்பான்மை வரும் விதமாய், ஜாவா(Java) எனும் ஜாலத்தினால் மாற்றி, மாயா ஜாலம் காட்டினார். இப்படி கருத்து கணிப்புகளும் சில நேரங்களில் ஒருவரே முடிவு செய்யும் விதமாய் மாறக் கூடுகிறது.
தேர்தல் என்பதே ஒரு கருத்து கணிப்பு தான். தேர்தலோ, சற்றே கட்டுக்கோப்பான போலீஸ் பாதுகாப்புடன், சில சமயம் அடியாட்கள் அராஜகத்துடனும் நடைபெறும் கருத்துக் கணிப்பு. என்ன ஒரு கூத்து என்றால் முன்பெல்லாம் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் சரியில்லை என்றால், ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு ஏதாவது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்போம். இப்போதோ, '49-ஓ' இருக்க பயமேன். சில சமயங்களில் நாம் வீட்டில் ஹாயாக டீ.வி பார்த்து கொண்டு இருந்தால் கூட போதும், நமது ஜனநாயக கடமையை நமக்கு பதில் ஆள் (மாறாட்டம்) வைத்து நிறைவேற்ற பல கட்சிகள் முண்டி அடித்து கொண்டு முன் வரும்.


பூத்துக்கு வந்த மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனாலும், தொகுதியின் வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பார். எல்லாம் கள்ள ஓட்டுகள்; நம் நண்பர்கள் கணினியில் செய்ததை நம் வேட்பாளர் பூத்தில் செய்கிறார். நம் நண்பர் அவருக்கு தெரிந்ததை செய்தார்; நம் வேட்பாளர் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்.
இப்படியாக தேர்தல் எனும் ஜனநாயகக் கடமை சிலரால் சீரழிக்கப்படுகிறது.


கருத்து கணிப்பு இருப்பது போல் கருத்து தினிப்பும் சில நேரங்களில் நடக்கக் கூடும். பெரும்பாலும் அரசியல் தலைவர்களுக்கு பொதுக் குழுக்களும், செயற் குழுக்களும் கருத்து தினிப்பு செய்ய உதவி புரியும்.


மனைவிக்கோ, “நான் சொன்னதை மீறி ஏதாச்சும் செஞ்சீங்கன்னு தெரிஞ்சிச்சு அவ்ளோதான். புரிஞ்சிச்சா?” என கணவனிடம் தங்கள் அன்பையும் கருத்தையும் தினிக்கிறார்கள். கணவர்களுக்கு தெரியும் அந்த ‘புரிஞ்சிச்சா?’ வின் அர்த்தம். அது புரியவில்லை என்றால், மறுநாள் மதியம் ஆபீசில், ஆம்படையாள் வைத்த, சற்றே உப்பு தூக்கலான சாம்பார் சாதம் சாப்பிடும் போது தானாக புரிந்து விடும்.


சமீபத்தில் விகடனில் அன்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார். தன் ஒரு வயது பையனை (சின்னஞ் சிறு குழந்தையை !!! ) வருங்காலத்தில் பைலட் ஆக்கப் போகிறாராம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று. இது வரும் காலத்தில் அந்த குழந்தை மேல் பெற்றொரின் கருத்து தினிப்பாக வராமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நம் குழந்தைகள் நம்மால் வந்தவர்களாக இருக்கலாம், ஆனாலும் நமக்காக வந்தவர்கள் இல்லை.


எங்கோ எதிலோ படித்தது, “சுதந்திரம் கொடுக்கப் பட்டால் கட்டுப்பட்டிருப்போம். கட்டுப்படுத்த நினைத்தால் நமது சுதந்திரத்தை நிரூபித்தே தீருவோம்”.
நமக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதை முறையாக சொல்வதிலும், கண்ணியமாக கையாள்வதும் நம்மிடம் தான் இருக்கிறது !!!


ஹரீஷ்

தமிழ் நன்றி !!

என்றாவது ஒரு நாள், துக்குளியோண்டு வாக்கியமாவது விகடனில் வந்தால் இவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். இப்போது ஒரு கட்டுரையே ஆன்லைன் யூத்புல் விகடனில் வந்ததால், மகிழ்ச்சியில் கூறுவது.

பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் சங்கரன் ஐயா அவர்களுக்கும், இருதயராசு ஐயா அவர்களுக்கும். தமிழையே ஆங்கிலத்தில் பாடம் எடுத்த ஆசிரியர் அவர்களுக்கும்.

ஆபீஸ் நூலகத்தில் இருந்து படிக்க 'ஆனந்த விகடன்' கொண்டு வந்த அன்னைக்கும். 'தினமணி' படித்து, எங்களையும் படிக்க தூண்டிய தந்தைக்கும்.

'பொன்னியின் செல்வன்' படித்து நிறைய பேசிய செந்தமிழ் நகர் பெரியம்மாவுக்கும், ஆர்த்தி அக்காவுக்கும்.

'சிவகாமியின் சபதம்' படிக்க செய்த பத்மா அத்தைக்கும்.

பல புத்தகங்களை தன் வீட்டு நூலகத்தில் இருந்து படிக்க ஊக்குவித்த திருநாவுக்கரசு பெரியப்பாவுக்கும்.

சிறந்த தமிழ் நாவல்கள் எழுதியுள்ள, தமிழின் அரும் பெரும் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் சி. எம். முத்து சித்தப்பாவிற்கும்.

'குறிஞ்சி மலர்' படிக்க சொல்லி தூண்டிய மீரா மாமிக்கும்.
'சுஜாதா' மேல் ஈர்ப்பு ஏற்படுத்திய முரளி மச்சானுக்கும்.

Last but not least.
அருமை நண்பர்கள் கவி தேசிகன், எமர்சன், ராம்குமார், டேனியல் போன்ற தமிழ் விரும்பும் நண்பர்கள், மேலும் இவர்கள் உள்ளே தமிழ் தீ பல நேரங்களில் காண முடிவது.
கவி தேசிகனின் கருத்தான கவிதைகள், எமர்சனின் எதார்த்த கவிதைகள், ராம்குமாரின் கடுமையான கவிதைகள், டேனியலின் தமிழ் சிரிப்பு திரைக்கதைகள், என இவர்கள் உள்ளே தமிழ் தீ பல நேரங்களில் காண முடிவது.

படிக்க வைத்தும், தங்கள் படைப்பால் பிரமிக்கவும் வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஹரீஷ்

தூக்கம் !!



நம்மில் பலரும் காலையில் தூக்கத்தில் விழித்தவுடன் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா.
வேறென்ன, மீண்டும் தூங்குவது தான்.
என்ன தான் இருந்தாலும் காலையில் பத்து பத்து நிமிடம் அலாரம் நகர்த்தி நகர்த்தி வைத்து தூங்கி எழுவது ஒரு சுகம் தான்.

மனிதன் தேவைகளாக கருதப்படுவது
மாசற்ற காற்று
நல்ல நீர்
உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இருப்பிடம்
இனிய இல்லாள்

இவற்றோடு, இரவில் நிம்மதியான உறக்கம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். தூக்கம் அந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்றும் அவசியமான ஒன்றும் கூட.
உண்ணாவிரதம், அருந்தா விரதம் மற்றும் பேசாமலே இருக்க மௌன விரதம் போன்ற பல விரதம் பார்த்திருக்கிறோம்.
ஆனாலும் முயற்சித்தாலும் முடியாத இரண்டு விரதங்கள் என்னவென்றால்.
சுவாசிக்கா விரதம்
தூங்கா விரதம்

இதில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன வெனில் இடைவெளி. ஆம்.

சுவாசம் இடைவெளி விட்டே நடக்கிறது. நாம் ஒரேயடியாக காற்றை உள்ளிருத்தி கொண்டே இருப்பதில்லை. சுவாசிப்பதும் ஒரு இடைவெளியில் தான் நடக்கிறது. காற்றை உள் இழுப்பது, உள்ளிருத்தி வைப்பது, பின் வெளியிடுவது இப்படி ஒரு நிமிடத்திற்குள் பல சுவாச வட்டம் நடைபெறுகிறது.
தூக்கமும் இடைவெளி விட்டுத்தான் வருகிறது. ஆனால் இடைவெளியோ ஒரு நாளுக்கும் மறு நாளுக்கும் இடையில் வருகிறது.

ஜெட் லேக் (Jet Lag) என்ற ஒரு சொல் இருக்கிறது. சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் விடும் பீட்டர்களில் இந்த வார்தையையும் அடிக்கடி நாம் கேட்கலாம். நாடு விட்டு நாடு வந்தவுடன் வருகின்ற ஒரு விஷயம்தான் ஜெட் லேக் (Jet Lag) இதற்கு இனையான தமிழில் உள்ள வார்த்தை என்னவென்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படி சொல்லலாம்.‘’காத்தாலே தூக்கமா கீதுபா’’ என்று.
அதாவது ‘காலை வேளையிலேயே தூக்கமாக வருகிறது. இரவு படுத்தால் தூக்கமே வர மாட்டேன் என்கிறது’ எனக் கூறும் விதமாய் நமது உடலில் உள்ள தூக்க கடிகாரம் மாறிவிடும்.
மேலும் ஒரு மாதத்திற்கு பிறகும் இப்படி ஜெட் லேக் (Jet Lag) இருப்பதாக மேலாளரிடம் கூறிக் கொண்டு தப்பிக்க பார்த்தால், மேலாளர் நம்மை அடுத்த டிக்கெட்டில் ஊர் போய் அங்கிருந்து வேலையை தொடரலாம் எனக் கூறினால், ஜெட் லேக் (Jet Lag) எல்லாம் உடனே ஓடிப் போகி விடலாம். பிறகு தூக்கம் சரியான நேரத்துக்கும் வர ஆரம்பிக்க கூடும்.

பத்து வயது சிறுவன் ஒருவனிடம் ஒரு நாள் என்பது எப்படி கணக்கிடப்பட்டு வருகிறது என்று அறிவியல் பூர்வமாக விளக்கி கொண்டு இருந்தோம்.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டால் ஒரு நாள் வருகிறது. இப்படி பூமி 365 முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது ஒரு வருடம் ஆகிறது. அப்படி ஒரு வருடம் கடக்கையில் உனக்கு ஒரு வயசு ஏறுது என்றோம்.
உடனே அந்த குழந்தை, ஏன் அங்கிள் ஒரு ஏரோப்ளேன் ஏறி, பூமி சுத்துற டைரெக்ஷன்-க்கு எதிர் டைரெக்ஷன்-இல் ஏரோப்ளேனை விட்டு இறங்காமல், பத்து வாட்டி 365 டைம்ஸ் சுற்றினால் மறுபடியும் எனக்கு ஒரு வயசு ஆயிடுமா அங்கிள், என்கிறான்.
நல்ல வேளை, இன்னும் இந்த குழந்தையிடம் மாம்பழத்திற்கு அண்ணன் விநாயகரும் தம்பி முருகனும் எப்படிப் போட்டியிட்டார்கள் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால், முருகன் தான் பூமியை சுற்றினாரே இன்னும் கொஞ்சம் சுற்றியிருந்தால் விநாயகனுக்கு அண்ணன் ஆக முருகன் ஆகியிருக்கலாம்ல என்று கேட்டாலும் கேட்பார்கள்.

இப்படி ஏடாகூடமாக கேட்கும் குழந்தைகளிடம் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள கை கொடுப்பது தூக்கம்.
அதெப்படி ?
தம்பி, ரொம்ப நேரமா படிச்சுகிட்டு இருக்க. காலையில் படிக்கலாம். இப்போ போய் தூங்கு, என்று நழுவி விடலாம்.
இப்போதாவது சொல்லுங்கள் தூக்கம் அவசியம்தானே.

ஐயன் வள்ளுவன் கூறுவது யாதெனின்.
      உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
      விழிப்பது போலும் பிறப்பு
அதாவது, இறப்பது தூங்குவதை போல; பிறப்பது தூங்கி விழிப்பது போல்.

தூக்கம் என்பது தற்காலிக இறப்பு. இறப்பு என்பது நிரந்தர தூக்கம் எனவும் கொள்ளலாம்.

வெற்றியாளர்கள் தூங்கும் நேரம் மிக குறைவு. உழைக்கும் நேரமே அதிகம்.


மனிதன் தூங்கும்போது விழி மூடி இருக்கும். அது போக தூங்காத நேரங்களில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதிலும் நாடாள்பவர்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம்.

இதையே வள்ளுவர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்.
      தூங்காமை கல்வி துனிவுடைமை இம்மூன்றும்
      நீங்கா நிலனாள் பவற்கு

இதில் வள்ளுவன் தெரிவிப்பது நாடாள்பவர்கள் தூங்கவே கூடாது என்பதை அல்ல, மாறாக தூங்காத போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே.

நமது மாணவர்கள் சிலர் இதில் சற்றே கைதேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே அறிந்த ஒரு வித்தை யாதெனின். ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொன்டிருப்பார். மாணவரின் கண்கள் ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் மாணவரோ தூங்கிக் கொண்டிருப்பார்.

இதைவிட ஒரு படி மேலான மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தூங்குவது விழிப்புணர்வு தூக்கம். அதாவது ஆசிரியர் பாடம் நடத்தையில் விழிகள் திறந்து கொண்டே தூங்கவும் செய்வார், ஆசிரியர் இவரைப் பார்க்கும் போது தலையை மேலும் கீழும் ஆட்டவும் செய்வார், இதுவரை ஆசிரியர் கூறியதை எல்லாம் புரிந்து கொண்டும் ஏற்றுக் கொண்டும் தலையாட்டுகிறாராம். இது விழிப்புணர்வான தூக்கம்.

வள்ளுவன் இன்னொரு குறளில்,
      தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
      தூங்காது செய்யும் வினை

என்கிறார். காலந் தாழ்த்துவதை காலந் தாழ்த்தலாம். சிலவற்றை விரைவில் செய்ய வேண்டும்.
இந்த குறளை ராத்திருடன் ரங்கன் கேட்டால் வேறு விதமாய் அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம். தூங்க வேண்டியவர்கள் தூங்கியவுடன் தான் தூங்காமல் தொழிலை திறம் பட செய்ய வேண்டும், எனவாக.

சக்தி தூக்கம் (Power Nap) என்ற ஒன்று சமீப காலங்களில் பேசப்பட்டு வருகிறது. சக்தி தூக்கம் என்றால் ஏதோ இப்பொது எல்லாம் மின்சார சக்தி சரி வர வராமல் நம்மை பாடு படுத்தி, அது போய் தூங்கி விடுகிறதே அது தான் சக்தி தூக்கம் போல, என்று தவறாக எண்ணிக் கொள்ளவேண்டாம்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தர ஆரம்பித்ததில் இருந்து முதியோர் இறப்பு சதவிகிதம் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. மேலும் முதியோர் இல்லத்தில் சேரும் முதியவர் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த பெறுமை எல்லாம் அறிஞர் அண்ணாவின் கனவுக்கும் கலைஞரின் செயல் வடிவத்திற்க்கும் சேர வேண்டியது.

அப்படியே சென்ற மூன்று வருடங்களில், ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பிள்ளை பெற்றவர்கள் எத்தனை பேர் அடுத்த பிள்ளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வெளி வந்தால் மின்சாரம் தூங்கியதால் வந்ததின் விளைவுகள் தெரியலாம். இதற்கு மேல் நம் வாயை பிடுங்காதீர்கள்.

சக்தி தூக்கம் என்றால் சிறிது நேர தூக்கம்.
இப்படிப் பட்ட சக்தி தூக்கம் என்பது 20-30 நிமிடம் பகல் வேளையில் தூங்குவது. இப்படி பட்ட சக்தி தூக்கத்தினால் மூளை மீண்டும் புத்துணர்வு பெற்று உழைக்க ஆரம்பிக்கும்.

தூங்காமல் தான் இருக்க முடியாது. தூங்கி கொண்டே இருப்பவர்கள் காவியத்தில் இருக்கிறார்கள். கும்பகர்ணன். விட்டால் பல வருடங்கள் தூங்கி கொண்டே இருப்பானாம். கும்பகர்ணனை எழுப்ப மிகக் கஷ்டப்பட்டு தான் எழுப்ப வேண்டுமாம். அவர் நம் இனம் போலும்.

தூக்கத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்கள். நல்ல கேள்வி கேட்டீர்கள் போங்கள். முதல்வர்களுக்கு துனை முதல்வர்கள் இருக்கையில் கும்பகர்ணனுக்கு நிகழ் காலத்தில் துனை கும்பகர்ணன் இருக்கக் கூடாதா என்ன.

படுக்கையில் பஞ்சு மெத்தை இருப்பதாலும், பஞ்சு மெத்தைக்குள்ளே பணக் கட்டுகள் இருப்பதாலும் நல்ல தூக்கம் வந்து விடாது.

அசூயை இன்றி
சிந்தனை சரியாய்

தீயவை நினையாமல்
நல்லவை நினைத்து

பெரியோரை மதித்து
சிரியோரை மகிழ்வித்து

உடல் உளைக்க
பெற்ற அறிவும் உளைக்க
அதில் களைக்க

பாயில் படுத்தவுடனே
பொத்துக் கொண்டு
நாடி வரும்
நிம்மதி உறக்கம் !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்